Sunday 2 October 2011

யுவான் ருல்ஃபோவின் எரியும் சமவெளி: அவலத் துயரின் அழகியல்.


அசாதாரண வாழ்நிலைச் சூழலில் அசாதாரண மக்களது வாழ்வை புனைகதையின் அசாதாரணமானதொரு வகைமாதிரிகளாகப் படைத்துத் தந்திருக்கும் தொகுப்பாக யுவான் ருல்ஃபோவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய எரியும் சமவெளி தொகுப்பைக் கூறலாம். வறட்சியும் வறுமையும் மேலிட்ட மத்திய மெக்ஸிகோவின் கடந்த நூற்றாண்டின் கொந்தளிப்பான முதல் கால்நூற்றாண்டும் அதைத்தொடர்ந்த ஏமாற்றமும் அவல நிலையின்பாற்பட்டதுமான காலகட்டமும் இக்கதைகளின் களமாக உள்ளன. 1910 முதல் பத்தாண்டுக்காலம் நடந்த மெக்ஸிகப் புரட்சியும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அரசுக்கெதிரான கத்தோலிக்க தீவிரவாதக் குழுக்களின் கலகமான கிறிஸ்டெரோக்களது கலகமும் நிகழ்ந்த இக்காலகட்டம் மெக்ஸிக வரலாற்றில் மிகுந்த நெருக்கடியான காலகட்டமாகும். புரட்சிகளும் கலகங்களும் மக்களை கொண்டு நிறுத்திய ஏமாற்றம் மற்றும் துயர் நிறைந்த வாழ்நிலையிலிருந்து தனது புனைகதைகளை ருல்ஃபோ படைக்கிறார். வறுமையாலும் துயராலும் வாழ்தலின் சுமையினாலும் அழுத்தப்படும் மனிதர்களது சித்திரங்களாக விரியும் அவை வாசகனை உலுக்குபவையாகவும் எக்காலத்துக்குமாக அவனைப் பின்தொடர்ந்து வந்து வாதைக்குள்ளாக்குபவையாகவும் உள்ளன.வெம்மைகூடி வறண்டுபோன, நம்பிக்கைகளழிந்த ஒரு நிலப்பரப்பின் நீட்சியாக அந்நிலத்தின் மனிதர்களும் மாறிவிட்டதான ஒரு தோற்றம் இக்தைகளினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பகட்டில்லாத தன் மொழியின் துல்லியத்தினாலும் இறுக்கமான கட்டமைப்பினாலும் அதிர்வூட்டும் யதார்த்தச் சித்தரிப்புகளாக இத்தோற்றத்தினை விஸ்தரிப்பதில் பெரும் ஆவல் கொண்டவராகவும் பேரளவில் அதில் வெற்றி காண்பவராகவும் ருல்ஃபோ இக்கதைகளில் காணப்படுகிறார்.

மக்காரியோவின் தன்மொழியாக அமைந்த ‘மக்காரியோ’ கதையில் சிதைவுண்ட மனதின் குழப்பமானதும் அரூபமானதுமான சித்திரங்களை தனது தனித்துவமான மொழி மூலம் வெளிக்கொணர்கிறார் ருல்ஃபோ. அதன்வழி அக்கதையில் வரும் ஞானத்தாய், ஃபெலிபா மற்றும் மக்காரியோ இவர்களது புற மற்றும் அக உலகு சார்ந்த படிம்மொன்றை உருவாக்குகிறார். ‘…என் எச்சிலைக் கொண்டு அவளைக் குணப்படுத்த முடியாதென்று நான் கண்டபொழுது, என் கண்களைக் கொண்டும் அவள் அழுவதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவினேன்’ என்பது போன்ற செவ்வியல் தன்மையுடையதான வரிகளமைந்த இக்கதையில் அவை ஆசியருடையதாக அல்லாமல் மனநிலை பிறழ்ந்த ஒருவனின் கூற்றாக கதையில் அதன் பொருத்தப்பட்டை அடைகின்ற விதத்தில் ருல்ஃபோ கதைமாந்தரது உணர்வையும் தனது மொழியையும் பிணைக்கும் விதம் அலாதியானது.

