Sunday, 6 September 2009

இந்தத் தொழிலில் நம்பிக்கையை ஏற்படுத்தாத எதனையும் படைப்பாக மாற்றக்கூடாது'-ஆல்ப்ரட் ஹிட்ச்காக் நேர்காணல்



பீட்டர் போக்தனோவிச் (1963)

ஒரு போதும் ரசிகர்களோடு சேர்ந்து உங்கள் படங்களை நீங்கள் பார்ப்பதில்லை. அவர்கள் திகிலில் வீறிடுவதைக் கேட்கும் வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுகிறீர்கள், இல்லையா?


Alfred Hitchcockஇல்லை. படத்தை எடுக்கும்போதே அந்த வீறீடலை நான் கேட்கிறேன்.

அமெரிக்க சினிமா மிக முக்கியமான ஒன்றாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆமாம், உலகெங்கும் அமெரிக்காவுக்கென்று ஒரு படத்தை நாங்கள் எடுக்கும்போது அதன்போக்கில் அது உலகிலுள்ள அனைவருக்குமான படமாக ஆகிவிடுகிறது. காரணம் அமெரிக்கா பல வெளிநாட்டவர்களால் நிறைந்தது. அது பலவகையான குடியேறிகளால் நிறைந்தது. அது எங்களை வேறொரு புள்ளிக்கு/நிலைக்கு கொண்டு வருகிறது.

“ஹாலிவுட்” படங்கள் எனும்போது அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் கேட்கிறேன், “அப்படங்கள் எங்கே உருக்கொள்கின்றன?” இந்த அறையைப் பாருங்கள் - இதன் ஜன்னல்களைத் தாண்டி வெளியே நீங்கள் பார்க்க முடியாது. இது லண்டனில் இதே போன்றதொரு ஹோட்டல் அறையாகவும் இருக்கலாம், அல்லது நீங்கள் விரும்பும் உலகின் வேறெந்த நகரத்திலும். இங்குதான் அந்தப் படங்களை நாங்கள் காகிதத்தில் உருவாக்குகிறோம். எப்போது நாங்கள் வெளியே செல்கிறோம்? படமாக்கத் தோதான இடங்களைத் தேடி வேண்டுமானால் வெளியே போகிறோம்; பிறகு நாங்கள் எங்கள் வேலையைச் செய்வது எங்கே? அதன் பெரிய கதவுகள் அடைக்கப்பட்டிருக்க நாங்கள் ஒரு அரங்கினுள் இருக்கிறோம்; ஒரு நிலக்கரி சுரங்கத்தினுள் இருக்கிறோம்.

வெளியே என்ன சீதோஷ்ணம் நிலவுகிறது என்பதுகூட எங்களுக்குத் தெரிவதில்லை. எங்கள் படத்தினுள் நாங்கள் ஆழ்ந்துவிடுகிறோம். நாங்கள் உருவாக்கும் ஒரு விஷயத்துடன் ஒன்றிவிடுகிறோம். இதனால் தான் இங்கே ‘இடம்’ பற்றிப் பேசுவது அவ்வளவு முட்டாள்த்தனமான ஒரு விஷயமாகிவிடுகிறது. ‘ஹாலிவுட்’ இந்த வார்த்தையில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ‘ஹாலிவுட்டில் பணிபுரிவதை ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்?’ எனக்கேட்டால் நான் சொல்வேன். இரவுச் சாப்பாட்டிற்கு ஆறு மணிக்கு என்னால் வீட்டுக்குச் சென்றுவிட முடிகிறது.

“தூய சினிமா” (Pure cinema) என்பதை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்?

தூய சினிமா என்பது ஒன்றையொன்று இட்டு நிரப்புவதான பல துண்டு சினிமாக்கள் ஒன்று சேர்ந்தது. பல இசைக் குறிப்புகள் சேர்ந்து ஒரு இனிய இசையைத் தருவது போல. வெட்டி ஒட்டும் உத்தியினால் விளையும் முக்கியப் பயன்கள் இரண்டு. ஒன்று கருத்தாக்கத்தை உருவாக்குவது. இரண்டாவது வன்முறை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டுவது. உதாரணமாக Rear window படத்தின் கடைசியில் ஜிம்மி ஸ்டூவர்ட் வெளியே தூக்கியெறியப்படும்போது அக்காட்சியை பாதங்கள், கால்கள், கைகள், தலைகள் என துண்டுத் துண்டாகப் படம் பிடித்தேன். முழுக்க முழுக்க வெட்டி ஒட்டல். அதையே முழுமையும் தொலைவிலிருந்தும் படம் பிடித்தேன். இரண்டுக்குமிடையே எந்தத் தொடர்புமில்லை. எப்போதும் இல்லை.

மதுவிடுதிச் சண்டைகள் அல்லது மேற்குப் பகுதிகளில் அவர்கள் செய்வது எதுவானாலும் பருமனான ஒருவனை அடித்து வீழ்த்தும்போது அல்லது மேசை உடைய எதிரே அமர்ந்திருப்பவனை தாக்கும்போது என (எப்போதும் அவர்கள் மதுவிடுதிகளில் மேசையை உடைப்பது வழக்கம்) எல்லாமே தொலைவிலிருந்தே படம் பிடிக்கப்படுகின்றன. ஆனால் வெட்டி ஒட்டும் உத்தியில் படமாக்கப்பட்டால் இக்காட்சிகள் பெரிதும் வலுவுடன் அமையும். காரணம் ரசிகர்களை அது காட்சியில் அதிகம் ஈடுபடுத்துகிறது. இதுதான் வெட்டி ஒட்டும் உத்தியின் ரகசியம். மற்றொன்று கற்பனைத் தோற்றத்தையும் தனிமனிதச் சிந்தனையோட்டத்தையும் அருகருகே வைப்பது. ஒரு மனிதன் எதையோ பார்ப்பதாகக் காட்டுகிறீர்கள். பிறகு அவன் எதைப் பார்க்கிறான் என்று காட்டுகிறீர்கள். திரும்பவும் அம்மனிதனைக் காட்டுகிறீர்கள். இப்போது அவனைப் பலவிதங்களில் எதிர்வினையாற்றச் செய்ய முடியும். அவனைக் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பார்க்கச் செய்யலாம், பிறகு பேசாமலே மற்றொன்றைப் பார்க்கச் செய்யலாம், அவன் சிந்தனையோட்டத்தை நீங்கள் காட்டலாம்.

பொருட்களை ஒப்பிட்டுக் காட்டலாம். எந்த வழியில் சென்றாலும் உங்களுக்குப் பரிபூரண சுதந்திரம். நான் சொல்வேன், பிம்பங்களை வெட்டுவதற்கும் அவற்றை ஒருங்கிணைத்துக் காட்சியாக்குவதற்கும் எல்லையே இல்லை. The birds-ல் வரும் அந்தப் பார்வையற்ற மனிதனைப் போல - கேமரா மிக நெருக்கத்தில் செல்கிறது. தொடர்பற்ற துண்டு துண்டான எகிறல்கள் கிட்டத்தட்ட மூச்சையே நிறுத்திவிடுகின்றன இல்லையா? மூச்சு நின்று நின்று வருகிறது. ஆமாம், இளம் இயக்குநர்கள் எப்போதும் இது போன்ற எண்ணத்தோடே வருகிறார்கள், ‘கேமரா ஒரு நபரைப் போல இயங்கட்டும், ஒரு ஆளைப் போல அது நகரட்டும், ஒரு மனிதனை நீங்கள் கண்ணாடியின் முன் நிறுத்துகிறீர்கள் பிறகு அவனைப் பார்க்கிறீர்கள்’. இது பெரும் தவறு. பாப் மான்ட்காமரி அதை
Lady in the lake-ல் செய்தார். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. உண்மையில் நீங்கள் செய்வதென்ன? அது யாரென்று ரசிகர்களுக்குக் காட்டாமல் மறைக்கிறீர்கள்? எதற்காக? நீங்கள் செய்வதெல்லாம் அதுதான். அது யாரென்று ஏன் காட்டக்கூடாது?

படப்பிடிப்பின் போது எப்படி வேலை செய்கிறீர்கள்?

ஒருபோதும் நான் கேமரா வழியாகப் பார்ப்பது கிடையாது, உங்களுக்குத் தெரியும். எனக்கு என்ன தேவை என்பதை அறியுமளவுக்கு என் கேமராமேன் என்னைப் புரிந்து வைத்திருக்கிறார். சந்தேகம் ஏற்படும்போது ஒரு செவ்வகம் வரைந்து அதற்குள் காட்சியை வரைந்து காட்டுவேன். அதில் முக்கிய விஷயம் என்னவென்றால் நாம் பணிபுரிவது இரு பரிமாண ஊடகத்தில், இதை மறக்கக் கூடாது. ஒரு செவ்வகத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். அதை நிரப்புங்கள். அதை நிரப்புவதற்கான விஷயங்களை பொருத்தமுடன் ஒன்றமையுங்கள். இதற்கு கேமரா வழியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. காட்சியை உருவாக்கும்போது உருவங்களைச் சுற்றிலும் அவற்றின் தலைகளுக்கு மேலும் இடம், வெளி இவை இருப்பது எனக்குப் பிடிக்காது என்பது கேமராமேனுக்குத் தெரியும்.

அவை அங்கு தேவையில்லை என நான் நினைக்கிறேன். அது பத்திரிகையாளன் ஒருவன் புகைப்படமொன்றை எடுத்து அதன் முக்கிய அம்சம் மட்டும் தெரியும் வகையில் அதைவெட்டி ஒழுங்கு படுத்துவது போன்றது. என்னுடைய மாறாத உத்தரவு அது என்பது அவர்களுக்குத் தெரியும். நான் சொன்னாலொழிய அவர்கள் உருவங்களைச் சுற்றி வெற்று வெளிகள் இருக்கும்படி அமைப்பதில்லை. வெற்றிடம் தேவைப்படுகிறதென்றால் வேண்டாம் என்பேன்.

இப்போது, நான் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும்போது உண்மையில் அங்கே இருப்பதில்லை. நடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு காட்சி எப்படி நடிக்கப்படுகிறது எனப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அல்லது அவர்களை வெறுமனே நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் சினிமாத் திரையையே பார்க்கிறேன். படப்பிடிப்புத் தளமோ குறுக்கும் மறுக்கும் நடக்கும் ஆட்களோ என் கவனத்தில் இருப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால் நான் திரையின் புவியியலை கவனித்தபடியிருக்கிறேன். திரையைப்பற்றி மட்டுமே நான் சிந்திக்கிறேன். பெரும்பாலான இயக்குனர்கள் சொல்வது, ‘அவர் அந்தக் கதவு வழி உள்ளே வரவேண்டும். அதனால் அவர் அங்கிருந்து இங்கு நடந்து செல்ல வேண்டும்' அது மோசமானது, உப்புச்சப்பில்லாதது. அது மட்டுமில்லை. அது காட்சியை மிக வெறுமையானதாகவும், தளர்வானதாகவும் செய்துவிடுகிறது. நான் சொல்வேன், ‘அவர் ஒரு மனநிலையில் இருந்தால் - எந்த மனநிலையானாலும் சரி - அவர் நடந்து செல்வதை நெருக்கத்தில் (Close-up) காட்டுங்கள். ஆனால் அவரது மனநிலை திரையில் பதிந்திருக்க வேண்டும். ‘நமக்குத் தொலைவு பற்றி ஆர்வமில்லை. எப்படி அவர் அறையைக் கடந்து சென்றார் என்பது பற்றி அக்கறையில்லை. அவரது மனநிலை என்ன? திரையைப் பற்றி மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும். படப்பிடிப்புத்தளம் அல்லது ஸ்டூடியோ அல்லது அது மாதிரியான எதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்கக்கூடாது.

நடிகர்களுடன் நீங்கள் வேலை செய்யும் முறை எப்படி?

அவர்களை நான் இயக்குவதில்லை. நான் அவர்களோடு பேசுகிறேன். காட்சி என்ன, காட்சியின் நோக்கம் என்ன, அவர்கள் ஏன் சில விஷயங்களைச் செய்கிறார்கள் காரணம் அவை கதையுடன் தொடர்பு கொண்டுள்ளன, காட்சியுடன் அல்ல-என்பது பற்றியெல்லாம் விளக்குகிறேன். முழுக் காட்சியும் கதையுடன் தொடர்பு கொண்டது. ஆனால் அந்தச் சிறு பார்வை கதைக்கு ஏதோவொன்றைத் தருகிறது. அந்தப் பெண் கிம் நோவக்கிடம் நான் விளக்க முற்பட்டதுபோல, ‘உன் முகத்தில் உணர்ச்சிகள் ஏராளம். அதில் எதுவும் எனக்குத் தேவையில்லை - பார்வையாளருக்கு நாங்கள் எதைச் சொல்ல விரும்புகிறோமோ, அதாவது நீ என்ன நினைக்கிறாயோ - அது மட்டும் முகத்தில் தெரிந்தால் போதும்.’ மேலும் நான் விளக்கினேன், ‘உன் முகத்தில் தேவையற்ற உணர்ச்சிகள் நிறைந்திருப்பது ஒரு காகிதத்தை எடுத்து இடைவெளியில்லாமல் அதில் கிறுக்குவதைப் போன்றது. யாராவது வாசிக்கும் பொருட்டு அதில் ஒரு வாக்கியத்தை எழுத விரும்புகிறாய். முழுக்கக் கிறுக்கல்கள் நிறைந்த தாளில் எழுதப்பட்ட அந்த வாக்கியத்தை யாராலும் வாசிக்க முடியாது.

கிறுக்கல்கள் இல்லாத வெறும் காகிதத்தில் எழுதினால் அதை வாசிப்பது சுலபம். நாங்கள் விரும்பும் உணர்ச்சியைக் காட்ட வேண்டுமானால் உன் முகம் வெற்றுக் காகிதமாய் இருக்க வேண்டும்.” Birds ஐ எடுத்துக்கொள்ளுங்கள். ஹெட்ரனின் முகத்தில் தேவையற்ற உணர்ச்சிகள் எதுவுமிருக்காது. ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்பாடும் ஒரு விஷயத்தைச் சொல்கிறது. ‘உங்களுக்கு என்ன வேண்டும் சார்?’ எனக் கேட்கும்போது அவரிடம் வெளிப்படும் அந்த நுட்பமான சிறுபுன்னகை கூட ஒரு விஷயத்தை உணர்த்தி விடுகிறது. அவரது ஒரு பார்வை ‘இவனிடம் கொஞ்சம் கலாட்டா செய்ய வேண்டும்’ என்கிறது. இதுதான் அதிலுள்ள சிக்கனம்.

நீங்கள் படப்பிடிப்புத் தளத்தில் கால் வைக்கும் முன்பே அதாவது ஸ்கிரிப்ட் தயாரானதுமே உங்கள் படங்கள் முடிக்கப்பட்டுவிடுவதாகச் சொல்கிறீர்கள். திரைப்பட எழுத்தாளர்களுடன் நீங்கள் பணியாற்றும் விதம் எப்படி?

ஆரம்ப காலத்தில் அதாவது இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கதைக் கருவை அல்லது கதையை உருவாக்குபவரோடு சேர்ந்து செம்மை செய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். வாரக் கணக்கில் இந்த வேலை நடக்கும். அது முழுக் கதையாக காட்சிப் பகுதிகள் கூட விவரிக்கப்பட்டு லாங் ஷாட் அல்லது க்ளோஸ்-அப் என இவற்றை மட்டும் முடிவு செய்ய மாட்டோம். அதில் எல்லாமும், எல்லா விவரங்களும் இருக்கும். பிறகு அதை பெரிய எழுத்தாளர் ஒருவரிடம் தந்து வசனம் எழுதச் சொல்வேன். வசனம் கிடைத்ததும் காட்சிகளைத் தொடராக அமைப்பேன். இப்படி படம் ஒரு கதையாக காகிதத்தில் உருவாகிறது. துவக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சியாக படம் அதில் விவரிக்கப்படுகிறது. சில நேரம் வரையப்பட்ட படங்களுடன் சில நேரம் படங்கள் இன்றி. அமெரிக்காவுக்கு வந்தபின் இந்த முறையைக் கைவிட்டுவிட்டேன். அமெரிக்க திரைப்பட எழுத்தாளர்களுக்கு இந்த முறை ஒத்துவரவில்லை. அதை நான் இப்போது எழுத்தாளருடன் வாய் மொழியாகச் செய்கிறேன். திருத்தங்களையும் மாற்றங்களையும் பிற்பாடு செய்கிறேன். எழுத்தாளருடன் சேர்ந்து பல வாரங்களுக்கு நான் வேலை செய்கிறேன். அவர் குறிப்புகள் எடுத்துக் கொள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளர்களுக்கும் படத்தை விளக்குகிறேன்.

