Monday 23 March 2009

சங்கர ராம சுப்ரமணியன் கவிதை,ஆங்கில மொழிபெயர்ப்புடன்.


ரயில் கடல்
எனது மகள்
ரயிலைப் புதிதாகப் பார்க்கிறாள்
ரயில் எங்களைக் கடக்கும்போது
அவள் உணரும் திகைப்பை
நானும் பகிர்கிறேன்.
நமது நிறுத்தங்களை எல்லாம்
இணைத்துக் கடக்கும்
சக்கரங்களும் பயணப்பெட்டிகளுமான
ஓர் ஊர்தி மட்டும் அல்ல
ரயில்
அவளும் உணர்கிறாள்.
நகரங்கள்
சிறிய ஊர்கள்
மலைகள் நீர்ப்பொய்கை மனிதர்களூடே
பயணித்தாலும்
நிலவறையிலிருந்தும் எழும்
முதிய அசரீரியா ரயில்
விழாக்களின் போதும்
வாழ்வுவளச் சடங்குகளின் போதும்
மங்கலம் இசைக்கும்
நாதஸ்வரத்துடன்
ரயிலில் முதல் பயணம் தொடங்கியது
மங்கல வாத்திய இசையின்
மீந்தவொலி
ரயிலின் தடதடப்பில்
இன்னும்தான் மிச்சமுள்ளது.
மனிதர்தம் கையாள்தலில்
உடல் சிறுத்து
வேட்டை திரிய
வீடு நோக்கித் திரும்பத் தொடங்கிய
வளர்ப்புப் பிராணிகள்
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து
தமது மேய்ச்சலைத் தொடரும்
ரயில்
பிறழ இயலாத பெருந்துக்கத்துடன்
விரைந்து செல்லும்
சில முகங்கள் வெல்ல முடியாதவை
முகங்கள் எல்லாம் கடக்கவே இயலாதவை
மரணமும் பேதமும்
இணை பிரியாத தண்டவாளங்கள்
கடலுள் உறைந்திருக்கும்
கடல்களின் பேச்சை
கடல்-ரயில் தன் இருட்டில்
தடதடத்து உரைப்பதை
முழுமையும்
என் மகளிடம் சொல்ல முடியாது.

*

நிலையத்தில்
பயணப்பெட்டிகள் விடுத்து
தனியே செல்லும் என்ஜினைப் பார்த்து
என் மகள்
ரயில் உறங்கப் போகிறதென்கிறாள்
நாங்களும் வீடு திரும்ப வேண்டும்.
--------------------------------

('அச்சமென்றும் மரணமென்றும் இரண்டு நாய்க்குட்டிகள்' என்ற சங்கர ராம சுப்ரமணியனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பிலிருந்து)

வெளியீடு:

குருத்து,
பிச்சாண்டாம் பாளையம்,
பொலவக்காளி பாளையம்-அஞ்சல்,
கோபிச்செட்டிப்பாளையம்.
ஈரோடு மாவட்டம்-638 476.

விலை: ரூ.45.

email: shankarashankara@gmail.com
-------------------------------------------------------
ஆங்கில மொழிபெயர்ப்பு

TRAIN SEA

SHANKARA RAMA SUBRAMANIAN.

My daughter
Sees the train for the
First time.
I too share the
Amazement
She feels
As the train goes past us.
Train is not just a vehicle
With coaches and wheels
That moves on joining all our stations,
She feels too.
Even if it journeys through
Towns
Villages
Mountains
Water-brimming tanks and
People,
Is train an old oracle
From the cellar.
During festivals
And ceremonies meant for
Prosperity in life
First journey by train began
With the auspicious
Playing of Nadhaswaram.
The leftovers of auspicious music
Still remains in the rattling of the train.
The domesticated animals
Which have emaciated at the handling of human,
Gone awry of hunting
And have started returning to home
Look up with astonishment
And go on with their grazing.
Train hurries up with great ruefulness
At its inability to derail.
Some faces are unconquerable
Some are ever unsurpassable.
Death and dissimilarity are inseparable rails.
I cannot tell my daughter
The whole of the talking of seas
Frozen within the sea and
What the sea - train tells through its rattling, in the darkness.

*
My daughter says
Seeing the engine that
Moves alone
Leaving the coaches at station
That the train goes to sleep.
We need to return to home too.
(Translated by Asadha, as a tribute to Shankara Rama Subramanian’s latest collection of poems from which the poem is taken. )

நண்பர்களுக்கு...

இக் கவிதை மொழிபெயர்ப்பை செம்மை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் இன்னும் இருப்பதாகவே எண்ணுகிறேன். பிரதிகளை ஒப்புநோக்கி, செம்மையாக்குவதற்கான வழிமுறைகளைக் கூற அன்புடன் அழைக்கிறேன்...