‘அவர்கள் தந்தது நிலம்’ கதையில் ஒன்றுக்கும் பயன்படாத நிலம், அதனை ‘மழை பெய்ய ஆரம்பித்தால், நீங்கள் பிடித்து இழுத்தால் வருவது மாதிரி சோளப்பயிர் கிடுகிடுவென வளர்ந்து விடும்’ எனக் கூறி அரசாங்கம் தந்துவிட்டுப் போகிறது. காற்று வீசி மேகம் திரளும்போதும் சபிக்கப்பட்ட அந்நிலத்தில் மழையென்று எதுவும் பெய்வதில்லை, ஒரேயொரு கணத்த துளியைத் தவிர. எதற்கும் பயன்படாத நிலத்தைக் கொண்டு என்ன செய்வது என்ற சோகத்தினை நேர்த்தியான வர்ணணைகளும் நுட்பமான உரையாடல்களும் கதையினூடாக நகர்த்திச் செல்வதை நாம் காண்கிறோம். ‘நாங்கள் மிகவும் ஏழைகள்’ கதையில் டாச்சாவின் மாட்டை பெருகி வரும் ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடுகிறது. இக்கதையில் ஆறும் அதன் வெள்ளமும் அது விளைவித்துப் போகும் அழிவும் டாச்சாவின் சகோதரனுக்குப் பொருட்டில்லை என்பது போல தனது ஒரே சொத்தான மாட்டை ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டதால், தனது மற்ற சகோதரிகளைப் போல டாச்சவும் கெட்டுப் போய்விடுவாளோ என்ற கவலையே பிரதானமாக இருக்கிறது. ஆறு உண்டாக்கும் பேரழிவின் பின்னணியில் டாச்சாவின் சகோதரனது இந்தக் கவலையை வைப்பதன் மூலம் ஆற்றின் அழிவுச் செயலை மட்டுப்படுத்தப்பட்ட பூதாகரத்தனத்துடன் ஆசிரியரால் காட்சிப்படுத்த முடிகிறது.

‘தால்பா’ கதையில் புனிதத் தலத்துக்குப் பாதயாத்திரை செல்லும் கூட்டத்தில் ஒருவன் நோய்பீடித்த தன் சகோதரன் மற்றும் அவனது மனைவியுடன் பயணிக்கிறான். மரணத்தை எதிர்கொண்டிருக்கும் சகோதரனுக்குத் துணையாக இவனும் சகோதரனது மனைவியும் செல்லும் பல நாள் பயணத்தில் அவனுக்கும் அவன் சகோதரன் மனைவிக்குமிடையிலான காதல் நமக்குத் தெரிய வருகிறது.இப்பயணம் எந்தப் பலனும் தராது என்பதை உணர்ந்தவர்களாய் தனது அண்ணன்/கணவனது ஆசையின் நிமித்தமாகவே அவர்கள் செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தவாறே அப்புனிதத் தலத்தில் அண்ணன் இறந்துபோகிறான். அதன் பிறகு நமது எண்ணத்துக்கு மாறாக அவர்கள் இறந்துபோனவனைப் பற்றிய எண்ணத்தால் தீவிர அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். ஒரு மரபான இந்தியக் கதையினது முடிவைப் போன்றவொன்றைக் கொண்டிருக்கும் இக்கதை மனித மனதின் ஆழ்மன விசித்திரங்கள் பற்றியதொரு கலாச்சாரங்கள் மற்றும் தேசங்கள் கடந்த பொதுமைப் பாட்டினை நாம் கருத இடமளிப்பதும் கூட.

‘எரியும் சமவெளி’ கதை புரட்சியின் போக்கில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பற்றியது. மெக்ஸிகோவின் ஆயுதமேந்திய முதலாளித்துவப் புரட்சி மனிதர்களை மலை மீதிருந்து வீசியெறியப்பட்ட கற்களைப் போலாக்கியதையும் அவர்கள் நிரந்தரமான அச்சத்திலும் துயரத்திலும் வாழ விதிக்கப்பட்டவர்களாக மாறியதையும் நுட்பமாக விவரிக்கும் கதை.