Marine படத்தின் வடிவமைப்பு முழுதும் முடிந்துவிட்டது. வசனம் மட்டும் இல்லை. வசனம் எழுதும் முன் மூன்றில் இரண்டு பங்கு வேலையைச் செய்கிறேன். வசனம் எழுதிய பின் முன்றில் ஒரு பங்கு வேலை. அவர் எழுதும் வார்த்தைகளைத் தவிர சொந்தமாக அவர் சேர்க்கும் விஷயம் எதையும் நான் படமாக்க மாட்டேன். நான் குறிப்பிடுவது ஒரு விஷயத்தை சினிமா முறையில் சொல்வதை. அது எப்படி அந்த எழுத்தாளருக்குத் தெரியும். On North by Northwest படத்தில் எர்னி லீமன் ஒரு வருடத்துக்கு அலுவலகத்தில் இருந்து என்னை வெளியே விடவில்லை. ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு காட்சிப்பகுதியிலும் அவரோடு நான் இருந்தேன். காரணம் அது அவருடைய சரக்கு அல்ல.

சிறுவயதில் உங்கள் தந்தை உங்களை சிறையில் அடைத்ததாக கேள்விப்படுகிறோம். உங்களுடைய வளர்ச்சியில் அதன் பாதிப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இருக்கலாம். ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்து என்னை போலீஸ் அதிகாரியிடம் அனுப்பி வைத்தார். அந்தக் குறிப்பைப் படித்த அதிகாரி ஒரு சிறை அறைக்குள் என்னை ஐந்து நிமிடம் பூட்டி வைத்தார். பிறகு ‘உன்னை மாதிரி அடங்காத பிள்ளைகளுக்கு இப்படித் தான் செய்வோம்’ என்று சொல்லி விட்டுவிட்டார். இந்நிகழ்ச்சி அப்போது என்னில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது என்று தெரியவில்லை. உளவியல்படி, சில விஷயங்களின் மூலத்தைக் கண்டுபிடிக்கும்போது அது நமக்குள் இருக்கும் பலவற்றையும் வெளியேற்றிவிடுகிறது. இயற்கையாக போலீஸிடம் இருக்கும் பயத்தை அது என்னிடமிருந்து அகற்றவில்லை என்றே நினைக்கிறேன்.

உங்களது படைப்புகளில் சேசு சபைப் பள்ளிகளில் நீங்கள் பயின்றது எந்த வகையிலேனும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதா?

ஒன்று சேர்த்தல், கட்டுப்படுத்துதல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஆய்ந்து நோக்குதல் ஆகியவற்றை சேசு சபையினர் கற்பித்தனர். அவர்களது கல்விமுறை மிகவும் கறாரானது. ஒழுங்கு என்பதும் இதிலிருந்து வரும் ஒரு விஷயம் என்றே நான் நினைக்கிறேன். என்னுடைய ஒழுங்குத்தன்மை தொடர்ச்சியாக அமையாதது என்ற போதும், பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதில் ஒரு மின் பொறியியல் நிறுவனத்தில் மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்தேன். மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிறைய வந்தபடி இருக்கும். சோம்பேறித்தனத்தினால் அவற்றையெல்லாம் அப்படியே கோபுரம் போல அடுக்கி வைத்திருப்பேன். ‘இதையெல்லாம் உடனே பார்த்து முடிக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொள்வேன். பிறகு அந்தப் பணிகளை குறையின்றி செய்தும் முடித்துவிடுவேன். ஒரே நாளில் இவ்வளவு அதிக வேலையை செய்து முடித்ததற்கு எனக்கு பாராட்டு வேறு கிடைக்கும். பதில்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வரத் தொடங்கும் வரை நான் இப்படித்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். வேலையை இந்த முறையில் செய்வதையே நான் விரும்புகிறேன். சில எழுத்தாளர்கள் நாள் முழுக்க வேலை செய்வதை விரும்புகிறார்கள். அவர்கள் அதிக திறமைசாலிகள். நான் அப்படியில்லை. நான் சொல்வேன், ‘சற்று நேரத்துக்கு வேலையை ஒதுக்கி வைப்போம், விளையாடுவோம்’ பிறகு மறுபடியும் வேலைக்குள் இறங்குவோம். நிச்சயம் சேசு சபையினர் இதை சொல்லிக் கொடுக்கவில்லை. அப்போது மதம் என்மீது செலுத்திய பாதிப்பு என்னவென்றால் பயம்தான். ஆனால் இப்போது மதம் சார்ந்த பயத்திலிருந்து நான் வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன். அக் காலகட்டத்தில் ஒருவர் கடைபிடிக்க நேர்ந்த கறாரான ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும்படிக்கு சேசு சபைக் கல்வி என்னை பாதிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

The Thirty-Nine Steps உங்களுக்குப் பிடித்தமான படங்களில் ஒன்றா?

ஆமாம் மிகவும் பிடித்தது
The Thirty-Nine Steps-ஐப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தது அந்த திடீர் திருப்பங்களும் ஒரு சூழ்நிலையில் இருந்து மற்றொன்றுக்கு மிக வேகமாகத் தாவுவதும்தான். கையில் பாதி விலங்குடன் போலீஸ் ஸ்டேஷனின் ஜன்னல் வழியே டோனட் குதிப்பதும் உடனே சால்வேஷன் ஆர்மி வாத்தியக் குழுவில் கலந்து விடுவதும் குறுக்குச் சந்து ஒன்றில் ஓடி ஒரு அறைக்குள் நுழைவதும். ‘நல்லவேளை நீங்கள் வந்தீர்கள் மிஸ்டர்...’ என்று அவரை அவர்கள் மேடைமீது அமர வைக்கிறார்கள். இரண்டு நபர்களுடன் ஒரு பெண் வருகிறாள். ஒரு காரில் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறாள். ஆனால் உண்மையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அல்ல. அவர்கள் இருவரும் உளவாளிகள். திருப்பங்கள் ஏற்படும் வேகம். அதுதான் அதில் முக்கியமானது. மீண்டும் நான் The Thirty-Nine Steps-ஐ எடுத்தால் பழையபடியே தான் எடுப்பேன். ஆனால் அது அதிகம் வேலை வாங்குவது; தொடர்ந்து ஒரு உத்தியை அடுத்து மற்றதை நீங்கள் கையாள வேண்டும், மிக வேகமாக.

Rope (1948)

தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் அதிக பரிசோதனைகள் செய்து பார்த்த படம் Rope என நினைக்கிறீர்களா?

மேடை நாடகத்தை நகரக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டி தூய சினிமா என்கிற சித்தாந்தத்தைக் கைவிட்ட வகையில் மட்டும் நீங்கள் சொல்வது சரி. தடையற்ற கேமரா ஓட்டத்துடன் நிஜமான கால அளவையில் எவ்வித வெட்டுதலும் அற்ற தொடர்ச்சியான நடிப்பு அது. அதில் தடையில்லாத கேமரா கதையாடலும் இருக்க வேண்டுமென நான் நினைத்தேன். தொழில் நுட்ப ரீதியில் அது தவறு. காரணம் அதற்காக தூய சினிமா கைவிடப்பட்டது. ஆனால் அறை ஒன்றுக்குள் மேடை நாடகமொன்றை எடுக்கும் போது அதை வெட்டுவது மிகவும் சிரமமே.

Psycho-வில் இருந்தது போன்ற உங்கள் வேடிக்கையான அணுகுதல் Rope-ல் இல்லை?

இல்லை. இங்கு குற்றத்தின் தன்மை மிகவும் பயங்கரமானது அவ்வகையில் நகைச்சுவைக்கு இங்கு இடமில்லை.

இந்தப் படம் வெற்றிபெறவில்லை. ஆனால் அனேக பிரெஞ்ச் விமரிசகர்கள் இதை உங்களது சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதுவது ஏன்?

மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்ற கோணத்தில் பார்க்காமல் படம் என்னவாக இருக்கிறது என்று மட்டுமே அவர்கள் பார்த்தார்கள். இது ஹிட்ச்காக்கின் வரலாற்று காலப்படம். படத்தின் இறுதிக்கு முன்புவரை ஒரு திகில் படம் என்ற கோணத்தில் எடுக்கப்படாத படம். ஒரு ஹாலிவுட் விமர்சகர் எழுதியது நினைவுக்கு வருகிறது, ‘படத்தின் முதல் திகிலைப் பார்க்க நாம் 105 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.’ அவர்கள் எதையோ எதிர்பார்த்துச் சென்றார்கள். அது அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதுதான் படத்தின் முக்கியமான குறைபாடு. நடிகர் தேர்வும் சரியில்லை. அது ஒரு வழக்கமான காதல் கதை. பெர்க்மான் ஜோ காட்டனிடம் காதல் வயப்படுகிறார். ஜோ காட்டன் குற்றவாளியாக கப்பலில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட பெர்க்மான் அவரை பின்தொடர்கிறார். காதலுக்காக காதலி தரம் தாழ்ந்து போகிறாள். அதுதான் இங்கே பிரதானம். காட்டனின் தேர்வு சரியாக அமையவில்லை. நான் பர்ட் லங்காஸ்டர் அப்பாத்திரத்தை ஏற்க வேண்டுமென விரும்பினேன். அது சமரசத்திற்குள்ளான நடிகர் தேர்வு. ஒருவேளை தவறுதலாகவோ என்னவோ நான் ஓரிடத்தில் நிலையாக இல்லாத கேமராவைப் பயன்படுத்தினேன். இது ஒரு திகில் படம் இல்லை யென்பதை அது உறுதிசெய்தது. கேமரா சரளமாக நகர்ந்தது.

இந்தப் படத்தை நீங்கள் விரும்பாதது ஏன்?

பாத்திரங்களில் ஒன்று யதார்த்தமானதாக இல்லை. ஜேன் வைமான் பாத்திரம் ஒன்றுமறியாத ஒரு பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. என்னால் அவரை மாற்றவும் முடியவில்லை. படத்தின் திகில் அம்சம் வலுவானதாக இல்லை. இந்த திகில் தன்மை டயட்ரிச் மற்றும் அவரது கூட்டாளியிடமிருந்து வந்தது. இருவரும் வில்லன்கள். அவர்களிடம் திகில் ஏதும் இருக்கவில்லை, காரணம் அவர்கள் பயந்து போயிருந்தார்கள். ஆக, படத்தில் என்னதான் இருந்தது? படத்தில் திகில் முழுவதுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மதிப்பீடுகள் பற்றிக் குழப்பமிருந்தது. ஆரம்ப ஃப்ளாஷ்பேக் காட்சி ஒரு பொய் என மக்கள் குறை சொன்னார்கள். ஏன் ஒரு மனிதன் பொய் சொல்லக் கூடாது? எனக்கு புரியவில்லை. ஆனால் மக்கள் சொன்னார்கள். ‘ஓ... அந்த ஃப்ளாஷ்பேக்கில் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்.’ அவனொரு பொய்யனாக இருக்கக்கூடாதா? மரபை உடைக்கும் ஒவ்வொரு முறையும் அது பிரச்சினையாகத்தான் ஆகிவிடுகிறது.

Dial.M for Murder (1954)

Dial.M for Murder படத்தை எடுக்க முக்கியக் காரணம் என்ன?

நான் மறைவிடம் தேடி ஓடிக் கொண்டிருந்தேன். ஊக்கமும் க்ரியா சக்தியும் வறண்டுபோன நிலையில் தொடர்ந்து பணியாற்றுவதைத்தான் மறைவிடம் தேடி ஓடுவது என்றேன். என்னிடமிருந்து அதிக படைப்புத்திறனை வேண்டாத ஓரளவு வெற்றிகரமான நாடகத்தை எடுத்துக்கொண்டு படமாக்குவது ஒப்புக்குப் பணி செய்தால் போதும். இந்தத் தொழிலில் நம்பிக்கையை ஏற்படுத்தாத எதனையும் படைப்பாக மாற்றக்கூடாது. ஒரு படம் எடுக்க விரும்பினால் - அப்போது நான் வார்னர்ஸில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்தேன் - அகலக்கால் வைக்கக் கூடாது. ஒரு நாடகத்தை தேர்ந்தெடுத்து ஒரு சுமாரான படமாக எடுக்க வேண்டும் - மக்கள் பேசிக் கொண்டிருப்பதான காட்சிகளாக.

இது சாதாரண தொழில் திறமை. ஆனால் திரைப்படமாக்கப்பட்ட நாடகத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் உண்டு. சிலர் நாடகத்தை திரைக்கென விரித்துக் கொள்வதாக நான் நினைக்கிறேன். அது பெரும் தவறு. நாடகம் என்பது மேடையின் எல்லைகளுக்குள்ளாக தன்னை சுருக்கிக்கொள்வது. அதையேதான் நாடகாசிரியர் நாடகத் தன்மையுடன் பயன்படுத்திக் கொள்கிறார். இப்போது நீங்கள் புதிதாகப் பின்னிய ஸ்வெட்டர் ஒன்றை பிரிக்கிறீர்கள். பிரித்த பின் அங்கே ஒன்றுமில்லை.

Dial.M for Murder-ல் என்னால் எவ்வளவுக் குறைவாக முடியுமோ அவ்வளவுதான் (நாடகத்துக்கு) வெளியே சென்றேன். உண்மையிலேயே ஓடுபாவிய ஒரு தரை, கதவுக்கடியில் விரிசல், பாதத்தின் நிழல் ஆகிய நாடகத்தின் பாகமாகிய அம்சங்கள் விட்டுப் போகாமல் பார்த்துக்கொண்டேன். மற்றபடி நீங்கள் (நாடகத்துக்கு) வெளியே சென்றால் உங்களுக்குக் கிடைப்பது என்ன? வெளியே ஒரு டாக்ஸி வருகிறது. கதவு திறக்கிறது. அவர்கள் இறங்கி உள்ளே வருகிறார்கள்.

Vertigo (1958)

Vertigo மாயத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான போராட்டம் இல்லையா?

உண்மைதான். அதன் ஆதாரச் சூழல் எனக்கு ஆர்வமூட்டியது. காரணம் அது பாலுறவுடனான ஒப்புமைகளை அதிகம் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணை குஷிப்படுத்த ஸ்டூவர்ட் மேற்கொள்ளும் முயற்சிகள், சினிமாப்பூர்வமாக, ஆடை அணிவிப்பதற்கு பதிலாக அவளது ஆடைகளை அவிழ்க்க முயற்சிப்பது போன்றதாக இருந்தது. அந்த மற்றொரு பெண்ணை தன் மனதிலிருந்து அவரால் வெளியேற்ற முடிவதில்லை. புத்தகத்தில் அந்த இருவரும் ஒரே பெண் தான் எனக் கடைசியில்தான் தெரியவரும். இக்கதையில் பணியாற்றிய சாம் டெய்லரிடம் நான், ‘சாம், கருத்த கேசமுடைய அந்தப் பெண்ணிடம் ஸ்டூவர்ட் வரும்போது, அதுதான் சரியான நேரம், நாம் உண்மையைப் போட்டு உடைத்துவிடுவோம்.’ சாம் அதிர்ச்சியடைந்தவராய். ‘அய்யோ, ஏன்?’ என்றார். நான் கேட்டேன். இப்போது அப்படிச் செய்யவில்லையென்றால் கடைசியில் உண்மை வெளியாவது வரை கதையை எப்படி நகர்த்துவது. ஒருவன் கருத்த கேசமுடைய பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். அவளில் மற்றொரு பெண்ணின் சாயலைக் காண்கிறான். இந்த இடத்தில் நம் ரசிகர்களின் மனநிலையில் நம்மை வைப்போம்: ‘ஆக நீங்கள் கருத்த கேசமுடைய பெண் ஒருத்தியை படத்தில் வைத்திருக்கிறீர்கள். அவளை மாற்றப் போகிறீர்கள்.’ நாம் சொல்லிக் கொண்டிருக்கும் கதை என்ன? ஒருவன் பெண் ஒருத்தியை மாற்ற விரும்புகிறான். கடைசியில் மாறிய பெண் அவளேதான் என அறிகிறான். அவன் அவளைக் கொல்கிறான் அல்லது வேறு எது வேண்டுமானாலும் செய்கிறான். நாம் மறுபடியும் பழைய இடத்துக்கே வருகிறோம். மர்மத்தை உடை அல்லது மறைத்துவை. மறுபடியும் நாம் வெடிகுண்டு என்ற உவமைக்கு வருகிறோம்.

