Wednesday 11 May 2011

ஜுவான் கிமரிஸ் ரோஸா : முடிவற்ற பாதை.






நவீன பிரெஸிலியப் புனைகதையின் விவாதத்துக்கு அப்பாற்பட்ட முன்னோடி ஜுவான் கிமரிஸ் ரோஸா (1908-67). சிறு விவரக் குறிப்புகள் முதல் பெரும் தகவல்களின்பாற்பட்ட நாவல் வரை அடங்கிய ஏழு புனைகதைத் தொகுதிகளில்,  வரையறுக்கப்பட்ட இலக்கிய வெளிகளில் பயணித்து கலை வெளிப்பாட்டின் புதிய திசைகளைக் கண்டறிந்தவர். புனைகதைக்கான பிராந்திய மற்றும் பிரபஞ்சத்துவ அணுகுமுறைகளுக்கிடையேயான எல்லைகளை ஏற்க மறுத்த ரோஸா, பிரெஸிலிய இலக்கிய மொழியில் ஒப்பற்ற மாற்றத்தையும் அதன் மூலம் விமர்சனத்தின் ஓயாத அலைகளையும்  ஏற்படுத்தினார். பரீட்சார்த்தவாதம், யதார்த்த மீறல், உள்ளுணர்வு வாதம், பிரபஞ்ச பிராந்தியத்துவம், கருத்துமுதல்வாதம் எனப் பல சொல்லாடல்கள் இவரது ஒரு படைப்பை வகைப்படுத்த பயன்படுத்தப்பட்டன. பிரெஸிலின் உள்ளடங்கிய பகுதியிலமைந்த கடந்த காலத்தைச் சேர்ந்ததான, பரந்த, மர்மங்கள் நிறைந்த, மினாஸ் கெரெய்ஸின் 'செர்தாவோ' இவரது புனைவுலகு. ரோஸாவின், உள்ளடங்கிய முன்னேற்றமற்ற இந்நிலப்பகுதி நாடோடிகள், தொன்ம உருவங்கள் மற்றும் அபத்த சாகசக்காரர்களின் வாழிடமாக இருந்தது. sertaoவின் வறண்ட நிலங்கள் துப்பாக்கியேந்திய கொலைகாரர்களுக்கும் நாட்டுப்புற தத்துவவாதிகளுக்கும் இடையேயான பிரசித்திபெற்ற யுத்தங்களின் களமாயமைந்தன. மினாஸ் கெரெய்ஸின் உள்ளடங்கிய பிரதேசங்களின் பிரத்தியேகமான மொழி வேறுபாடுகளை அடித்தளமாகக் கொண்டமைந்த தனது தனித்துவமானதும் மிகக் கவித்துவமானதுமான புனைவு நடையின் உருவாக்கத்தில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்தார் ரோஸா. கவனமாக உருவாக்கப்பட்ட மொழியும் உண்மைகளின்பாற்பட்டதாக அமையாத கதைக்களன்களும் சமகால பிரெஸிலியப் புனைகதையாளர்களிடையே ஜுவான் கிமரிஸ் ரோஸாவுக்கு தனியானதொரு இடத்தை அளித்தன.


1946ல் தனது முதல் கதைத் தொகுதியான sagarana வெளிவந்தபோது அதுவரை பிரெஸிலில் பிரதானமாக இருந்துவந்த யாதர்த்த பிராந்திய எழுத்துக்களுக்கு சவால் விடுத்து அவற்றைக் கடந்தும் சென்றார். இத்தொகுப்பில் புதுவிதமானதொரு பாணியும் கதைகூறலில் வலுவானதொரு மறுஅமைப்பாக்கமும் இருந்ததை விமர்சகர்கள் கண்டனர்.தனது இரண்டாவது கதைத்தொகுதியான Corpo de Baile (Corps de Ballet) ஐ அவர் 1956ம் ஆண்டில்தான் வெளியிட்டார்.பொதுவான தலைப்பின் கீழமைந்த  ஏழு கதைகள் அவரது முதல் தொகுப்பின் மொழிநடை மற்றும் தனித்துவம் இவற்றின் இன்னும் மேம்பட்ட தன்மையைக் கொண்டிருந்தன. இதே ஆண்டில் அவரது முக்கியப் படைப்பான The Devil to Pay in the Backlands (Grande Sertao: Veredas) நாவல் வெளிவந்தது.லத்தீனமெரிக்க நாவல்களுள் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதுமொழியமைப்பு நாவல் பிரெஸிலிய இலக்கியத்தின் முதல் மீமெய்யியல் நாவலாகக் கருதப்படுகிறது. வரலாறு படைத்த இந்நாவலைப் போன்று பிரெஸிலிய இலக்கிய விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்ட நாவல் வேறில்லை.1962ல் The Third Bank of  the River and  Other Stories (Primeiras Estorias) யுடன் ரோஸா மீண்டும் சிறுகதைக்குத் திரும்பினார். அடுத்ததான Tutameia (Terceiras Estorias), Trifle (Third Stories)-1967 தொகுப்புகளில் கதைச் செறிவு பிரதானமாயிருந்தது. அவர் இறப்பதற்கு முன்பே வெளியீட்டுக்கு தயாரான ஆனால் அவர் மரணத்துக்குப் பின்பே வெளிவந்த தொகுப்பு These Stories (Estas Estorias)-1969. அவரது கடைசி வெளியீடு பத்திரிக்கைகளில் வெளியான ஆக்கங்கள், நாட்குறிப்புகள், பல்வேறுபட்ட குறிப்புகள், சிறு இலக்கியக் குறிப்புகள், கவிதைகள் இவற்றின் தொகுப்பாக அமைந்த Hail, word (Ave, Palavra)-1970.