Saturday 14 March 2009

நித்திரை யாசிக்கும் கடவுள்



நித்திரை
யாசிக்கும் கடவுளை
யாழிசைக்கும்
குருட்டுப் பிச்சைக்காரனுக்கருகில்
கண்டேன்

ஏந்திய அவன் கைகளில்
கிரணம் மிதக்கும் விடியல்கள்
தீர்மானமேதுமற்ற உச்சிப் பொழுதுகள்
பிரியம் தீராத அந்திகள்
பிரிய மனமில்லாத முன்னிரவுகள்
கூடவே
கடிதே இரவைக் கடக்க உதவும்
உபாயங்கள்

தெய்வீகத்தின் தொலைவில்
கடவுளொரு
வாஞ்சையுண்டாக்கும் குழந்தை
நித்தியத்துவத்தின்
ரேகைகளோடும் அவன்
கண்கள்
அயர்ச்சியூட்டும்
ஞானசாகரங்கள்
தத்தளித்து தத்தளித்து
கணப்பொழுது மூடி
கணப்பொழுது திறக்கும்

ஏராளம் தூஷனைகள்,
நிராகரிக்கப்பட்ட வரங்கள்
பல்லாயிரம் வேண்டுதல்கள்
கொஞ்சமே சில்லரையிருக்கும்
பைக்குள் அவன் துழாவுகிறான்
பதினைந்து மில்லி கிராமை
முன் வந்தவன்* கொண்டு சென்றுவிட்டிருந்தான்
என் அளவை நான்
களவு கொள்கையில்
உலகங்களனைத்தின் இரவும்
தீராத் துக்கத்துடன்
கொட்டுகிறது குருடனின் யாழிலிருந்து
துடித்தடங்கும் கடவுளின்
வலக்கண்ணிலிருந்து
அரவமின்றி
நழுவுகிறேன் நான்.
------------------
(முன் வந்தவன்* - பிரம்மராஜன்)

Friday 13 March 2009

இரண்டு கவிதைகள்


ஒன்று

வெள்ளிக் கிண்ணங்கள்
மிதந்தலையும் உன் நதியில்

தீண்டாக் காற்றுக்கும்
பூச்சொரியும் உன் வனத்தில்

மரணமும் பரிதாபமுற்றழும்
உன் பெருங்கருணையின் தேசத்தில்

என் பேச்சு எப்போதும்
மௌனம்தான்

செந்தாழம் பூக்கள் நிறைந்து
நீண்டதுன்
யௌவனத்தின் பொன் வீதி

தொலைத்த என் பருவங்களை
அழைத்து வந்தது
நீ பார்க்காத
உனதொரு பார்வை
நீ பேசாத
உனதொரு சொல்

மௌனத்தைத் தொடரும்
மௌனத்திற்குப் பின்
பதைத்து நிற்கிறது
பேசாத என் நேசம்

ஆயினும் ஆன்பே,
உதடுகள் கருகிடினும்
முத்தமிடுவேன்
தீயென எனைச் சுடும்
உன் மௌனத்தை.



இரண்டு


இரவு மெல்ல
அமைதி கொள்கையில்

எனக்குள்
பெருகத் தொடங்குகின்றன
கனவுகள்

ஆயிரம் முகங்கள்
தோன்றிக் கலையும்
ஒரு கனவில்
உன் முகம் தேடி
உறக்கம் கலைந்தேன்

சில்வண்டுகள் கொண்டாடும்
தீராத இவ்விரவில்
நட்சத்திரங்கள் கொண்டாடும்
உன் முகத்தை
ரசித்தவாறு விழித்திருப்பேன்...

Saturday 7 March 2009

எப்போதும் கொடுக்கும் மரம்








எப்போதும் கொடுக்கும் மரம்

ஆங்கில மூலம் : ஷெல் சில்வர்ஸ்டைன்.
தமிழில் : அசதா

ஒரு காலத்தில் மரம் ஒன்று இருந்தது.

அது ஒரு சிறுவனை மிகவும் நேசித்தது.

தினமும் அவன் அந்த மரத்திடம் வருவான்.

இலைகளை சேகரிப்பான்.

அவற்றைக் கொண்டு ஒரு கிரீடம் செய்வான்.

அதை அணிந்துகொண்டு காட்டுக்கு அரசன் நானென ஆடுவான்.

மரத்தின் மீதேறி கிளைகளில் ஊஞ்சலாடுவான்

பழங்களைப் பறித்துத் தின்பான்

அவர்கள் இருவரும் ஒளிந்து விளையாடுவார்கள்

களைத்துப் போகும்போது மரத்தின் நிழலில் படுத்து அவன் உறங்குவான்

அந்தச் சிறுவனும் மரத்தை மிகவும் நேசித்தான்

மரம் மிக மகிழ்ச்சி கொண்டது.

காலம் கடந்தது

சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனான்

இப்போது அனேக நேரம் மரம் தனிமையில் நின்றது.