நீங்களும் நானும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அங்கே வெடிகுண்டு இருக்கிறது. எதைப் பற்றியுமில்லாத ஒரு சாதாரணமான உரையாடலை மேற்கொண்டுள்ளோம். சலிப்பூட்டுகிறது. அது எதையும் அர்த்தப்படுத்தவில்லை. திடீரென பெரும் சத்தம். குண்டு வெடிக்கிறது. பதினைந்து வினாடிகளுக்கு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். இப்போது அதை நீங்கள் மாற்றுங்கள் அதே காட்சியை அமையுங்கள். வெடி குண்டை நடுவில் நுழையுங்கள். வெடிகுண்டு அங்கு இருப்பதைக் காட்டுங்கள். அது ஒரு மணிக்கு வெடிக்கப் போகிறதென்று உணரச் செய்யங்கள். இப்போது பன்னிரண்டே முக்கால். பன்னிரண்டு ஐம்பது. சுவரில் உள்ள ஒரு கடிகாரத்தைக் காட்டுங்கள். மறுபடியும் அதே காட்சிக்குத் திரும்புங்கள். இப்போது நமது உரையாடல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது அதிலுள்ள முட்டாள்தனத்தினால். ‘டேபிளுக்கு அடியில் பார் முட்டாளே.’ பதினைந்து வினாடிகளுக்கு அதிர்ச்சியூட்டுவதற்கு பதிலாக இப்போது அவர்கள் பதினைந்து நிமிடங்களுக்கு காட்சி அமைக்கிறார்கள். இப்போது நாம்
Vertigo-வுக்குத் திரும்புவோம். அவர்களுக்கு உண்மை தெரியாத பட்சத்தில் பலவிதங்களிலும் கற்பனை செய்வார்கள். என்ன நடக்கிறதென்று சரியான வகையில் அவர்களுக்குப் புரியாது. ‘இப்போது’ நான் சொன்னேன், ‘சாம் எல்லா மர்மங்களிலுமுள்ள அபாயகரமான விஷயம் என்னவென்றால் குழம்பிய மனநிலை தான்.’ மற்றபடி பார்வையாளர்கள் உணர்ச்சி மயமாவதில்லை.

தெளிவுபடுத்து. தெளிவுபடுத்து. தெளிவுபடுத்து. ‘அது எந்தப் பெண்ணென்று தெரியவில்லை, அது யார்? என அவர்கள் கேட்கும்படி செய்யக்கூடாது. ‘எனவே’ நான் சொன்னேன். ‘சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிறோம். எல்லாவற்றையும் ஃப்ளாஷ் பேக்கில் வைத்துவிடுவோம். அங்கேயே அப்போதே அந்த இரண்டு பேரும் ஒரே பெண் எனக் காட்டிவிடுவோம்.’ பிறகு ஸ்டூவர்ட் அவளைத் தேடி ஹோட்டலுக்கு வரும்போது பார்வையாளர்கள் சொல்வார்கள், ‘அவனுக்கு கொஞ்ச விஷயங்களே தெரியும்.’

Alfred Hitchcockஅடுத்து படத்தின் ஆரம்பப் பகுதியில் அந்தப் பெண் காட்டும் எதிர்ப்புக்கு காரணம் இருப்பதில்லை. இப்போது உங்களுக்கு காரணம் கிடைக்கிறது. அவள் தான் யாரென்று அறியப்பட விரும்பவில்லை. அதனால்தான் அவள் அந்த சாம்பல்நிற சூட்டை விரும்ப வில்லை. தன்னுடையதை பொன்னிறத் தலைமுடியாக மாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை. காரணம், அப்படி மாற்றிக் கொண்டால் அந்த நிமிடமே அவளுக்குப் பிரச்சினை ஆரம்பித்துவிடும். இப்போது உங்கள் பக்கம் அதிக மதிப்பீடுகள் சேர்கின்றன. ஒரு இறந்த பெண்ணை உருவாக்குவதற்கான கதாநாயகனின் நாடகத்தை தொடர்ந்து நடத்துகிறோம். ஒரு பெண்ணை இன்னொருத்தியாக மாற்றுவதில் அவன் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான்.

சிகை அலங்காரக் கடையிலிருந்து திரும்பி வரும்போதும் அவளது பொன்னிறக் கேசம் அப்படியே இருக்கிறது. அவன் சொல்கிறான், ‘உன் தலைமுடியை வாரி முடிந்துகொள்.’ அவள் சொல்கிறாள். ‘வேண்டாம்.’ அவன் கெஞ்சுகிறான், ‘தயவு செய்து’ இப்போது அவளிடம் அவன் சொல்வது என்ன? ‘உன்னுடைய உள்ளாடைகளைத் தவிர அனைத்தையும் நீ கழற்றி விட்டாய் தயவுசெய்து அவற்றையும் கழற்றிவிடு.’ அவள் சொல்கிறாள் 'சரி.' குளியலறைக்குள் செல்கிறாள். அவள் நிர்வாணமாக வெளியே வருவாள் அவளோடு படுக்கைக்குச் செல்லலாம் என அவன் காத்திருக்கிறான். அதுதான் காட்சி. அவள் வெளியே வந்ததும் அவன் ஒரு ஆவியைப் பார்க்கிறான். அந்த வேறொரு பெண்ணைப் பார்க்கிறான். இதற்குத்தான் அந்தப் பெண்ணை பச்சைநிற ஒளியில் காட்டினேன்.

படத்தில் இதற்கு முன்பு ஸ்டூவர்ட்டின் மனதில் இடம்பெறுவதாகக் காட்டப்படும் காட்சிகளில் அப்பெண் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போவதை அவர் கண்காணித்தபடி இருக்கிறார். அப்போது அவள் உண்மையிலேயே பொய்த் தோற்றத்தில் இருக்கிறாள். கடந்த காலத்தைச் சேர்ந்த பெண் போல நடந்துகொள்கிறாள். அது ஒளி நிறைந்து இருந்தபோதும் இக்காட்சிகளை பனிமூட்டத்திற்குப் பயன்படுத்தும் ஃபில்ட்டரைக் கொண்டு படம் பிடித்தேன். பிரகாசத்தின் மீது பனிமூட்டம் படிந்து பச்சைநிற ஒளி கிடைத்தது. அதனால்தான் குளியலறையிலிருந்து அவள் வெளியே வரும்போது பச்சைநிற ஒளியில் காட்டினேன். இதற்காக போஸ்ட் தெருவில் உள்ள எம்ப்பயர் ஹோட்டலை தேர்ந்தெடுத்ததற்கும் காரணம் இதுதான். அந்த ஹோட்டல் அறையில் ஜன்னலுக்கு வெளியே பச்சைநிற நியான் விளக்குகளாலான பெயர்ப்பலகை இருந்தது. எல்லா நேரத்திலும் பச்சை வெளிச்சம் பாய்ந்தபடி இருந்தது எனக் காட்ட விரும்பினேன். எனவே தேவைப்பட்டபோது எங்களுக்கு அது கிடைத்தது. காமிராவில் பனிமூட்ட லென்ஸைப் பொருத்தினேன். அப்பெண் முன்னே வந்தபோது, அவனுக்கு கடந்த காலத்தில் அவன் கண்ட உருவம் தெரிகிறது. அவள் முகம் அவனை நெருங்கி வந்த போது லென்ஸை நான் எடுத்துவிட்டேன், அவன் யதார்த்தத்துக்கு திரும்புகிறான். அவள் ஆவியாக வந்திருக்கிறாள் என நினைக்கிறான். அச்சம் கொள்கிறான். ஆனால் அவள் கழுத்திலிருக்கும் லாக்கட்டைப் பார்க்கிறான். தான் தந்திரமாக ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கிறான்.

Psycho (1960)

அடிப்படையில் சைக்கோ ஒரு நகைச்சுவைப் படம் எனக் கருதுகிறீர்களா?

நகைச்சுவை என நான் குறிப்பிடுவது என்னுடைய நகைச்சுவை உணர்வைத்தான். இந்த நகைச்சுவையுணர்வு படத்தின் சீற்றம் மிகுந்த தன்மையைத் திறம்படக் கையாள எனக்கு உதவியது. இதே கதையை நான் நகைச்சுவையற்று தீவிரமானதொரு வகையில் சொல்லியிருந்தால் ஒரு தனி நபர் வரலாறாக இன்றி மர்மம் திகில் போன்ற விஷயங்கள்கொண்ட ஒன்றாக செய்திருக்க முடியாது. கடைசியில் அந்த மனநல மருத்துவர் சொல்வதுபோல இருந்திருக்கும்.

Psycho-வில் நடிகர்களை விடவும் பார்வையாளர்களை அதிகம் இயக்கியிருக்கிறீர்கள் இல்லையா?

ஆமாம். தூய சினிமா மூலம் பார்வையாளர்களது உணர்ச்சிகளைத் தூண்டுவது. இயன்ற எல்லா வழிகளிலும் அமைக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு இது சாத்தியமாக்கப்படுகிறது. குளியலறையில் நடக்கும் கொலை மிகவும் கொடூரமாக இருக்கிறது. காரணம் அதன்பிறகு படத்தில் கொடூரம் குறைவு. அந்தக் காட்சி பார்வையாளரின் மனதில் ஆழமாக நின்றுவிடுகிறது.

எனவே அதைக் காட்டிலும் கூடுதலாக எதையும் செய்யத் தேவையில்லை. Psycho-வில் பார்வையாளர்கள் தம்மைப் படத்தின் கதாபாத்திரங்களாக உணர்வதில்லை என நினைக்கிறேன். பாத்திரங்களை அப்படி உருவாக்க நேரம் இல்லை. அதற்கான அவசியம் இல்லை. படத்தின் திடீர் உணர்ச்சிப் பெருக்குகளை வேரா மைல்ஸ் அல்லது ஜான் கைவின் பற்றிய உணர்வு இன்றியே பார்வையாளர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் பார்வையாளர்களை படத்தின் முடிவுக்கு அழைத்துச் செல்லும் கதாபாத்திரங்கள் அவ்வளவே. எனக்கு அவர்களில் எந்த ஈடுபாடும் இல்லை. உங்களுக்குத் தெரியும் படத்தில் அவர்கள் இருந்ததாக யாருமே சொல்வது இல்லை. அவர்களைப் பொருத்தமட்டில் இது வருந்தத்தக்கது. தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருப்பவர்கள் படத்தை எப்படி விளக்கியிருப்பார்கள் என கற்பனை செய்யலாம். அவர்கள் சொல்வார்கள், ‘அந்தப் பெண் முதல் ரீலிலேயே இறந்து போகிறாள். யாரையாவது அந்த இடத்தில் போடுவோம். காதல் ஈடுபாடுடைய இரண்டாம் பாகத்தை ஜேனட் லீக்குத் தருவோம்.’ அது முட்டாள்த்தனமான யோசனை. நட்சத்திரத்தைக் கொன்று அப்புறப்படுத்துவது தான் இங்கு முக்கியம். அதனால் தான் இது எதிர்பாராத ஒன்றாக அமைகிறது.

பார்வையாளர்கள் ஆரம்பத்திலிருந்தே இதை உணரச் செய்வதற்கான அடிப்படைக் காரணம் இதுதான். பாதி படத்தில் வந்திருந்தால் அவர்கள் கேட்பார்கள், ‘ஜேனட் லீ எப்போது திரையில் வருவார்.’ சஸ்பென்ஸ் பற்றி குழப்பமான சிந்தனைக்கு இடமில்லை

Psycho-வில் நீங்கள் தொலைக்காட்சி தொழில்நுட்பங்களை பரீட்சார்த்தமாய் செய்து பார்த்திருக்கிறீர்கள்?

அப்படம் ஒரு தொலைக்காட்சிக் குழுவால் எடுக்கப்பட்டது. அது சிக்கனம் சம்பந்தப்பட்ட விஷயம். செட்களை குறைத்து வேகமாகவும் சிக்கனமாகவும் படப்பிடிப்பை நடத்தியது உண்மையிலேயே சினிமாத்தனமான விஷயங்களில் நாங்கள் சற்று பொறுமையாகச் செய்தோம். குளியலறைக் காட்சிக்கு ஏழு நாட்கள் ஆனது. படத்தின் கடைசியில் இடம் பெறும் மனநல மருத்துவர் தொடர்பான காட்சிகளோ ஒரே நாளில் எடுக்கப்பட்டன.

படத்துக்கு சால் பாஸின் பங்களிப்பு என்ன?

முக்கிய டைட்டில் மற்றும் கிரெடிட்டுகள் மட்டும். Psycho-வில் நானொரு காட்சியை எடுக்கட்டுமா என்றார். நான் சரி என்றேன். கொல்லப்படுவதற்கு முன் அந்தத் துப்பறியும் நிபுணன் படிகளில் ஏறிச் செல்லும் காட்சி. காகிதத்தில் படங்களாக வரைந்திருந்தார். ஒரு நாள் எனக்கு உடம்பு சரியில்லை. என் உதவியாளர்களை அழைத்து பாஸ் அமைத்திருந்த காட்சிகளை படமாக்கச் சொன்னேன். இருபது டேக்குகள் அமைத்திருந்தார். அதைப் பார்த்ததும், ‘இதில் ஒன்றையும் பயன்படுத்த வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். அவர் காட்சி அமைத்திருந்த விதம் அந்தத் துப்பறியும் நிபுணன் திகிலை ஏற்படுத்தக்கூடியவன் எனக் காட்டியது. உண்மையில் அவன் ஒன்றுமறியாதவன். அதனால் அந்தக் காட்சியும் வெகுளித்தனமாக இருக்க வேண்டும். பார்வையாளர்களைத் தூண்டக் கூடாது. ஏற்கனவே நாம் இதைச் செய்தாயிற்று. அந்தத் துப்பறியும் நிபுணன் படியில் ஏறும் காட்சியே போதுமானது. அது எளிமையாக இருக்கட்டும். சிக்கல்கள் எதுவும் வேண்டாம். ஒரே ஷாட்.

படத்தில் ஒழுக்க நெறிகள் எதையேனும் வலியுறுத்தியுள்ளீர்களா?

ஒழுக்க நெறி சார்ந்த நிலைப்பாடுகள் எதுவும் இப்படத்தில் இருக்க முடியாது. காரணம் இப்படம் மனநிலை பிறழ்ந்தவர்களைப் பற்றியது. மனநிலை சரியில்லாதவர்களிடம் ஒழுக்க நெறிகளைப் பொருத்திப் பார்க்க இயலாது.

The Birds (1963)

The Birds-ல் உங்களது அனேகம் படங்களில் போல் நீங்கள் சாதாரண, அடிப்படையில் சராசரியான மக்களை எடுத்துக்கொண்டு அவர்களை அசாதாரணமான சூழல்களில் பொருத்துகிறீர்கள்.

இது பார்வையாளர்கள் தம்மை கதாபாத்திரங்களாக உணர்வதற்காக. The Birds-ல் மிகச் சாதாரணமான துவக்கம். பெண்ணொருத்தி ஒரு பையனைச் சந்திக்கிறாள். அதிலிருந்து நேரே ஒரு சிக்கலுக்குள் மாட்டிக் கொள்கிறாள். அந்தப் பையனுக்கும் அவன் அம்மாவுக்குமிடையிலான விசித்திர உறவு. அவனை வழி நடத்தும் அவனது பள்ளி ஆசிரியை. ஒரு சாதாரண ஏமாற்றுக்காரியும் விபச்சாரியுமாக இருக்கும் அவள் முதல் தடவையாக யதார்த்தத்தைச் சந்திக்கிறாள். அது பெரும் துயரமாக மாறுகிறது. அந்தப் பெண்ணின் வாழ்விலும் மாற்றத்தை உண்டாக்குகிறது?

அந்தப் படம் உண்மையில் எதைப் பற்றியது?