Sagranaவை வாசித்தவர்கள் ரோஸாவுடைய மொழியின் புதுமையினாலும் வீச்சினாலும் வசீகரிக்கப்பட்டார்கள். Seratoவின் நாட்டுப்புறப் பேச்சின் தனித்துவமான மொழிக்கூறுகளை பிரெஸிலிய மரபுத் தொடர்களுடன் கலந்து அவர் கணக்கற்ற புதிய வார்த்தைகளை உருவாக்கியிருந்தார். இதில் இன்னும் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் கவிதைகளுக்குரிய மோனை நயம், உள்ளார்ந்த லயம் இவற்றை அவர் உரைநடையிலும் பயன்படுத்தியிருந்தமைதான். சில பகுதிகள் உரைநடையில் அமைந்த கவிதைகளாகவே உள்ளன. Woodland Witchery (Sao Marcos) கதையில் கதைசொல்லி மூங்கில் தடிகள் மீது எழுதப்பட்ட சில கவிதைகளைக் காண்கிறான். முன்பின் அறியாத அந்தக் கவிஞனுக்கு தனது பதிலாக பத்து அசிரிய மற்றும் பாபிலோனிய அரசர்களது பெயர்களை இன்னொரு தடியில் எழுதி வைக்கிறான். இப்பெயர்கள் ரோஸாவின் கதைசொல்லி சொல்வது போல தம்மளவில் லயமும் அழகும் கொண்ட கவிதைகளாகும்.

ரோஸாவின் Sagarana தொகுப்பின் கதைகள் பிரெஸிலின் இரண்டாம் தலைமுறை நவீனவாதிகளான (இந்த இரண்டாம் தலைமுறை நவீனத்துவம் 1928ல் தொடங்கியது) யதார்த்த, பிராந்திய நாவலாசிரியர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டின. ஜோஸ் லின் தோ ரெகோ மற்றும் ஜோர்ஜ் அமதோ போன்றவர்கள் வடகிழக்குப் பிராந்தியத்துக்கேயுரிய மொழி, கலாச்சாரம் மற்றும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துதலின் வாயிலாக தங்கள் நாவல்களுக்கு பிரெஸிலியத்துவம் ஊட்ட முற்பட்டனர். சமூக-வரலாற்று கதாபாத்திரங்களை உருவாக்கும் முகமாக நாட்டுப்புற பேச்சு வழக்கைப் பயன்படுத்தினர் ஆயினும் தங்களுக்கேயுரியதான மொழிநடையை உருவாக்கத் தவறினர். அவர்களது படைப்புகள் மேம்போக்கான சமூக யாதார்த்தத்தை நேர்க்கோட்டு அமைப்பில் சித்தரித்தன. ரோஸாவோ பிராந்தியப் புனைவெழுத்தில் தருக்கம் மற்றும் அறிவுசார் சாய்வுகளை அறவே விடுத்து எண்ணவோட்டத்தினால் அமைவுறும் ஒரு கால ஒழுங்கைக் கடைபிடிக்கிறார்.பிராந்திய குணங்களைக் பிரதிபலிக்கும்முகமாய் மட்டுமன்றி ஒரு புதிய இலக்கியப் போக்கை உருவாக்கும் விதமாய் மொழியை அவர் விளையாட்டுத்தனமாய்க் கையாளுகிறார்.