‘ருல்ஃபோவின் கதைகளில் மிக முக்கியமானதொன்றாக விமர்சகர்களால் கருதப்படும் ‘ அவர்களிடம் என்னைக் கொல்ல வேண்டாமென்று சொல்!’ கதை, வெளிப்படுத்தும் உணரச்சிகளிலும் விவரிக்கப்படும் உத்தியிலும் எளிமையான ஒரு கதையாகவே எனக்குத் தோன்றுகிறது. தொகுப்பின் ஏனைய கதைகளில் நிகழும் கொலைகள்,மரணங்கள் போலவே இக்கதையின் மரணமும் இயல்பான ஒரு மரணமாயிருக்கிறது.

‘நாய்கள் குரைக்கவில்லை’ சிறப்பானதொரு கதை. தந்தைக்கும் மகனுக்குமான உறவினை நுட்பமாகச் சித்தரிக்கும் இக்கதை அழுத்தமானதொரு முடிவைக் கொண்டுள்ளது. ‘அனாக்ளீட்டோ மோரோனஸ்’ இத்தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று. அங்கதமிக்க இக்கதை புனிதம், புனிதர்கள் குறித்த மக்களது மனக்கட்டுமானம், ஏதுவான சந்தர்ப்ப நிலைகளின் மூலமாக மக்களது அறியாமை மற்றும் பக்தி போன்ற பலகீனங்கள் மீது இவைகள் கட்டமைக்கப்படுவதையும் சிறப்பாக விவரித்திருக்கும் கதை.

ருல்ஃபோவின் கதையுலகம் பெரிதும் நம்பிக்கையின்மை, துரோகம், துயரம் ஆகிய அகக் காரணிகளாலும் வறட்சி, வெம்மை, சண்டை, தப்பியோடுதல் ஆகிய புறக் காரணிகளாலும் கட்டப்பட்டது. தீர்க்கமான பார்வையும், பிரக்ஞைபூர்வமாக நுட்பமும், துல்லியமும் கொண்ட மொழியும் அவரது கதைகளை முதல் வகைமாதிரிக் (prototype) கதைகளாக்குகின்றன. இக்கதைகள் சொல்லும் மொழியினாலும் நுட்பத்தாலும் புதிய வகைமாதிரிகளாக தம்மை அறிவித்துக் கொண்டாலும் அழகியல் ரீதியாகவும் வெற்றி பெறுபவை. இக்கதைகளின் இந்த அழகியல் தன்மையே இவற்றை ஒருவர் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதாக இருக்கக் கூடும்.தென்னமெரிக்க இலக்கியத்திலும் அதற்கு வெளியிலும் யுவான் ருல்ஃபோ என்ற புனைகதையாளர் பெற்றிருக்கும் இடம் ஏதோ தற்செயலானது அல்லது என்பதற்கு அவரது கதைகள் புனைகதையின் அனைத்துப் பரிமாணங்களிலும் தனித்துவமான கூறுகளைக் கொண்டு வாசிப்பின்பம் குறையாது விளங்குவதே சான்றாக இருக்க முடியும்.

ஏனைய லத்தீனமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள ருல்ஃபோ தவறவில்லை. உதாரணமாக கோர்த்தஸாரும் மார்க்வெஸூம் மொழியினை நடனமாட வைத்து அது சுழன்றாடும் அழகை ரசித்தார்களென்றால் ருல்ஃபோ கறாரான எஜமானராக மொழியிடம் வேலை வாங்குகிறார். எப்போதும் மொழியின் இம்மி பிசகாத பரிபூரணம் அவரது தேவையாயிருக்கிறது. சற்று பிசகினால் intellectual labour என்ற முத்திரை விழுந்துவிடக்கூடிய தனது எழுத்து முறையை நிறைவான இலக்கியப் பிரதிகளுக்கானவொன்றாக அவரால் மாற்றிக் கொள்ள இயல்வதையும் நாம் இங்கு கருத்தில் கொண்டாக வேண்டும். தனது புனைவுகள் வழியாக அவர் யதார்த்தத்துக்கும் இயல்புக்கும் அப்பாற்பட்டவொன்றைக் கட்ட முனைவதில்லை என்பதாலும் சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் அவலமிக்க மனிதர்களை அவர்களது வாழ்வின் வெம்மை குறையாமல் ஆடம்பரமில்லாத ஒரு மொழிக்குள் அடக்க முயன்றார் என்பதாலேயுமே அவரால் இது இயன்றிருக்கிறது.