பொதுவாகச் சொன்னால் மக்கள் மிகவும் மெத்தனமானவர்கள். படத்தில் அப்பெண் மெத்தனத்தின் உருவம். ஆனால் வாழ்வில் பெரும் துயரங்கள் வரும்போது அதற்கேற்ப மக்கள் மாறவும் செய்கிறார்கள் என்பது என் நம்பிக்கை. அந்தத் தாய் திகிலடைகிறாள். காரணம் தன்னை மிக வலிமை மிக்கவள் என அவள் எண்ணிக்கொண்டு செயல்படுவதுதான். உண்மையில் அவள் வலிமை மிக்கவள் அல்ல. அது வெறும் வெளித்தோற்றம். தன் கணவனது இடத்தில் மகனை வைக்கிறாள். கதையில் மிகவும் பலவீனமான பாத்திரம் அவள்தான். ஆனால் சமயம் வரும்போது ஒருவர் வலுமிக்கவராக முடியும் என்பதை அந்தப் பெண் நிரூபிக்கிறாள். அது போர் சமயத்தில் விமானத் தாக்குதல்களின்போது லண்டன் நகர மக்கள் நடந்துக் கொண்டதைப் போன்றது.

பைபிளில் வரும் ‘இறுதித் தீர்வை’ போன்று படம் உள்ளது, இல்லையா?

ஆமாம். அது அப்படித்தான் இருக்கிறது. அவர்களெல்லாம் எப்படி வெளியே வரப் போகிறார்கள் என நமக்குத் தெரியாது. அந்தத் தாய் உச்சபட்ச கலவரத்தில் இருக்கிறாள். அந்தப் பெண் பறவைகளை அடித்து விரட்டுமளவுக்கு தைரியம் கொண்டவளாய் இருக்கிறாள். ஆனால் ஒரு குழுவாகப் பார்க்கையில் அவர்கள் இறுதித் தீர்வையினால் பாதிக்கப்பட்டவர்கள். சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் சான்பிரான்சிஸ்கோவுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் காரிலிருக்கும் அவர்களை
lap-dissolve செய்யலாமென்று எனக்கு எண்ணம். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கே முழுவதும் பறவைகளால் மூடப்பட்டு கோல்டன் கேட் பாலம்.

The Birds ஐ சினிமாவாக எடுக்க நீங்கள் தேர்ந்தெடுத்தது எப்படி?


psycho -வுக்குப் பிறகு அதைக் காட்டிலும் சிறந்த ஒன்றை மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்தேன்.
On the beach போன்ற பேரழிவினை மையமாகக்கொண்ட படங்களில் தனிமனிதர்களது கதைகள் ஒரு பகுதியாக அமையாததை நான் கவனித்திருக்கிறேன். The pride and passion படம் நினைவுக்கு வருகிறது. அது ஒரு பெரிய பீரங்கியை இழுப்பது பற்றியது. ஒவ்வொரு இரவும் ஒரு தனி நபர் கதையைச் சொல்வதற்காக அவர்கள் இழுப்பதை நிறுத்தினார்கள். மறுநாள் காலை திரும்பவும் அவர்கள் இழுக்கச் செல்வார்கள். அது மோசமாக திட்டமிடப்பட்டிருந்தது. ஒருங்கிணைப்பே இல்லை. பீரங்கியைத் தள்ளும்போதும் மனிதர்கள் வாழ்கிறார்கள், உணர்ச்சிவயப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. The Birds -ல் இவ்வாறு செய்யக்கூடாது என நான் உறுதி செய்து கொண்டேன். வேண்டுமென்றே நான் கனமில்லாத, சாதாரணமான, தொடர் விளைவுகளற்ற நடத்தையுடன் ஆரம்பித்தேன். ஏதோ விரும்பத்தகாதது எனத் தோன்றும் வகையில் காட்டியதன் மூலம் ஆரம்ப டைட்டில்களில் நான் சமரசம் கூட செய்து கொண்டேன்.

சாதாரண எளிய சீன ஓவியத்திலமைந்த பறவைகளின் மெல்லிய வரைபடங்கள் பயன்படுத்த விரும்பினேன். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. காரணம் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பொறுமையற்றவர்களாக, ‘எப்போது பறவைகள் வரும்?’ என மக்கள் கேட்கக்கூடும் என எண்ணினேன். அதனால்தான் அவ்வப்போது சிறு அதிர்ச்சியை அவர்களுக்கு அளித்தேன். கதவில் மோதும் பறவை, மின்கம்பிகளில் அமர்ந்த பறவைகள், அந்தப் பெண்ணைக் கொத்தும் பறவைகளை. படத்தின் பாத்திரங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என நினைத்தேன். குறிப்பாக அந்தத் தாயை, அவர் முக்கியமானவர் அதே நேரம் நாம் போதுமான அவகாசம் எடுத்துக் கொள்ளவேண்டும். பறவைகள் வருமுன் சூழலோடு ஒன்ற வேண்டும். மறுபடியும் அது ஒரு அதிகற்பனை. ஆனால் எல்லாமே முடிந்தவரையில் யதார்த்தமாக இருக்க வேண்டும். சுற்றுப்புறம், அரங்க அமைப்பு, கதை மாந்தர்கள். பறவைகளும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பறவைகளாக இருக்க வேண்டும். பருந்துகள் கிடையாது. எந்த வகையான பெரிய பறவையும் இல்லை.

படத்தில் ஏராளமான தந்திரக் காட்சிகள் இல்லையா?

அத்தனை தேவைப்பட்டது. மொத்தம் 371 தந்திரக்காட்சிகள். அதில் மிகவும் கடினமானது கடைசிக் காட்சி. அது 32 வேறுபட்ட படத் துண்டுகள் சேர்ந்தது. வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே எங்களுக்கு கடற்பறவைகள் அனுமதிக்கப்பட்டன. எனவே காட்சியின் முன்னணி (foreground) மூன்று தனிப்பிரிவுகளாகப் படம் பிடிக்கப்பட்டது. இடமிருந்து வலமாக கட்டைமீது அமர்ந்த பறவைகள் வரை. எங்களிடமிருந்த சில கடற்பறவைகள் முதல் பிரிவில் படம் பிடிக்கப்பட்டன. அவற்றையே நடுப்பகுதியிலும் வலதுபுறமாக அமைந்த மூன்றாவது பகுதியிலும் மறுபடியும் வைத்து படம்பிடித்தோம். காக்கைகளுக்கு மேலே நீண்ட அடர்த்தி குறைந்த வரிசையாக மறுபடியும் கடற்பறவைகள் பரத்தி வைக்கப்பட்டன. இரண்டு பக்கமும் இரண்டு பறவைகளைக் கொண்டு சாலையில் இறங்கிச் செல்லும் கார் இன்னொரு துண்டுப்படம். வானம் இன்னொரு துண்டு. ஆந்தையும் தனியாக எடுக்கப்பட்டதுதான். இதுபோல இன்னும் பல. இவையெல்லாம் லேபில்
(lab) ஒன்று சேர்க்கப்பட்டன.

மொத்தத்தில் தந்திரக்காட்சிகள் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகளாக பயன்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

ஒரு முடிவை அடைவதற்கான வழிகள் இவை. எப்படியேனும் அதை நீங்கள் அடைந்தே ஆக வேண்டும்.
The Birds பற்றிய ஒரு முக்கியமான விஷயம் என்றால், ‘இது முடியுமோ?’ என்ற கேள்வியை நான் ஒரு போதும் எழுப்பியதே இல்லை. அப்படிச் செய்திருந்தால் இதையெல்லாம் செய்து முடித்திருக்கவே முடியாது. எந்தத் தொழில்நுட்பக்காரரும் ‘முடியவே முடியாது’ என்றே சொல்லியிருப்பார். எனவே அந்த விஷயத்துக்கே நான் போகவில்லை. நான் வெறுமனே சொன்னேன். ‘நாம் இப்போது செய்ய வேண்டியது இதுதான்.’ முன்னோடியான அந்தத் தொழில்நுட்பங்கள் முயற்சி செய்யப்படாதிருக்க அந்தப் படமே எடுக்கப்பட்டிருக்க முடியாது என்பதை யாருமே உணரவில்லை. கிளியோபாட்ரா, பென்ஹர் எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை. வெறும் மக்கள் திரளும் இயற்கை காட்சிகளும்தான். பறவையைப் பயிற்றுவித்தவரது பணி அபாரமானது. காகங்கள் தெருவில் குழந்தைகளைத் துரத்துவதை, அவர்களைச் சுற்றி கரணமடிப்பதை, முதுகின் மீது உட்காருவதைப் பாருங்கள். கார் பானெட் மீது அமரவும் குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் பறந்து செல்லவும் பறவைகளுக்குப் பயிற்சியளிக்கவே பல நாட்கள் ஆனது. பாப் பர்க்ஸும் (Bob Burks) மற்றும் எஞ்சிய நாங்கள் அனைவரும் தொழில்நுட்பக் கலைஞர்களாக மாறாதிருந்தால் The Birds படத்தை எடுக்க சாதாரணமாக ஐம்பது லட்சம் டாலர்கள் செலவாகியிருக்கும்.

('புது எழுத்து' ஜூலை 2006)

Wednesday, 2 September 2009

நீ கொன்ற திங்கட்கிழமை 31.08.09


(For N)
கொல்லப்படும் வரை
அந்த திங்கட்கிழமை
நம் பிரியத்துக்குரியதாயிருந்தது
நீ உள்ளிட்ட நாம் யாரும்
வெறுக்கத்தக்கதான எதையும்
புரிந்திருக்கவில்லை அது.

கள்ளம் புரியாக் குழந்தையென
நீ உருவப்போகும் கொலைவாளினை
அறியாதிருந்தது.

யாரும் எதிர்பாராத கணம்
அத் திங்கட்கிழமையை நீ கொன்றாய்
அது சரிந்து விழும்போதும்
பற்றிக்கொள்ள உன் கைகளையே தேடியது
உன் கைகள் கொலைவாளினை
கழுவிக் கொண்டிருக்கையில்
அது துடித்து அடங்கியது.

அது ஞாயிறைப் பின்தொடரும்
விசேஷங்களேதுமற்ற
சாதாரணவொரு திங்கட்கிழமைதான்
மரணத்தின் குருதி அதை
கைவிடப்படுதலின் துயர தினமாக்கிவிட்டது.

நீ கொன்ற திங்கட்கிழமையின்
களிப் பாடல்களும்
ஒப்பாரிகளாகிவிட்டன
அன்றைய தினத்தின் ஒப்பாரிகளோ
உலகைப் புரட்டும் துயர கீதங்களாகியிருக்கின்றன.

உனக்குத் தெரியாது
நீ கொன்ற திங்கட்கிழமை
உன்மீது கொண்ட பிரியத்தையன்றி
வேறொன்றையுமறியாதது

நீ கொன்ற திங்கட்கிழமைக்கு
உன்னைத் தவிர வேறு
உறவுகள் இருந்திருக்கவில்லை

நீ கொன்ற திங்கட்கிழமையின் பிணம்
கணம் கூடி அழுத்துகிறது
அதை அடக்கம் செய்ய
வாரத்தின் ஏனைய கிழமைகள்
தயாராயில்லாததால்
கிழமைகளுக்கும்
புரிந்துகொள்ளப்படாத பிரியத்துக்கும் தொலைவே
அதைச் சுமந்து திரிகிறேன்.

Tuesday, 18 August 2009

'வாழ்க்கை மனிதனை இலக்கியத்திலிருந்து தள்ளி வைக்கும் தண்டனைகளால் நிறைந்தது'


ஓரன் பாமுக்




முப்பதாண்டு காலமாக நான் எழுதி வருகிறேன். சில காலமாகவே இவ்வாறு நான் கூறிவருகிறேன். இந்த வார்த்தைகள் பொய்யென ஆகும்படிக்கு நெடுங்காலமாகவே இதைக் கூறிவருகிறேன். எழுத்தாளனாக இது எனக்கு முப்பத்தியோராவது வருடம். முப்பதாண்டு காலமாக நான் நாவல்கள் எழுதிவருகிறேன் எனச் சொல்லவே விரும்புகிறேன். சற்றே இது மிகையானாலும் கூட. கட்டுரை, விமர்சனம், இஸ்தான்புல் பற்றிய என் மனப்பதிவுகள்,அரசியல் என பலவகை எழுத்துக்களையும் நான் எழுதிவருகிறேன். ஆனால் எனது பிரதான தொழில், வாழ்வோடு என்னை இணைக்கும் விஷயம் நாவல்கள் எழுதுவதுதான்.

என்னைக் காட்டிலும் நீண்ட காலமாக எழுதிவரும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் ஏராளம் பேர் உள்ளனர். என்னளவுக்குக் கவனம் பெறாமலே அவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிவருகின்றனர். திரும்பத் திரும்ப நான் வாசிக்கும் மாபெரும் எழுத்தாளர்கள் லியோ டால்ஸ்டாய், பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன் இவர்களது எழுத்து வாழ்க்கையும் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியது. பிறகு ஏன் எனது முப்பதாண்டு கால எழுத்து வாழ்க்கை பற்றி இவ்வளவு பிரஸ்தாபம்?

மகிழ்வுடன் இருக்க தினசரி குறிப்பிட்ட அளவு இலக்கியத்தை நான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் தினமும் தேக்கரண்டியளவு மருந்து உட்கொள்ளும் நோயாளிக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. சிறுவயதில், நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமென்று அறிந்தபோது பெரும்பாலானவர்களைப் போல அந்நோயாளிகளுக்காக நானும் வருத்தப்பட்டேன். அவர்கள் பாதி மரணமுற்றுவிட்டவர்கள் எனக்கூட எண்ணியிருக்கிறேன். இலக்கியம் மீதான என் சார்ந்திருப்பும் என்னைப் பாதி மரணமுற்றவனாகவே வைத்திருக்கிறது. இளம் எழுத்தாளனாக இருந்தபோது மற்றவர்கள் என்னை இவ்வுலகிலிருந்து ஒதுங்கியவனாக அதனாலேயே பாதி மரணமுற்றவனாகப் பார்த்ததை உணர்ந்திருக்கிறேன். உண்மையில் பாதிப் பிசாசு என்பதே சரியானதாக இருக்கும்.

முழுவதுமாக நான் இறந்து போய் என் சடலத்துக்கு இலக்கியம் மூலமாக உயிரூட்ட முயல்வதாகக் கூட கற்பனை செய்திருக்கிறேன். என்னளவில் இலக்கியம் ஒரு மருந்து. தேக்கரண்டி, ஊசி மூலமாக மற்றவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு இலக்கியம்- மாறாத பழக்கம். உங்களுக்கும் வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். முதலில் மருந்து நல்ல மருந்தாக இருக்க வேண்டும். அது எவ்வளவு உண்மையானது எவ்வளவு வீரியமுள்ளது என்பதே அதன் நல்ல குணம் என நான் குறிப்பிடுவது. நாவலொன்றில் அடர்ந்த ஆழமான பகுதியொன்றை வாசிப்பது, அதனுலகில் நுழைந்து அது உண்மையானதொரு உலகம் என நம்புவது - இதைவிடவும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், வாழ்வோடு பிணைக்கும் விஷயம் வேறொன்று இல்லை.

நான் எப்போதும் இறந்துபோன ஒருவரது எழுத்தை வாசிப்பதையே விரும்புகிறேன். காரணம் அப்போதுதான் அந்த எழுத்தின் மீதான என் போற்றுதலை பொறாமை எனும் சிறு கருமேகம் மூடாமலிருக்கும். வயது கூடக்கூட எனக்கு அதிகம் உறுதிப்படும் விஷயம், மிகச்சிறந்த புத்தகங்கள் யாவும் இறந்துபோன எழுத்தாளர்களுடையவையே. ஒருவேளை சிறந்த புத்தகங்களின் ஆசிரியர்கள் உயிரோடிருப்பின், அவர்களது இருப்பு ஆவிகளது இருப்பாகத் தோன்றுகிறது. இதனால்தான் பெரும் எழுத்தாளர்களைத் தெருவில் காண்கையில் தொலைவே இருந்து அவர்களைக் கண்டு வியப்பெய்தும்போது, நம் கண்களையே நாம் நம்பாமல் அவர்களை ஆவிகளெனக் கருதி அருகே செல்லாமல் நின்றுவிடுகிறோம். சில தைரிய மனம் படைத்தவர்கள் மட்டும் நெருங்கிச் சென்று ஆட்டோகிராஃப் கேட்கிறார்கள். இவர்கள் சீக்கிரமே இறந்து போவார்கள் என மனதில் நான் நினைப்பதுண்டு. பிறகு அவர்களது புத்தகங்கள் இப்போதிருப்பதை விடவும் உயரியதொரு இடத்தை நம் இதயங்களில் பெற்றுவிடும். ஆனால் எல்லா புத்தகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தாது.