The Devil to Pay in the Backlands நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரேயொரு கதைசொல்லியின் மூலமாகவே நமக்கு அறியத்தரப்படுகின்றன. சார்புத்தன்மையும் நிச்சயமின்மையும் அக்கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் தெரிகின்றன. தனது ஆன்மீக ஆலோசகரின் அறிவுரைகள் நம்பத்தகுந்தனவாயுள்ளன ஆனால் போதுமானவையாக இல்லை என்கிறான் ரியோபால்டோ. தலைவர்களும் தொண்டர்களுமாய் கணக்கற்ற பேர் துப்பாக்கியேந்தித் திரிகிறார்கள், ஒரே நேரத்தில் அவர்கள் கொலைகாரக் கொள்ளையர்களாகவும் நியாயமான காரணத்துக்காகப் போராடும் நேர்மையான கதாநாயகர்களாகவும் தெரிகிறார்கள். தனது பரம வைரியான ஹெர்மோஜீன்ஸை தீவினையின் உருவம் எனத் தான் சொன்னதையே கேள்விக்குள்ளாக்குகிறான் ரியோபால்டோ. அவன் மூடுபனி என அழைக்கும் தனது நெருங்கிய சகாவான டயாடோரிமைப்பற்றி அதிகம் கவலைப்படுகிறான். அவனுடனான சாத்தியப்படாத காதல் ரியோபால்டோவைப் பல ஆண்டுகளுக்கு வாதைக்குள்ளாக்குகிறது. இரண்டு கொள்ளைக் கூட்டத்தாருக்கிடையே நடக்கும் சண்டையொன்றின் முடிவில் டயாடோரிம் ஒரு பெண் எனத் தெரியவருகிறது. டயாடோரிமை விமர்சகர்கள் பலவழிகளில் விளங்கிக்கொள்ள முற்படுகிறார்கள். ரியோபால்டோவின் காவல் சம்மனசாக, தீவினைக்கான கவர்ச்சியாக (ஏவாள்), பிளாட்டோவின் மர்மவாதமாக, பல வழிகளில்.தனது நாவலின் கட்டுமானத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து விஷயங்களை எடுத்துக்கொள்கிறார் ரோஸா;குறிப்பாக லுஸோ-பிரெஸிலிய கலாச்சாரம், பண்டைய மற்றும் நவீன அய்ரோப்பியத்  தத்துவம், கீழைத்தேய மதங்கள். ரியோபால்டோவின் சிந்தனை பேச்சு ஆகியன பலதரப்பட்ட விஷயங்களால் கட்டமைக்கப்பட்டவை.அவனது வருணனைகள் கிறித்தவக் கற்பனாவாதம், கிரேக்க கொள்கைவாதம், மீமெய்யியல் கதைகள், அறிவியல் மற்றும் இந்துமத சுயமறுப்பு ஆகியவற்றின்வழியே புரிந்துகொள்ளத் தக்கவை.


ஜுவான் கிமரிஸ் ரோஸா பிரெஸிலிய இலக்கியத்தில் கடவுளாகப் போற்றப்படுகிறார். ஆனால் சமகால லத்தீனமெரிக்க புனைவெழுத்துப் பெருக்கத்தில் அவர் முழுமையான அங்கீகாரம் பெறவில்லை. பிரெஸிலில் அவருக்கிருக்கும் மரியாதை லத்தீனமெரிக்கா முழுவதிலும் இருப்பதில்லை. வருந்தத்தக்க ஸ்பானிய-அமெரிக்க, பிரெஸிலிய கலாச்சாரப் பிரிவினைகளோடு ஓரளவுக்கு ரோஸாவின் வெகு ஆடம்பரமான இலக்கிய நடையும் இதற்கு காரணமாயிருக்கிறது.The Devil to Pay in the Backlands நாவலும் The Third Bank of the River and Other Stories தொகுப்பும் மட்டுமே ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Corpo de Baile மற்றும் Tutameia ஆகியன இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. The Devil to Pay in the Backlands நாவல் ஒரு முடிவு இன்றி நிறைவடைகிறது. Don Quixote, Ulysses போன்ற பெரும் பிரபஞ்சத்துவப் படைப்புகளோடு வைக்கத் தகுந்த நாவல் இது.ரோஸா சொல்வது போல் ‘'செர்தாவோவில் கோயத், தாஸ்தாயெவ்ஸ்கி, ஃப்ளபேரது மொழி பேசப்படுகிறது,  ரியோபால்டோ சொல்வதுபோல் ‘'செர்தாவோ'’ எல்லா இடத்திலும் இருக்கிறது.


சார்லஸ் ஏ. பெரோன்

தமிழில்:அசதா

ஜுவாங் கிமரிஸ் ரோஸாவின் சிறுகதை:



நன்றி: 'கல்குதிரை' பனிக்காலங்களின் இதழ். சிரிர்: கோணங்கி.