அப்போது ஒருநாள் சிறுவன் மரத்திடம் வந்தான்

மரம் அவனிடம் சொன்னது, ‘வா, வந்து என் மீது ஏறு, என் கிளைகளில் ஊஞ்சலாடு, என் பழங்களைப் பறித்து உண், என் நிழலில் விளையாடு, மகிழ்ச்சியாக இரு’.

‘உன் மீது ஏறி விளையாட நான் இன்னும் சிறு பையன் இல்லையே. நான் எனக்குத் தேவையானவற்றை வாங்கி விளையாட விரும்புகிறேன். எனக்குப் பணம் தேவை.’ என்றான் சிறுவன்.

‘ஆனால் என்னிடம் பணம் இல்லையே. என்னிடம் இலைகளும் பழங்களும் மட்டுமே இருக்கின்றன. என் பழங்களைப் பறித்துச் சென்று நகரத்தில் விற்றால் உனக்குப் பணம் கிடைக்கும். அதை வைத்து மகிழ்ச்சியாக இரு’.

சிறுவன் மரத்திலேறி பழங்களைப் பறித்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. மரம் வருத்தமடைந்தது.

ஒருநாள் சிறுவன் திரும்பவும் வந்தான்.மரம் மகிழ்ச்சியில் ஆடியது. அது சொன்னது
‘வா, வந்து என் மீது ஏறி என் கிளைகளில் ஊஞ்சலாடு, மகிழ்ச்சியாக இரு.’

‘மரங்களில் ஏறி விளையாட எனக்கு நேரமில்லை’ சிறுவன் சொன்னான். ‘என்னை கதகதப்பாக வைத்துக்கொள்ள எனக்கொரு வீடு வேண்டும். எனக்கு மனைவி வேண்டும், குழந்தைகள் வேண்டும் அதன்பொருட்டு எனக்கொரு வீடு தேவை. உன்னால் எனக்கொரு வீட்டைத்தர முடியுமா?’

‘என் கிளைகளை வெட்டி அவற்றைக் கொண்டு வீடொன்றைக் கட்டிக் கொள். நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.’

சிறுவன் மரத்தின் கிளைகளை வெட்டி வீடு கட்ட எடுத்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. திரும்ப அவன் வந்தபோது மகிழ்ச்சியில் மரத்திற்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

‘வா, வந்து விளையாடு’ மெல்ல முணுமுணுத்தது மரம்.

‘நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும், உன்னால் எனக்கொரு படகைத் தர முடியுமா?’ அவன் கேட்டான்.

‘என் நடு மரத்தை வெட்டி அதிலிருந்து படகொன்றை செய்துகொள், அதில் நீ நீண்ட தூரம் பயணம் செய்யலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்றது மரம்.

அதன்படியே அவன் நடு மரத்தை வெட்டி அதைக் கொண்டு படகொன்றைச் செய்து அதில் பயணம் செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது, ....ஆனால் உண்மையான மகிழ்ச்சி அல்ல அது.

மிக நீண்ட காலம் கழித்து சிறுவன் திரும்பி வந்தான். ‘மன்னிக்க வேண்டும், உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை-என்னிடம் பழங்கள் இல்லை’.

‘பழங்களைத் தின்னுமளவுக்கு என் பற்களுக்கு வலுவில்லை’ சிறுவன் சொன்னான்.

‘என் கிளைகளும் என்னைவிட்டுப் போய்விட்டன, அவற்றில் நீ ஊஞ்சலாட முடியாது.’

‘கிளைகளில் ஊஞ்சலாடும் வயதை நான் கடந்து விட்டேன்.’ என்றான் சிறுவன்.

‘என் நடு மரமும் போய்விட்டது, இனி என் மீது நீ ஏற முடியாது.’ மரம் சொன்னது.

‘நான் மிகவும் களைத்துவிட்டேன், என்னால் மரம் ஏற முடியாது.’ சிறுவன் சொன்னான்.

‘மன்னிக்க வேண்டும், உனக்கு எதையாவது கொடுக்கத்தான் விரும்புகிறேன், ஆனால் என்னிடம் எதுவும் மீதமில்லை.இப்போது நானொரு வெறும் மரத் திண்டு மட்டுமே, என்னை மன்னித்துவிடு.’ என்றது மரம்.

‘எனக்கு இப்போது பெரிதாக எதுவும் தேவையில்லை, அமர்ந்து ஓய்வெடுக்க அமைதியான ஓர் இடம், அவ்வளவுதான். நான்
மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்’ என்றான் சிறுவன்.

‘நல்லது,’ எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தன்னை நீட்டிக்கொண்டு மரம் சொன்னது, ‘வயதான அடிமரத் திண்டு அமர்ந்து இளைப்பாற உகந்தது. வா வந்து அமர்ந்து இளைப்பாறு.’

சிறுவன் அவ்வாறே செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

----------------------

Sunday 1 March 2009

போர் ரசிகன்

அசதா





போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்

என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல

அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்

அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது

யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்

நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்

மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்

சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்

மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்

தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்

குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை

இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்

இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை

(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)


இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....