என்னுடைய எழுத்தே எனது தினசரி இலக்கிய மருந்தாகுமென்றால் அது முற்றிலும் வேறான விஷயம். என்னுடையதைப் போன்ற நோயால் அவதியுறுவோருக்கெல்லாம் மிகச்சிறந்த நிவாரணம், மகிழ்ச்சிக்கான ஊற்றுக்கண் எதுவென்றால் தினமும் அரைப்பக்கம் எழுதுவதுதான். முப்பது வருடங்களாக எழுதுவதற்கென்று தினமும் சராசரியாக பத்துமணி நேரம் தனியே ஓர் அறையில் அமர்ந்திருக்கிறேன். வெளியீட்டுக்கு உகந்ததாக இருந்த எழுத்தின் அளவை கணக்கிட்டுப் பார்த்தீர்களேயானால் என்னுடைய சராசரி தினசரி எழுத்து அரைப்பக்கத்திற்கும் மிகாதது. நான் எழுதுபவற்றில் பெரும்பாலானவை என்னுடைய சொந்த ‘நல்ல எழுத்து’ என்ற அளவுகோலுக்குள் வராதவையே. இவை இரண்டும் துயரத்தின் இருபெரும் ஊற்றுக் கண்கள்.

தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். என்னைப் போலப் பெரிதும் இலக்கியத்தைச் சார்ந்திருக்கும் ஓர் எழுத்தாளன் தான் இதுவரை எழுதிய புத்தகங்களின் புகழில் மயங்கியோ, தான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை குறித்த தற்பெருமை கொண்டோ, அந்தப் புத்தகங்கள் செய்த சாதனையை நினைத்தோ இறுமாந்திருக்க மாட்டான். இந்த உலகைக் காப்பாற்றுவதாக பாவனை செய்யக்கூட இலக்கியம் அவனை அனுமதிப்பதில்லை. சொல்லப்போனால் அன்றைய தினத்தைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே சந்தர்ப்பமளிக்கிறது. எல்லா தினங்களுமே கடுமையான தினங்கள். கடுமையான தினங்கள் அவனால் எதையும் எழுத இயலாத தினங்கள். எழுதாத எல்லா தினங்களும் கடுமையான தினங்கள். அந்த தினத்தைக் கடந்து செல்லப் போதுமான தைரியத்தைப் பெறுவதுதான் இங்கு முக்கியம். வாசிக்கும் புத்தகம் அல்லது அதிலோரு பக்கம் நல்லவொன்றாக அமைந்துவிட்டால் அதிலிருந்து மகிழ்ச்சியைப் பெறுவது- கூடியமட்டில் அந்த தினத்துக்காவது.

புத்தகமொன்றில் மூழ்கிப் போகாத பட்சத்தில், நல்லபடியாக என்னால் எழுதமுடியாத நாளைப் பற்றி நான் நினைப்பது இதுதான்; முதலில் என் முன்னே உலகம் மாறிவிடுகிறது; தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது. அருவெறுப்பானதாகி விடுகிறது. எனக்கு இது நிகழ்வதை என்னை அறிந்தவர்களும் உணர்கிறார்கள். காரணம், என்னைச் சுற்றியுள்ள உலகைப் பிரதிபலிப்பவனாக நான் மாறிவிடுகிறேன். உதாரணமாக மாலையில் என் முகத்தில் தெரியும் நிராசையைக் கண்ட அன்றைய தினம் உருப்படியாக எதையும் நான் எழுதவில்லையென என் மகள் சொல்லிவிடுவாள். இதை அவளுக்குத் தெரியாமல் மறைத்துவிடவே விரும்புகிறேன். ஆனால் என்னால் முடிவதில்லை.

இந்த இருண்ட கணங்களில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான கோடு அழிந்து விடுகிறது. நான் யாரிடமும் பேச விரும்புவதில்லை. இந்த நிலையில் என்னைக் காண்பவர்களும் என்னோடு பேச விரும்புவதில்லை. இதே போன்ற ஆனால் சற்றே வலுக்குறைந்த ஒரு துக்கவுணர்வு தினமும் மதியப்பொழுதில், சரியாகச் சொன்னால் ஒரு மணியிலிருந்து மூன்று மணிக்குள் என்மீது கவிகிறது. ஆனால் வாசிப்பதன் மூலமும், எழுதுவதன் மூலமும் அதிலிருந்து மீள்வதற்கு நான் கற்றுக் கொண்டேன். உரிய நேரத்தில் செயல்பட்டால் நான் சவமாகிப் போவதிலிருந்தும் என்னையே காப்பாற்றிக்கொள்ள முடியும்.

பிரயாணம், பணம் செலுத்தப்படாத எரிவாயு ரசீது, ராணுவ சேவை (ஒரு காலத்தில்), அரசியல் விவகாரங்கள் (சமீபகாலமாக) அல்லது வேறு ஏதேனும் தடை ஏற்பட்டு எனது காகித-மை சிகிச்சை நீண்ட காலத்துக்குத் தடைபட்டால் துயரம் என்னுள் சிமெண்ட்டைப்போல இறுகிவிடுகிறது. வெளியில் நடக்க என் உடல் சிரமப்படுகிறது. முட்டிகள் மடக்க முடியாதவைகளாகிவிடுகின்றன. தலை கல்லாகிவிடுகிறது. சுவாசம் கூட வேறொரு வாசனையைக் கொண்டு விடுகிறது. இந்தத் துயரம் மேலும் வளரவே செய்கிறது.

காரணம், வாழ்க்கை மனிதனை இலக்கியத்திலிருந்து தள்ளி வைக்கும் தண்டனைகளால் நிறைந்தது. நெரிசல் மிக்க ஒரு அரசியல் கூட்டத்தில் நான் அமர்ந்திருக்கலாம், வகுப்புத் தோழர்களுடன் பள்ளியில் நடைக்கூடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கலாம், விடுமுறை தினத்தில் உறவினர்களோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம், என்னிலிருந்து பல உலகங்கள் தள்ளி தன் சிந்தனையை வைத்திருக்கம் நல் இதயம் படைத்த நண்பரொருவருடன் சகஜமாக உரையாட சிரமப்பட்டுக் கொண்டிருக்கலாம், தொலைக்காட்சித் திரையில் மூழ்கியிருக்கலாம், முக்கியமானதொரு வியாபார பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம், எதையாவது வாங்கிக் கொண்டிருக்கலாம், வழக்கறிஞரிடம் போவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கலாம், ஒரு விசாவுக்கென என்னுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் - சட்டென என் இமைகள் அழுத்துகின்றன,நடுப்பகலாய் இருந்தாலும் நான் உறங்கிப் போகிறேன். வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். என் அறைக்குத் திரும்பி தனிமையில் பொழுதைக் கழிக்க இயலாது, என்னுடைய ஒரே ஆறுதல் நடுப்பகலில் போடும் இந்தக் குட்டித் தூக்கம்தான்.

ஆனால், உண்மையில் இந்த வேட்கை இலக்கியத்திற்கானது அல்ல, தனியே இருந்து கனவு காண உதவும் ஓர் அறைக்காகத்தான். அப்படி வாய்த்தால, மக்கள் நெரிசல் மிக்க இடங்கள், குடும்ப ஒன்று கூடல்கள், பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு, விழாக்கால உணவுகள், அந்த விழாக்களில் கலந்து கொள்ளும் மக்கள் என அற்புதமான கனவுகளை நான் காண்பேன். ஏராளம் வைக்கப்பட்டுள்ள அந்த விடுமுறை தின உணவுகளை நானே கண்டறிந்த விஷயங்களைச் சேர்த்து இன்னும் சுவை கூடியவையாக ஆக்குவேன். அந்த மக்களை இன்னும் சுவாரஸ்யமானவர்களாக ஆக்குவேன். கனவுகளில் எல்லாமும் எல்லோரும் சுவாரஸ்யமானவர்களாக, நம்மை ஆட்கொள்வனவாக, உண்மையானவையாக உள்ன. அறிந்த உலகத்தின் விஷயங்களிலிருந்து அறியப்படாத புதிய உலகை உருவாக்குகிறேன்.

நாம் விஷயத்தின் முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டோம். நன்றாக எழுத, முதலில் கவனச் சிதைவின் மட்டில் சலிப்புற வேண்டும். கவனச் சிதைவின் மட்டில் சலிப்புற நிஜ வாழ்வுக்குள் நுழைய வேண்டும். அங்கே ஓசைகளால் நான் பந்தாடப்படுகிறேன். ஒலிக்கும் பல்வேறு தொலைபேசிகளுக்கு நடுவே ஒரு அலுவலக அறையில் அமர்ந்திருப்பது, நண்பர்களும் அன்புக்குரியவர்களும் சூழ பிரகாசமானதொரு காலநிலை நிலவும் கடற்கரையில் இருப்பது, மழைநடுவே ஒரு சவ ஊர்வலத்தில் செல்வது - வேறு வார்த்தைகளில் சொன்னால், என்னைச் சுற்றி அந்தக் காட்சி நிகழத் துவங்கும். அந்தக் கணமே அந்த இடத்தில் நான் இருக்கும் நினைவு மறந்து ஓரத்தில் நின்று நிகழ்வனவற்றைப் பார்ப்பவனாகிவிடுகிறேன். பகல் கனவு காணத் துவங்குகிறேன்.

நம்பிக்கை வறண்ட மனநிலையாக இருந்தால் நான் எவ்வளவு சலிப்புற்றிருக்கிறேன் என எண்ணிப் பார்ப்பேன். எப்படியிருந்தாலும் எனக்குள்ளிருந்து ஒரு குரல் ‘அறைக்குத் திரும்பிப் போய் மேசையில் உட்கார்’ என விரட்டும். இந்தச் சூழ்நிலையில் மற்றவர்கள் என்ன செய்வார்களோ தெரியாது. ஆனால் இந்தச் சூழ்நிலைதான் என்னைப போன்றவர்களை எழுத்தாளர்களாக்குவது ,நான் நினைக்கிறேன், இந்தச் சூழ்நிலை கவிதையை நோக்கியல்ல உரைநடை மற்றும் புனைவை நோக்கிச் செலுத்துகிறது. இது நான் தினமும் உட்கொள்ள உறுதி மேற்கொள்ளும் மருந்தின் குணங்கள் மீது இன்னும் கொஞ்சம் ஒளியைப் பாய்ச்சுகிறது. மருந்தின் பகுதிப் பொருள்கள் சலிப்பு, நிஜவாழ்வு, கற்பனையில் காணும் வாழ்வு ஆகியனதான் என்பது நமக்குப் புலப்படுகிறது.

குறைந்தபட்சம், என்னைப்போன்ற நாவலாசிரியர்களுக்கு, எழுதுவதென்பது ஒரு ஆறுதல். ஒரு நிவாரணம் கூட எனத் தொடங்கும் எளிய தத்துவமொன்றை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். எழுதப்போகும் விஷயத்தை நாங்களே தேர்ந்தெடுக்கிறோம். தினப்படி எங்களது பகல்கனவுத் தேவைகளையொட்டி நாங்களே எங்கள் நாவல்களை வடிவமைக்கிறோம். எண்ணங்கள், உணர்ச்சிப்பெருக்குகள், சீற்றங்கள், ஆசைகள் இவைகளால்தான் நாவல்கள் தூண்டப்பெறுகின்றன என்பதை நாம் அறிவோம்.

எங்கள் காதலியரை குஷிப்படுத்த, எதிரிகளை அவமானப்படுத்த, நாங்கள் போற்றும் ஒன்றைப் பற்றிப் பேச, அதைப்பற்றி ஒன்றுமே தெரிந்திராத நிலையில் அறிவார்த்தமாக அந்த விஷயத்தைப் பற்றிப் பேசி மகிழ்ச்சியடைய, தொலைந்துபோய் நினைவில் மட்டுமே எஞ்சிய காலங்களைக் குறித்து மகிழ, காதலுறவு கொள்வது போல கனவு காண அல்லது வாசிக்க அல்லது அரசியலில் ஈடபட, ஒருவரது தனிப்பட்ட கவலைகளைப் பேச, தெளிவானதும், புரியாததுமான இவையும் இவைபோன்ற வேறுபல புதிரான, சொல்லப்போனால் முட்டாள்த்தனமான ஆசைகள்தான் எங்களை வடிவமைக்கின்றன. அவை எங்கேயிருந்து வருகின்றன, எங்கள் பகல் கனவுகள் எதைக் குறிக்கின்றன என எங்களுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் நாங்கள் எழுத அமரும்போது எங்கிருந்தோ வரும் காற்றைப் போல எங்களுக்குள் உயிர் மூச்சை ஊட்டுபவை இந்தப் பகல்கனவுகள்தாம். எங்கே போகிறோம் என்பது தெரியாத மாலுமியைப்போல இந்த மர்மக் காற்றுக்கு நாங்களும் அடிபணிந்து விடுகிறோம்.

ஆனால் அதே நேரம் எங்கள் மனதின் இன்னொரு பகுதியில் நாங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவுகூர முடிவதைப் போல இப்போது எங்கே இருக்கிறோம் என்பதையும் வரைபடத்தில் மிகச் சரியாகச் சுட்டமுடியும். அந்தக் காற்றிடம் முழுமுற்றாக அடிபணிந்து விட்ட நேரங்களிலும் நான் மிகப்போற்றும் எழுத்தாளர்களை போல் பயணத்தின் திசை பற்றிய அறிவு என்னுள் நீங்காமல் இருக்கவே செய்கிறது. பயணம் புறப்படும் முன் நான் திட்டமிடுகிறேன், சொல்ல விரும்பும் கதையை பல பாகங்களாக பிரிக்கிறேன், என் கப்பல் எந்தெந்த துறைமுகங்களில் நிற்க வேண்டும், வழியில் என்னென்ன சரக்குகளை ஏற்ற வேண்டும், எவ்வெவற்றை இறக்க வேண்டும். என் பயணத்திற்காகும் நேரத்தைக் கணித்து பயண வழியை வரைபடத்தில் குறிக்கிறேன்.

ஆனால் அந்தக் காற்று எங்கிருந்தோ வீசி என் கப்பற்பாய்களை இழுத்து, என் கதையின் திசையை மாற்ற நினைத்தால் அதை நான் எதிர்க்க மாட்டேன். முழுமையான தனது பாய்களுடன் கப்பல் விழைவது முழுமையையும் கச்சிதத்தையும்தான். அனைத்தையும், எல்லாவற்றிலும் கலக்கக்கூடிய, எல்லாமும் ஒன்றோடொன்று தொடர்புடைய, எல்லாமும் வேறான எல்லாவற்றைப் பற்றியும் அறிந்திருக்கக் கூடிய அந்த விசேஷ இடத்தையும் காலத்தையும் நான் தேடுவதைப் போல. சட்டென காற்று நின்று போகிறது. எல்லாமே அசைவற்றிருக்கும் ஓர் இடத்தில் நான் சலனமற்று நிற்கிறேன். பொறுமையாக இருந்தால் சலனமற்றும் கலங்கியும் கிடக்கும் இந்த நீரில் என் நாவலை முன்னெடுத்துச் செல்லும் விஷயங்கள் இருப்பதைக் கண்டறிவேன்.

நான் ஏங்குவது என்னுடைய SNOW நாவலில் நான் விவரிக்கும் ஆன்மீகத் தூண்டுதலைப் போன்ற ஒன்றுக்கு அது ‘குப்ளாய்கான்’ கவிதையில் கூல்ரிட்ஜ் குறிப்பிடும் அகத்தூண்டுதல் இல்லை என கூறமுடியாது. இந்த அகத்தூண்டுதல் (கூல்ரிட்ஜ்க்கும் SNOW நாயகன் காவுக்கும் கவிதைகள் வழி வருவதைப் போல) ஒரு நாடகீயமான வழியில், ஒரு நாவலில் பொருந்தக் கூடிய காட்சிகள் மற்றும் சூழல்கள் மூலம் என்னை வந்தடைய வேண்டும். பொறுமையுடன் கவனமுடன் காத்திருக்கும்போது என் கனவு பலிக்கிறது. நாவல் எழுதுவதென்பது இந்த ஆசைகள், காற்றுகள், அகத்தூண்டல்கள், மனதின் இருள்பகுதிகள் மற்றும் அவற்றின் மூட்டமான அசைவற்ற கணங்கள் இவற்றிடம் மனம் திறந்து கொள்வதுதான்.

நாவலென்பது நமது கப்பற்பாய்களை இந்தக் காற்றுகளால் நிரப்புவது, அறியாத இடங்களிலிருந்து வீசும் அகத்தூண்டுதல்களால் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு நமக்கு பதிலிறுப்பது, மாற்றம் வேண்டி நாம் கண்ட பகல் கனவுகளனைத்தையும் கைப்பற்றிக் கொள்வது, அனைத்தையும் அர்த்தமுள்ள ஓர் முழுமைக்குள் கொண்டு வருவது அல்லாமல் வேறெது? அனைத்திற்கும் மேலாக நாவலென்பது நாம் எப்போதும் உயிர்ப்புடனும், ஆயத்தமுடனும் வைத்திருக்க உதவும் ஒரு கனவு உலகத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் ஒரு கூடையைப் போன்றது. நாவலென்பது அதனுள் நுழைந்ததும் வலிமிகுந்த இவ்வுலகிலிருந்து நாம் மீள உதவுகிற சிறுசிறு பகல்கனவுகளால் பின்னப்பட்டது.

தொடர்ந்து எழுத இந்தக் கனவுகள் மேலும் மேலும் துலக்கப்பெறுகின்றன. எழுத எழுத கூடைக்குள் இருக்கும் இரண்டாவது உலகம் விரிவடையத் தொடங்குகிறது, எல்லா விவரங்களும் கொண்டு முழுமையடைகிறது. எழுத்தின் வழியாகவே இந்த உலகை நாம் அறிந்தோம். எவ்வளவு சரியாக அதைப் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது தலைகளில் அதைச் சுமந்து செல்வது சுலபமாகிறது. நாவலின் பாதியிலிருந்தபடி நன்றாக எழுதிக் கொண்டிருக்கையில் அந்நாவலின் கனவுகளுக்குள் சுலபமாக என்னால் நுழைய முடியும். வாசிப்பதன் மூலம் மகிழ்ச்சியுடன் நாம் உள் நுழைய முடியும் புதிய உலகங்கள்தான் நாவல்கள். வாசிப்பதைவிடவும் எழுதுவது அவற்றுள் நுழைவதை இன்னும் மகிழ்ச்சியானதாக்குகிறது. தாம் விவரிக்க விரும்பும் கனவுகளை, வெகு இலகுவாக விவரிக்க விரும்பும் கனவுகளை தாங்கள் சுமந்து செல்ல ஏற்றவகையில் நாவலாசிரியர்கள் தங்கள் நாவல்களை வடிவமைக்கிறார்கள்.

நல்ல வாசகனுக்கு அவைகள் மகிழ்வளிப்பதைப் போல நல்ல எழுத்தாளனுக்கு ஒரு நாளின் எந்த நேரத்திலும் தன்னை அதனுள் தொலைத்து மகிழ்ச்சி காணக்கூடிய வலுவானதொரு புதிய உலகை அளிக்கின்றன. இத்தகு அற்புத உலகின் ஒரு சிறு பகுதியை என்னால் உருவாக்க முடிந்தால் கூட என் மேசையை நெருங்கி பேனாவையும் காகிதத்தையும் தொடும் அந்த கணத்தில் பெருமகிழ்ச்சியடைவேன். பழகிப்போன, சலிப்பூட்டும் இந்த உலகை சட்டென்று கைவிட்டு சுதந்திரமாக உலவ உதவும் பரந்தவெளியையுடைய அந்த உலகில் நுழைவேன். யதார்த்த உலகுக்குத் திரும்புவது அல்லது நாவலின் இறுதியை நெருங்குவது என்ற எண்ணமே வராது. இந்த உணர்வு நான் புதிய நாவலொன்றை எழுதுகிறேன் என அறியும்போது நல்ல வாசகனொருவனுக்கு உண்டாகும் மனநிலையுடன் தொடர்புடையது. "உங்கள் நாவல் நீளமானதாக இருக்கட்டும்" என்ற குரலை " நீளம் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்" எனக் கோரும் பதிப்பாளருடைய குரலைக்காட்டிலும் ஆயிரம் தடவைகள் அதிகமாகக் கேட்கிறேன் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தனி மனிதனொருவனின் சந்தோஷங்களிலிருந்து உருவாகும் ஒரு படைப்பு எவ்வாறு பல்லாயிரக்கணக்கான மற்றவர்களுக்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது? என்னுடைய My name is Red-ன் வாசகர்கள், எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ள முயல்வது ஒரு வகையான அறிவீனம் எனும் செக்கூரேயின் கருத்தை நினைவுகூர்வார்கள். இந்தக் காட்சியில் நான் மனமொத்துப் போவது என்னுடைய குட்டிக் கதாநாயகன் ஓரனுடன் அல்ல அவனை செல்லப் பரிகாசம் செய்யும் அவன் அம்மாவுடன்தான். இன்னுமொரு அறிவீனத்தைப் புரிய அதாவது, ஓரனைப் போல நடந்துகொள்ள அனுமதிப்பீர்களேயானால் எழுத்தாளனுக்கு மருந்தாகப் பயன்படும் கனவுகள் வாசகனுக்கும் அவ்வாறே பயன்படக் காரணம் என்னவென்று விளக்க முற்படுவேன். ஒலிக்கும் தொலைபேசி, வாழ்வின் இடர்ப்பாடுகள், தேவைகள், துன்பங்களிலிருந்து தொலைவேயிருந்து நல்லபடியாக நான் எழுதிக் கொண்டிருந்தால் தன்னிச்சையாக மிதக்கும் என் சொர்க்கத்தை இயக்கும் விதிகள் எனது குழந்தைப் பருவத்து விளையாட்டுக்களை எனக்கு நினைவூட்டுகின்றன.

எல்லாமே எளிமையாகிவிடுகின்றன. வீடுகள், கார்கள், கப்பல்கள், கட்டடங்களையும் என்னால் ஊடுருவிப் பார்க்க முடிகிறது. காரணம் எல்லாமே கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளதைப் போலுள்ளன. காரணம் அவை தங்கள் ரகசியங்களை எனக்கு சொல்லத் தொடங்கியுள்ளன. என்னுடைய வேலை விதிகளைச் சொல்லிவிட்டு கேட்டுக் கொண்டிருப்பதுதான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நடப்பவற்றை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது, என்னுடைய கதைமாந்தர்களுடன் கார்களிலும் பஸ்களிலும் ஏறி இஸ்தான்புல்லைச் சுற்றிவருவது, என்னைக கண்ணீர் சிந்த வைத்த இடங்களை புதிய விழிகளோடு பார்ப்பது, இவ்வாறு செய்கையில் அவற்றை மாற்றுவது என் வேலை, சந்தோஷமாக இருப்பது, காரணம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கையில் (குழந்தைகள் போல்) நான் எதையேனும் கற்றுக் கொள்கிறேன்.

கற்பனைத்திறன் மிக்க நாவலாசிரியனின் முக்கிய குணம் ஒரு குழந்தையைப் போல இவ்வுலகை மறந்துவிட முடிவதுதான். பொறுப்பற்றுத் திரிந்து அதில் சந்தோஷமடைவது, அறிந்த உலகின் விதிகளிடமும் சட்டங்களிடமும் விளையாடுவது. அதே நேரம் தன்னிச்சையான தனது கற்பனை ஓட்டங்கள் பிற்பாடு தனது வாசகர்களை நாவலுள் கட்டற்றுத் திரியவிடும் ஆழ்ந்த பொறுப்புணர்வையும் தொட்டுவர வேண்டும். நாள் முழுவதும் அவன் விளையாடிக் கழிக்கலாம். ஆனால் வேறு யாரைவிடவும் மிகுந்த பொறுப்புள்ளவன் என்ற எண்ணம் அவனுள் ஆழப் பதிந்திருக்கிறது. காரணம் குழந்தைகளைப் போல விஷயத்தின் மையத்தை நேரடியாக அவனால் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் சுதந்திரமாக விளையாடிய விளையாட்டுக்கு விதிகளை வகுக்கும் தைரியம் வந்த பிறகு தனது வாசகர்களும் அந்த விதிகளுக்குள், அந்த மொழிக்குள், அந்த வாக்கியங்களுக்குள் அதனாலேயே அந்தக் கதைக்குள்ளும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள் என உணர்கிறான். நன்றாக எழுதுவதென்பது வாசகனிடம் "அதே விஷயத்தை நானே சொல்லப்போகிறேன், ஆனால் அந்த அளவுக்கு குழந்தைத்தனமாக இருக்க மாட்டேன்" எனச் சொல்வதுதான்.

நான் ஆராயும், உருவாக்கும், விரிவுபடுத்தும் இந்த உலகம். போகிறபோக்கில் விதிகளை வகுப்பது, எங்கிருந்தோ காற்று வந்து என் கப்பற்பாய்களை நிரப்பக் காத்திருப்பது, என் வரைபடத்தை ஆழ்ந்து நோக்கியபடி இருப்பது - இவையெல்லாம் எனக்கு மட்டுமே சொந்தமான குழந்தைத்தனமான அறியாமையிலிருந்து பிறந்தவை. இது எல்லா எழுத்தாளர்களுக்குமே நடக்கிறது. எழுத்து தடைபட்டு நிற்கும்போது திடீரென எழுதத் தூண்டும் ஒரு உந்துதல் தோன்றும் அல்லது முன்பு எழுதுகையில் இதே உந்துதல் தோன்றி அதை எழுத முடியாமல் போன நாவலின் பகுதிக்கு நான் திரும்புவேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் இந்த வாதை பொதுவானது. மற்றவர்களுடையதைக் காட்டிலும் என் துன்பம் குறைவானது என எண்ணுகிறேன். விட்ட அந்த இடத்திலிருந்து மீண்டும் தொடங்க முடியாமல் போகையில் நாவலில் இருக்கும் இன்னொரு இடைவெளியை நோக்கிப் போகிறேன். காரணம் என் வரைபடத்தை மிகக் கவனமாக நான் பார்த்திருக்கிறேன். என்னால் நாவலின் இன்னொரு பகுதியை எழுதத் தொடங்க முடியும். இது அவ்வளவு பெரிய விஷயமில்லை. கடந்த மழைக்காலம் பல்வேறு அரசியல் விவகாரங்களில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கையில் இதே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நாவல் எழுதும் விஷயத்தின் மீது ஒளியைப் பாய்ச்சும் ஏதோவொன்றைக் கண்டுபிடித்ததாக உணர்ந்தேன்.

என் மீதான வழக்கு, நான் மாட்டிக் கொண்ட அரசியல் சிக்கல்கள் நான் விரும்பியதை விடவும் கூடுதல் அரசியல் உணர்வுள்ள, அதிகக் கரிசனமுள்ள, பொறுப்புள்ள நபராக என்னை மாற்றியதை உணர்ந்தேன். வருத்தமேற்படுத்திய நிகழ்வுகள், அதைவிடவும் வருத்தமுற்ற மனம் - இதை ஒரு புன்னகையோடு சொல்லலாம். அது இன்றி எந்த நாவலும் சாத்தியமாகாத குழந்தைத்தனமான அறியாமைக்குள் என்னால் நுழைய இயலாமைக்கு இதுதான் காரணம்.... "இது புரிந்துகொள்ளக்கூடியதுதான், எனக்கு இதுபற்றி வியப்பு ஏதும் இல்லை" சம்பவங்கள் மெதுவே தொடங்கியபோது நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். என் பொறுப்பற்றத்தனம், குழந்தைத்தனமான விளையாட்டுப் புத்தி, குழந்தைத்தனமான நகைச்சுவை இவையெல்லாம் ஒருநாள் திரும்பி வரும், அப்போது அமர்ந்து மூன்று வருடங்களாக எழுதிவரும் இந்த நாவலை நான் முடிக்க முடியும். இருந்தும் தினசரி காலை, பத்துலட்சம் இஸ்தான்புல்வாசிகளை விடவும் முன்னதாக எழுந்துவிடுவேன். நள்ளிரவின் மௌனத்துள் முடிக்கப்படாமல் அமர்ந்திருக்கும் நாவலுக்குள் நுழைய முயற்சிப்பேன்.

நான் என்னையே வருத்திக் கொண்டேன். காரணம் அன்புக்குரிய என் இரண்டாவது உலகத்துக்குள் நான் நுழைய முயன்றேன். மிகவும் வருத்திக் கொண்டபிறகு நான் எழுத விரும்பிய நாவலின் பகுதிகளை என் மூளைக்குள்ளிருந்து பிடுங்குவேன். பிறகு அவை தாமாகவே தம்மை எழுதத் துவங்குவதைக் காண்பேன். இவை நான் எழுதும் நாவலின் காட்சிகள் அல்ல, முற்றிலும் வேறான ஒரு நாவலின் காட்சிகள். வேலைப்பளுவும் வறண்ட மனநிலையுமான அந்தக் காலைப்பொழுதுகளில் என் முன்னே நான் காண்பது மூன்று வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் அல்ல. வேறொரு நாவலின் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கும் காட்சிகள், வாக்கியங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் வினோத விவரங்கள்தான். பிறகு ஒரு குறிப்பேட்டில் இந்த வேறொரு நாவலின் பகுதிகளை ஒன்று சேர்த்தும், இதற்கு முன் எனக்குத் தோன்றாத எண்ணங்களைக் குறித்தும் வைக்கிறேன். இந்த வேறொரு நாவல் இறந்துபோன சமகால ஓவியர் ஒருவரின் ஓவியங்களைப் பற்றியதாக இருக்கும். அந்த ஓவியரை நான் மனக்கண்முன் கொண்டு வந்தபோதும் அவரது ஓவியங்களைப் பற்றி மட்டுமே என் சிந்தனை சென்று கொண்டிருக்கிறது. பல டநாட்களுக்குப் பின், அந்தக் கடினமான நாட்களில் ஒரு குழந்தையின் விளையாட்டுத்தனத்தை ஏன் என்னுள் கொண்டிருக்க முடியவில்லை. இனியும் என்னால் குழந்தைத் தனத்துக்கு திரும்ப முடியாது, ஆனால் ஒரு ஓவியனாகி தொடர்ந்து ஓவியங்களை வரைந்தபடியே இருக்க கனவு கண்ட அந்த நாட்களுக்குத்தான் (இஸ்தான்புல்லின்- நான் விவரித்தபடி) என் குழந்தைப் பருவத்துக்குத்தான் நான் திரும்பமுடியும்.

பிற்பாடு என் மீதான வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. நான் மூன்று வருட காலத்தைச் செலவிட்டிருந்த நாவலுக்குத் திரும்பினேன். குழந்தைப் பருவத்துக்குத் திரும்ப இயலாமல் என் குழந்தைப் பருவத்து உணர்ச்சிகளுக்குத் திரும்பிய அந்நாட்களில் எனக்குள் தோன்றிய அந்த நாவலை எழுத இப்போது திட்டமிட்டுள்ளேன். இந்த அனுபவம் நாவல் எழுதுவதென்ற மர்மமான கலை பற்றிய முக்கிய விஷயங்களை எனக்குக் கற்றுத் தந்தது.

மிகப்பெரும் விமர்சகரும் இலக்கியக் கொள்கையாளருமான வுல்ஃப்காஸ் ஐஸரது ‘உள்பொதிந்த வாசகன்’ என்ற கொள்கையை எடுத்துக்கொண்டு - எனக்கேற்ற வகையில் சற்றே அதை மாற்றிக்கொண்டு - இதை நான் விளக்குவேன். ஐஸர் அற்புதமானதொரு வாசக மைய இலக்கியக் கொள்கையை உருவாக்கினார். ஐஸரது கொள்கைப்படி நாவலின் அர்த்தம் பிரதியிலோ, அதன் சூழல் பொருத்தப்பாட்டிலோ இல்லை இவை இரண்டுக்கும் இடையே எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது. ஒரு நாவலின் அர்த்தம் அது வாசிக்கப்படுகையில்தான் வெளிப்படுகிறது. உள்பொதிந்த வாசகன் எனக் குறிப்பிடும்போது அந்த வாசகனுக்கு சிறப்பானதொரு பணியை அவர் அளிக்கிறார்.

ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த நாவலைத் தொடராமல் இன்னொரு நாவலின் காட்சிகள், வாக்கியங்கள், விவரங்களைக் கனவு கண்டுகொண்டிருந்தபோது இந்தக் கொள்கை எனக்குள் ஓடியது. அது எனக்குச் சொன்னது என்னவென்றால் எழுதப்படாத ஆனால் கற்பனை செய்யப்பட்ட, திட்டமிடப்பட்ட நாவலுக்கும் (வேறு வார்த்தைகளில் சொன்னால் முடிக்கப்படாத எனது நாவலுக்கும்) ஒரு உட்பொதிந்த ஆசிரியன் இருக்கிறான். அந்த நாவலின் உட்பொதிந்த ஆசிரியனாக மாறும்போதுதான் அந்த நாவலை என்னால் முடிக்க முடியும். அரசியல் விவகாரங்களில் நான் மூழ்கியிருக்கும்போது அல்லது - என்வாழ்வில் அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்துவிடுகிறது - என் எண்ணங்கள், பணம் செலத்தப்படாத எரிவாயு ரசீதுகள், ஒலிக்கும் தொலைபேசிகள், குடும்ப ஒன்று கூடல்கள் இவற்றால் சிதறிவிடுகின்றன.

என் கனவுகளில் பொதிந்திருக்கும் நாவலின் ஆசிரியனாக என்னால் ஆக முடிவதில்லை. கடினமானதும் நீண்டதுமான அரசியல் ஈடுபாட்டு நாட்களில் நான் எழுத ஏங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான அந்தப் புத்தகத்தின் உட்பொதிந்த ஆசிரியனாக என்னால் மாற முடிவதில்லை. பிறகு அந்த நாட்கள் கடந்தன. நான் ஏங்கியிருந்தவாறே என் நாவலுக்குள் நுழைந்தேன். நாவலை முடிக்கிற தருணத்தை நெருங்கிவிட்டோம் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். (இந்த நாவல் ஒரு காதல் கதை. 1975க்கும் தற்போதைக்கும் இடையில், இஸ்தான்புல்லின் பணக்கார சமூகத்தில் அல்லது நாளேடுகளில் குறிப்பிடுவது போல ‘இஸ்தான்புல் சமூகத்தில்’ நடப்பது) இவற்றையெல்லாம் கடந்து வந்தபின், ஏன், கடந்த முப்பது ஆண்டுக்காலமாக என் எல்லா சக்தியையும் நான் எழுத ஏங்கும் புத்தகங்களுக்கு உட்பொதிந்த ஆசிரியனாக இருக்க செலவழித்திருக்கிறேன் எனப் புரிந்து கொண்டுள்ளேன். இது முக்கியமானது. ஏனென்றால் நான் பெரிய, தடிமனான, பகட்டான நாவல்களையே எழுத விரும்புகிறேன். அதோடு நான் மிக மெதுவாக எழுதுகிறேன். ஒரு புத்தகம் எழுதுவது பற்றிக் கற்பனை செய்வது கடினமல்ல. நான் அதிகமும் அவ்வாறு செய்கிறேன். என்னையே வேறு ஒரு நபராக நினைத்து கற்பனையில் அநேக நேரத்தை செலவிடுகிறேன். ஆனால் கடினமான விஷயம் உங்கள் கனவுப் புத்தகத்தின் உட்பொதிந்த ஆசிரியராக இருப்பதுதான்.

புகார்கள் எதுவும் வேண்டாம். ஏழு நாவல்களை வெளியிட்டுள்ள நிலையில், அது சற்றே வேலை வாங்குவது என்றாலும் கூட, நான் திடமாகச் சொல்வேன். என் கனவுகளிலுள்ள புத்தகங்களின் ஆசிரியனாகக் கூடிய திறமை எனக்கு இருக்கிறது. புத்தகங்களை எழுதிவிட்டு அவற்றைக் கடந்து வந்தது போலவே அந்தப் புத்தகங்களை எழுதக்கூடிய எழுத்தாளர்களின் ஆவிகளையும் கடந்து வந்துவிட்டேன். இந்த ஏழு உட்பொதிந்த ஆசிரியர்களும் என்னைப் பிரதிபலிப்பவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் இஸ்தான்புல்லினூடாக, என்னுடையதைப் போன்றதொரு ஜன்னல் வழியாக, வாழ்வையும் உலகையும் அறிந்தவர்கள். இந்த உலகில் உட்புறம் வெளிப்புறமாகவும், வெளிப்புறம் உட்புறமாகவும் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள். அதன்மட்டில் உறுதியாய் இருப்பவர்கள். அதனாலேயே விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தையின் உள்ளார்ந்த அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் அதை விவரிக்கிறார்கள்.

இன்னுமொரு முப்பதாண்டு காலத்துக்கு என்னால் நாவல்களை எழுத முடியும் என்பதுதான் தற்போது என்னுடைய மிகப்பெரிய நம்பிக்கை. இதை சாக்காக வைத்து என்னைப் பல புதிய நபர்களுக்குள் பொருத்திக் கொள்வேன்.
(துருக்கியிலிருந்து ஆங்கிலத்தில் மௌரீன் ஃப்ரீலி)

("உட்பொதிந்த ஆசிரியன்"/புது எழுத்து/ஜனவரி - ஏப்ரல் 2007)

Sunday, 12 July 2009

அபத்தக் கவிதைகள் இரண்டு


அபத்தக் கவிதைகள் என்ற தலைப்பில் இணையத்தில் வாசித்த கவிதைகள் இரண்டு இங்கே, உடன் தமிழிலும்.
Revival

Blades of grass set aspark by the morning dew
New day with tides of hope pouring in
Cool mist in the air surrounds me
Envelops me with renewal
Can’t contain my happiness
God is in the air
Today is the first day ..of the rest ..of my life
…but first let me cover this rotting corpse with some tarp
மீட்சி


காலைப் பனியில் மினுங்கும் புல்லின் இதழ்கள்
நம்பிக்கையின் பேரலைகள் கொட்டும் புதிய நாள்
குளிர்ந்த மூடுபனி என்னைச் சூழ்கிறது
புதுப்பித்தலால் எனை மூடுகிறது
என் ஆனந்தத்தை அடக்க முடியவில்லை
கடவுள் காற்றிலிருக்கிறார்
இதுதான் முதல் நாள்...
எஞ்சியிருக்கும் என் வாழ்வின் முதல் நாள்
... ஆனால் அதற்கு முன்
நாற்றமெடுக்கும் இந்த சடலத்தைக் கொஞ்சம்
தார்ப்பாலின் கொண்டு மூடவிடுங்கள்.


Milkman

My friend the milkman
You’re my link to the nostalgic past
A simpler time
A time to remember
No looking over our shoulders
No double barreled doorlocks
I’m glad you’re still around old friend
You are a gentlemen indeed

One question though
Was it you who laced yesterday’s delivery with arsenic?
பால்காரன்


என் நண்பண் பால்காரன்
ஏக்கம் மிகு என் கடந்த காலத்துக்கு
தொடர்பு நீதான்
அது மிக எளிமையான காலம்
நினைவுகூரத் தக்க காலம்
சந்தேகமாய் திரும்பித் திரும்பிப்
பார்க்க வேண்டியதில்லை
இரட்டைத் தாழிட்ட கதவுகளுமில்லை
மிக்க சந்தோஷம் இன்னமும்
பழைய நண்பண் நீ அருகிலேயே
உண்மையிலேயே நீயொரு கணவான்
இருப்பினும் ஒரு கேள்வி,
நேற்று ஊற்றிய பாலில்
விஷம் கலந்தது நீயா?

Thursday, 9 July 2009

சில கேள்விகள்


மே 28,2009 அன்று எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை அப்படியே கீழே தருகிறேன். அது முன்பின் அறிமுகமான பெயரோ மின்னஞ்சல் முகவரியோ அல்ல. பிரபாகரன் மரணச் செய்தி குறித்த என் வலைப்பதிவுக் கவிதைக்கு எதிர்வினையாகவே இம்மின்னஞ்சல் வந்திருக்கவேண்டும்(சில காரணங்களுக்காக அக்கவிதையை இரண்டொரு நாட்களில் எடுத்துவிட்டேன்). இக்கடிதம் முதலில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது. பிறகான வாசிப்புகளில் தர்மசங்கடத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆட்பட்டேன் என்றால் அது மிகையில்லை. இக்கடிதத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போன்ற கேள்விகளுக்கு ஈழத்தில் நடந்து முடிந்திருக்கும் போர் மற்றும் ஈழத்தமிழரது வருங்காலம் குறித்து பல தளங்களிலும் பேசியும் செயலாற்றியும் வந்த,வரும் ஒவ்வொரு இந்தியத் தமிழரும் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது என்றே நினைக்கிறேன். 


அயலகத் தமிழ்ச் சகோதரர்களுக்கு!

ஐயன்மீர்! ஈழத்திலுள்ள உங்கள் சகோதரத் தமிழர்களுக்காக நீங்கள் துடிக்கும் துடிப்பும், வெறும் இனஅபிமானத்தால் குறுகியிராத உங்கள் இதயம் மானுட அவலம் கண்டே விம்மிக் கண்ணீர் உகுப்பதைக் காட்ட உங்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியும் கண்டு நெகிழ்கிறேன். நான் குறிப்பிடுவது அரசியல்வாதிகளை அல்ல. கவிதை எழுதியும், கட்டுரைகளில் இனவுணர்வாய்க் கரைந்துருகியும், களச்செயற்பாட்டின் தேவையுணர்ந்து ஒன்றுகூடிப் பொங்கியும் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களைச் சொல்கிறேன். இந்த நாட்டில் தமிழ்மக்கள் மீண்டும் ஒரு பேரழிவுக்குச் சென்றுவிடாதிருக்க நீங்களும்தான் எங்கள் நம்பிக்கை. போரில் வெல்வதை விட போரைத் தவிர்ப்பதே மானுட அவலத்தை நிறுத்தும் வழி என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை.

உங்கள் சகோதரத் தமிழர்கள் படும் கஷ்டங்கள் குறித்து நீங்கள் பரிதவிப்பதும், துயரின் எல்லையில் எதிரிகளைப் பஸ்மமாக்கிவிட முடியாதா என்று ஆவேசமுறுவதும், வரலாற்றின் தொடர் குரூரம் குறித்து வருந்துவதும், ஈழச் சகோதரர்களுக்கு ஏதாவது செய்யமுடியாதா என்று ஏங்குவதும், தன்னுயிரை மாய்த்து தமிழர்களுக்கு உணர்வூட்டுபவரை எதிர்த்து மறுக்காது, ஊக்குவிக்கும் நிர்ப்பந்தமுமாக.... உங்கள் அறவுணர்வை, மனிதாபிமான நெகிழிதயத்தை எல்லோரும் அறிந்து கொள்ளும்படியாகவே நடந்து வருகிறீர்கள். உலகத் தமிழரின் பாராட்டும் வந்து குவிந்தபடி! (தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் நானும் சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். ஈழச்சகோதரர்கள் மீதான உங்கள் அன்பாவேசத்தையும், துயர்துடைக்கும் துடிப்பையும் அனுபவிக்கக் கிடைத்ததில்லை என்பது என் கூடுதல் எதிர்பார்ப்பால் நேர்ந்த குறையாக இருக்கலாம். தவிர, கொத்துக் கொத்தாக மக்களைப் படுகொலையாக்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து நான் தப்பி வேறு வந்துவிட்டேன்.)

இருந்தாலும், ஆறு கோடிச் சகோதரர்களின் தமிழ்ப்பாசக் கொந்தளிப்பு எனக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு ‘கெத்’தை ஏற்படுத்துவதாகவே இன்னும் இருக்கிறது. மீண்டும் ஆயுதங்களைத் தூக்கி, இன்னமும் அந்தப் புறநானூற்றுத் தமிழ்வீரம் ஈழத்தில்தான் இருக்கிறது என்ற புளகாங்கிதத்தை அடையவும் - உலகத் தமிழருக்கு வழங்கவும் மனம் பொங்குகிறதுதான். ஈழத்தமிழன் பொருட்படுத்தப்படுவது இந்த வீரத்திற்கும் அதனால் விளையும் அழிவுக்குமாகத்தான் என்று உணர்த்தியே வந்திருக்கிறீர்கள். நாம் இதை எப்படி விட? சிங்களவரோடு சமாதானமாக இந்தத் தீவில் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கலாம் எனும்போதே, ‘இவன் ரத்தக்காட்டேரிகளின் அடிவருடும் துரோகிகளில் ஒருவனாக இருப்பான் போலிருக்கிறதே’ என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடுகிறதல்லவா? சண்டையின்றி வாழ்தல் பற்றிய உரையாடலை உங்களிடம் திறக்கவே முடியவில்லை.

முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து மாபெரும் இடப்பெயர்வாக வன்னிக்கும், பின்னர் உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பு வரைக்கும் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்மக்கள் அடைந்த கதி யாருக்குத்தான் துயரம் தராமலிருக்க முடியும்? புலிகளின் பாதுகாப்புக்காக இறுதியில் அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் இருக்கலாம். அதேசமயம் வன்னிக்கு வெளியே இலங்கைக்குள் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்திருந்தார்களே.... அவர்களுடன் இந்த மக்களைப் போய்ச் சேர விடாமல், அதற்காக ஒரு வரி பேசாமல் ஏன் ஒரேயடியாய்த் தமிழ்வீரச் சாகடிப்புக்குத் துடித்தீர்கள்?

சிறிது சிறிதாய் வவுனியா முகாம்களுக்கு வந்துசேர்ந்த மக்களை நெருப்புக்குள் போய் விழுந்துவிட்டவர்களாய்க் கதைகள் கட்டி, அச்சுறுத்தி புலிகளுடன் வன்னிக்குள் வைத்து அழித்து முடிப்பதற்கே பொங்கினீர்களே ஏன்? வன்னிக்கு வெளியே இருந்த தமிழ்பேசும் மக்கள் என்ன கருதியிருந்தார்கள் என்பதை அறிய முனைந்தீர்களா? அல்லது வவுனியா முகாம்களுக்கு வந்து சேர்ந்துகொண்டிருந்த மக்கள் கருதுவதை அறியவாவது முயற்சி செய்தீர்களா?

புலிகளிடம் நம்பிக்கை வைக்க முடியாதவர்கள் - விமர்சனமுள்ளவர்கள் எல்லோரும் துரோகிகள் என்ற சுலபமான முடிவுக்கு வர உங்களைத் தூண்டியது எது? புலியல்லாத தமிழர், முஸ்லிம்களை விடுங்கள். பெரும்பான்மைச் சிங்களவர் ராட்சசர்கள்தான், அவர்களுடன் பேச்சு சாத்தியமில்லை ‘அடி’தான் என்ற உங்கள் தொடர்ஊக்குவிப்புக்கான மானுடப்புரிதல் ஆய்வுமுறை என்ன? கடலுக்கு அப்பால் நடக்கும் வன்முறைகளின் வாதை, ஹீரோவின் வெற்றிக்காக ஆவலுற்றபடி திரைப்படமொன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் கிளர்ச்சியைத் தந்ததா?

இலங்கையில் தமிழர்களை விடச் சிறுபான்மை இனமாகத் தங்களைக் கருதும் முஸ்லிம்களை வசதியாக மறந்தபடியும், அவர்களது இருப்பை மறுத்தபடியும், ஜனநாயகத் தமிழ்க் குரல்களை அறுத்தபடியும் வன்முறைப் பாசிசப் போராட்டத்திற்கு உரமூட்டும் விதமாக நீங்கள் வடித்த கண்ணீரை மனுக்குலம் மீதான அக்கறையாகச் சொன்னதுதான் அதிர்ச்சியூட்டியது!

அதைவிடுவோம். உங்கள் சொந்த இனத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டு அவர்கள் அவலங்களுக்காக வருந்துகிறீர்கள் என்று பார்த்தாலும், உங்கள் நாட்டு அரசை ஒரு இம்மியளவும் உங்களால் அசைக்க முடியாது என்பது உள்ளிட்ட குவலயமாச் சூழ்நிலையை நன்கறிந்த நீங்கள், முட்டாள்ச் சண்டியர்களாய்க் காட்டிக்கொண்டுவிட்ட புலிகளுக்குச் சொல்லியிருக்க வேண்டிய ஆலோசனை என்ன? சரி, அவர்களிடம் யாரும் பேசமுடியாது என்பது தெரிந்தால், மக்களைக் காப்பாற்றப் பேசியிருக்க வேண்டியது என்ன? ‘அந்தக் காலம்’ போல் இறுமாப்பாய் அழிந்து முடிவது தவிர வேறு புத்திசாதுரியமே தமிழனுக்கு வராதா? நீங்கள் கடைசிநேரம் இயலாமையைச் சொல்லி அழுததுதான் முழுக்க முழுக்க உண்மையா?

தனிநாடு சாத்தியமில்லை என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா? அறிந்தும் புலிகளுக்கு உசாரேற்றியே வந்தீர்களே ஏன்? சிங்களவர், முஸ்லிம்கள், மலையகத் தோட்டக்காட்டாரையெல்லாம் வேலைக்காரர்களாகவே வைத்திருந்த உயர்குடித் தமிழர்களும், உலகப்புலித் தமிழர்களுமாய்ச் சேர்ந்து, அப்பாவி மக்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்துச் சிங்களவனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற வீம்புக்காகவல்லவா ஒத்துத் தாளம் போட்டீர்கள்!

ராட்சசர்களிடம் சிக்கி அழிந்துகொண்டிருக்கும் அப்பாவித் தமிழர் என்ற சித்திரம் உங்கள் மனிதாபிமான முகத்தை முன்நீட்டிக் கொண்டிருப்பதற்கு உதவியதால், வேறு எதையும் காதில் போட்டுக் கொள்ளாமலும் கண்டுகொள்ள விரும்பாமலும் நீங்கள் துடித்த துடிப்பில் நேர்ந்த அழிவு பற்றி இப்போதாவது நீங்கள் சிந்தித்துணரக் கூடுமா? அல்லது மீண்டும் அனுதாப உசாரேற்றியே அழித்து முடிக்கத் திருவுளமா?

ஈழத்தில் இப்போது மிஞ்சியிருக்கும் நொந்த தமிழ்மக்களை நீங்கள் இப்போதே மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்திருப்பீர்கள். இவர்களுக்குப் புது வாழ்வளிப்பதற்கும் போர் ரணங்களை ஆற்றுவதற்கும் நீங்கள் ஆர்த்தெழ மாட்டீர்கள்; டெல்லி வரை போய்க் கொடும்பாவி எரித்துக் குரலெழுப்ப மாட்டீர்கள். உங்கள் ஆவேசமெல்லாம் புலிப்போரினால் தமிழ்ப்பெருமையை நிலைநாட்டுவதில் இருந்ததே தவிர, தமிழ்மக்களைக் காப்பாற்றுவதில் இருக்கவில்லை.

உங்களது தனிநாட்டுக் கனவுக்குப் பரிசோதனைப் பிராணிகளாய் அழியத் தயாராயிருக்கும் ஈழத்தமிழர்களே உங்களுக்குத் தேவை. நொந்தது போதும் இனி பகையையும் வெறுப்பையும் வீணே வளர்க்காமல் மற்றவர்களைச் சகித்து வாழ்வதைப் பார்க்கலாம் எனும் மக்கள் உங்களுக்கு எந்த உபயோகமுமற்றவர்கள். புலிகளுடன் நின்ற மக்களே ஈழத்தமிழர்களாகவும், அவர்களது பிடிக்குள்ளிருந்து தப்பி இலங்கையில் விரவியிருந்த தமிழர்கள் துரோகத் தமிழர்களாகவும் உங்கள் கருத்தில் இருந்ததை நீங்கள் காண்பித்தே வந்திருக்கிறீர்கள். கடைசிநேரம் ‘உங்களோடு முட்டாள்த்தனமாகச் சாகவிரும்பவில்லை’ என்று தப்பி வந்து படையினரிடம் சரணடைந்த தயா மாஸ்டரும் ஜோர்ஜூம் மற்றும் ஏராளம் புலி உறுப்பினர்களும் மக்களும் கடற்புலித்தளபதி சூசையின் மனைவியும் பிள்ளைகளும் ‘காட்டிக்கொடுத்த’ துரோகிகள் என்றுதான் இன்னுங்கூட உங்களால் தமிழ்மானக் கதை பேச முடிகிறது.

ராணுவம், சட்டங்கள், பெரும்பான்மை அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் அது தர்ம ஆட்சி நடத்துகிறது என்று சொல்வதிலோ, அதன் செயல்களைக் காபந்து பண்ணிப் பேச முற்படுவதிலோ நீதிநியாயம் சிறிதுமிருக்காது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். ஆனால் அதனோடு போரிட்டு அழியும்படி மக்களை உசாரேற்றுபவர்களுக்கு, அதன் சாதகபாதகங்களை அலசிப் பார்க்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். வெற்று உணர்ச்சியாவேசங்களைத் தாண்டிய சிந்தனையும் கள ஆய்வும் இருக்க வேண்டும். ரோசம், வீரம், இனப்பெருமை என்ற உணர்ச்சிகரப் பொங்குகைகளைத் தூண்டி விடும்போது, அதனால் நேரும் மக்கள் அழிவுப் பேரவலத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும். அதற்கான பழி முழுவதையும் எதிரிமீது சுமத்தி, மனிதாபிமானக் கண்ணீர் ஓலமிட்டே நம் தரப்புப் போரைத் தீவிரப்படுத்தி விடுவது மக்களைப் பாதுகாக்கும் நடைமுறை அல்ல. மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் காண்பிக்க வேண்டியது அறிவார்ந்த பொறுப்புணர்வே தவிர, கும்பலோடு சேர்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போடும் கூப்பாடு அல்ல.

போதும்... சகோதரர்களே போதும்! இப்போதும் உங்கள் வீரமரபுப் பெருமித ஆவேசங்களையும் மாற்று இனவெறுப்புக் கக்கல்களையும் எமக்கு ஆதரவாக என்று சொல்லிப் பொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். நேற்றுவரை தொடர்ந்திருந்த, தன் வாளால் தலை துணித்துப் பலி கொடுத்துப் படை நடத்தும் ‘பொற்கால மிச்சம்’ முடிந்ததுக்குப் பிறகு, இங்கே கொலைகள் இல்லை, வேட்டுக்கள் இல்லை, அழிவோலங்கள் இல்லை. இது தற்காலிகமானதுதான் தமிழர்களே என்று புது வியாக்கியானத்தோடு வந்துவிடாதீர்கள். நிறைய இழந்துவிட்டோம். நிறைய களைத்துவிட்டோம். எதிரிகளைத் தொடர்ந்து கட்டமைத்து ஏசியபடியே நம் இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. சகிப்பும், பிறரோடு சேர்ந்து வாழும் புரிதலும், நம் வீம்புகளை விடுதலுமே நம்மை வாழவைக்கும். அதற்கு வேண்டியதைப் பேசுங்கள். அதற்கான முயற்சிகளில் உங்களால் ஏதேனும் செய்ய முடிந்தது இருப்பின் அதற்கு முயலுங்கள்.

தமிழகத்தின் முதல்வரும் அவரது கட்சியினருமே மத்திய அரசாங்கம் அமைவதில் பெரும்பங்காற்றியதாகப் புகழப்படும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா பாருங்கள். அமைச்சுப் பதவிகள் கேட்டு டெல்லி செல்லும் முதல்வரிடம், முகாம்களே வாழும் ஊர்களாகி விட்ட ஈழமக்களுக்கும் இந்தியா செய்யக்கூடிய உதவிகள் பற்றிய ஆலோசனைகளை ஞாபகப்படுத்த முடியுமா பாருங்கள். மத்திய அரசின் தூதுவர்கள் இங்கு வந்து நிலைமைகளைப் பார்த்து நிதியுதவி அறிவித்துச் செல்கிறார்கள். அவர்களோடு தமிழக முதல்வரும் கட்சியினரும் முடிந்தளவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வறிஞர்கள் என்று நீங்களும் இங்கே வந்து அகதிமுகாம்களிலுள்ள உங்கள் சகோதரர்களைப் பார்க்க மனம் கொள்ளுங்கள். நிலைமையை நேரில் வந்து காணுங்கள். தமிழக முதல்வரூடாக மத்திய அரசை அணுகி இச்சமயத்தில் இதற்கு முயன்றால் உங்களை யாரும் தடுக்கப் போவதில்லை. ஏற்கனவே தமிழக முதல்வருக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கும் இங்கிருந்து அரசபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் அமைதிவாழ்வில் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை உதவிகளாக்க இது சந்தர்ப்பம். வாருங்கள்.

தமிழ்த்தீவிரவாதத் தடையற்ற இப்போது, இங்கு மக்களுக்குச் செய்யக்கூடிய உதவிகளைச் செய்வதற்கான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள். முடிந்தால் அதற்காகவும் ஒருமுறை டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா பாருங்கள். இந்திய அரசின் உதவிகளை அறிவுறுத்தல்களை இலங்கை அரசு மறுக்கப் போவதில்லை. ஈழத்தமிழர்கள் மீண்டும் போரிட்டு அழிவுகளுக்குச் செல்லாமலிருப்பதற்கான அதிகாரப்பகிர்வை வலியுறுத்துங்கள். மத்திய அமைச்சரவையில் பொறுப்புகள் பெற்றுக்கொள்ள தன் கூட்டணி வலுவை பிரயோகிக்க முடிந்த தமிழக முதல்வருக்கு இதற்காகவும் மத்திய அரசை வற்புறுத்தும் வலு இப்போதிருக்கிறது. அதற்கு ஆகுமானதைச் செய்யுங்கள். உங்களிடமுள்ள ஈழத்தமிழ் ஆதரவுப் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி எங்களுக்கு அமைதியான வாழ்வளிக்க உதவுங்கள். ‘சிங்களவன் தமிழருக்கு ஒண்ணுந் தரமாட்டான்’ என்று முனகிவிட்டு உங்கள் அலுவல்களைக் கவனிக்கப் போய்விடாதீர்கள்.

ஈழத்தமிழர்கள் மீது உங்களுக்கிருக்கும் அக்கறை அரசியல்வாதிகளினுடையதைப் போல வெறும் ஓட்டு அக்கறையல்ல என்பதை நானறிவேன். அவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தால்தான் உங்கள் அனுதாபம் பொங்கும் என்பதல்ல உண்மை. அவர்கள் இனிமேலும் அழிவுகளுக்குச் செல்லாமல் அவர்களும் உங்களைப் போன்றதொரு இயல்புவாழ்க்கைக்குத் திரும்புவதற்காகவும் நீங்கள் ஆவேசமுடன் செயற்படுவீர்கள் என்றே நம்புகிறேன். உங்களது அக்கறையும் அனுதாபமும் ஈழத்தமிழர்களுக்குப் போரற்ற அமைதி வாழ்வை ஸ்திரப்படுத்தித் தருவதிலும் தொடர்ந்திருக்கும் என்பதே என் நம்பிக்கை.

போதும், வன்முறையால் வன்முறையை வரவழைத்து அழிந்தது போதும். வன்முறையற்ற வழியில் எங்கள் உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு வேண்டிய பின்பல நம்பிக்கையை எங்களுக்குத் தாருங்கள். ராட்சசர்களோடு தமிழ்மக்கள் வாழமுடியாது என்று வீர உசுப்பேற்றி எங்களை மேலும் அழித்துவிடாதீர்கள் சகோதரர்களே!

தமிழகமே! தமிழகமே! ஈழத்தமிழர்களை என்ன செய்யக் கருதி இருக்கிறாய்?

Friday, 26 June 2009

MICHAEL JACKSON: THE COLOUR OF MUSIC FADES INTO HISTORY


The news of Michael Jackson’s sudden demise made this morning so gloomy to me and I tried hard to hold back tears as his images were flashed on the television. Years back when I first heard a MJ song I mistook his for a female’s voice. It was husky and vulnerable. The lyrics really didn’t get me anything. Soon I knew that I could never be a part of the multitude known as MJ fans. But MJ’s life and his persona were of endless intrigue to me. Why ‘The King of Pop’ preferred to sport a Caucasian face hiding his own African one?

As Jon Pareles writes in ‘The New York Times’ the Caucasian face he achieved through
painstaking surgeries just remained to be a mask to him. Perhaps he wished to hide behind this mask. May be he tried to hide the pain of being faceless. It could be a misjudgment on the part of MJ to have concluded that music alone cannot be a thing to transcend race, religion, cast and colour. If that was a folly, I think he deserved to afford to it. The follies of extraordinary genius’ have poetic justice embedded in them and they remain in a territory where common sense is absurdity.

Some years ago when I was going through a book review in the TLS I learnt how the African people tried to straighten their usually coiled hair. They try from clips to heated iron bars to straighten their hair but with little or no success. MJ went just a bit ahead. If colour was the thing that haunted him so much one might have told him that he is just of the colour of music- practically colourless, and raceless, religionless too. True to a extraordinary genius he got himself entangled in controversies, fought legal battles, allegedly owes his death to overdose of prescribed medicines (Oh, Elvis!), finally he has left behind the legacy of popular music that enthralled millions along with debits to the tune of 1,800 million dollars.

May his soul rest in peace.

Saturday, 9 May 2009

சுதந்திரம் - ஜெயந்த மகாபாத்ரா


ஜெயந்த மகாபாத்ரா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில் முக்கியமானவர்.அவரது கவிதைகள் உலகளாவிய அங்கீகாரம் பெற்றவை. (முதன் முதலாக ஓர் ஆங்கில கவிதைத் தொகுப்புக்காக) சாகித்ய அகாதமி விருது (Relationship-1986) உள்ளிட்ட பல்வேறு தேச, சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றவர். ‘சந்திரபாகா’ இதழின் ஆசிரியர். இந்தியாவின் வறுமையும், அதனால் அல்லலுறும் மக்களும், தொடரும் அரசின் கையாலாகாத்தனமும் ஒருவித சர்ரியலிஸத் தன்மையுடனும், உள்ளடங்கிய சீற்றத்துடனும் அவர் கவிதைகளில் இடம் பெற்றபடியே உள்ளனர்.ஒரிஸ்ஸா அவரது மாநிலமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2004 செப்டம்பரில் கட்டக்கில் அவரை சந்தித்து உரையாடியதை என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதுகிறேன்.



சிலநேரம்
நதியில் எங்கோ
மிதந்துகொண்டிருக்கும்
என் தேசத்தின்
உடலைப் பார்த்துக்கொண்டிருப்பதாய்
உணர்கிறேன்

தனிமையில்,
கரையில் பாதி வெட்டுப்பட்டு
தன்னுள் தானே புதைந்துபோன
மூங்கிலாகிறேன்

புராதன ஜன்னல்களும்
இறந்துகொண்டிருக்கும் மனிதர்களும்
சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்
இடையறாத பிரார்த்தனைகளுக்கிடையே
அடிக்கடி தலை வணங்கியபடி

உலகின் மீது தங்கள் கை படாமலே
அதை மாற்றிவிட சுதந்திரம் வேண்டி
குழந்தைகள் அழுகின்றன

என் குருட்டுத்தனத்தினால்
இவர்களில் யாரிடமேனும்
திரும்பச் சென்றுவிடுவேனோ
என பயப்படுகிறேன்
என் முகம்
தொலைந்துபோகாமலிருக்க வேண்டுமானால்
நான் தனித்திருக்கவேண்டியது அவசியம்

தொலைவே மலை கிராமம் ஒன்றில்
இந்த ஐம்பதாண்டுகளும்
ஒரு வேளை உணவுக்கான
கொஞ்சம் அரிசியுமின்றியிருக்கும்
அந்தப் பெண்ணையும்
அவள் குழந்தையையும்
நான் சந்திக்கக் கூடாது

பாராளுமன்றக் கட்டடத்தின்
உயர்ந்த வெள்ளைத்தூண்களில் படிந்த
அஸ்தமனங்களின் சிவந்த ஒளியையும்
நான் பார்க்கக்கூடாது

அருகே மனிதன் எழுப்பிய
புதிய கோவிலில்
பூசாரிக்குத்தான் தெரியும்
சுதந்திரம் என்னவென்று
கடவுளோ இருட்டில் பதுங்கிக்கிடக்கிறார்
யாரோ வேற்றாள் போல

வெளிச்சத்துக்காக ஏங்கிக் கிடக்கிறேன்
தினம் நான்
நிழல்களோ தொடர்ந்து இருப்பதற்கான
நியாயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கின்றன

நானறிந்த ஒரே சுதந்திரத்தை
அடைய விழைகிறேன்
அது தனிமையில் உடல் கொள்ளும் சுதந்திரம்
அமைதியான மென்பாறையின் சுதந்திரம்
அமாவாசை இருளின் சுதந்திரம்
உறங்கும் கடவுளின்
ஓடைப் படுகைகளின் சுதந்திரம்

நான் சாம்பல்களைவிட்டுத் தள்ளியிருக்கிறேன்
அவற்றை என் நெற்றியில் பூச முயலாதீர்கள்.

(Freedom – Jayantha Mahaptra-2007 ; Courtesy: ‘The Statesman’)