இத்தொகுப்பை ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஜார்ஜ் டி. ஷேட் மற்றும் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் எஸ். பாலச்சந்திரன் ஆகியோரது விரிவான முன்னுரை மற்றும் பின்னுரைகள் யுவான் ருல்ஃபோவின் புனைவுலகுக்கான விவரமானதொரு வழிகாட்டுதலை வழங்கிவிடுவதனால் இத்தொகுப்புக்குள் வாசகன் தடையற்று நுழைவதும் கதைகளை சிரமமின்றி அணுகுவதும் ஏதுவாகின்றது. கவனமாக வடிவமைக்கப்பட்டு வெகு நுட்பமும் சிக்கனமுமான மொழியினால் இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட ருல்ஃபோவின் கதைகளுக்கான திறப்புக்களை இவை சாத்தியமாக்குகின்றன. இன்னொரு கோணத்தில் பார்க்கையில் விமர்சனப்பூர்வமாக இக்கதைகளை அணுக முயலும் ஒருவனது பார்வையில் மேலே சொன்ன விஷயங்கள் தமது தாக்கத்தை செலுத்துவனவாக அமைந்திருந்தாலும் அவற்றின் இன்றியமையாமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

மொழிபெயர்ப்பில் ஒரு வரியை அல்லது ஒரு சொற்டொடரை எடுத்துக்கொண்டு தமது சீரிய மொழியறிவின் அளவுகோல்களால் அது பிழையானதென்று நிறுவி அம்முழு ஆக்கத்தையுமே ஒன்றுக்கும் உதவாதது என நிராகரிக்கும் மேதமை சான்ற மதியாளர் நிரம்பிய நம் சூழலில் மொழிபெயர்ப்புப் பணி புரிவோரின் நிலை பற்றிச் சொல்லத் தேவையில்லை. எதிர்மறையான இச்சூழலில் எவ்விதப் பலனையும் எதிர்பாராதவர்களாய் இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களில் எஸ். பாலச்சந்திரன் அவர்களும் ஒருவர். தமிழுக்கு அரியதும் காத்திரமானதுமான பல படைப்புக்களை அவர் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘எரியும் சமவெளி’ மொழிபெயர்ப்பில் சவால்தரும் ஆக்கம். இதனை அவர் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். இதற்காக தமிழ் கூறும் நல்லுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.

7-5-11 அன்று நாகர்கோவிலில் லஷ்மி மணிவண்ணன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

Thursday 28 July 2011

ஆகஸ்ட் 21, கோவை 'அருவி' சந்திப்பு


அருவி

நமது ஆகஸ்ட் மாத சந்திப்பில்…
தமிழின் மொழிபெயர்ப்பு தளத்தில்,
ஒரு மொழிபெயர்ப்பாளன் சந்திக்கும் சவால்கள்,
சிக்கல்கள் மற்றும் சென்றடைய வேண்டிய இலக்குகள்……
குறித்த ஒரு சிற்றுரையும் தொடர்ந்து பார்வையாளர்களுடனான
கலந்துரையாடலும் நடைபெறும்.

'தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்'
வழங்குபவர்: திரு. அசதா

21 ஆகஸ்ட் 2011,காலை 10.00 மணி முதல்
கோயம்புத்தூர் நுகர் பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம்
”சித்ரமஹால் ”, முதல் மாடி 1A (பழைய கங்கா மருத்துவமைன அருகில்)
ஸ்வர்ணாம்பிகா லே- அவுட், ராம் நகர், கோவை- 9

தொடர்புக்கு
சீனு : 98432 94085,சூரி: 94421 01335
34, ராமசாமிநகர், கவுண்டம்பைளயம், கோவை -30.

மின்னஞ்சல் : aruvikovai@gmail.com

Wednesday 11 May 2011

ஜுவான் கிமரிஸ் ரோஸா : முடிவற்ற பாதை.






நவீன பிரெஸிலியப் புனைகதையின் விவாதத்துக்கு அப்பாற்பட்ட முன்னோடி ஜுவான் கிமரிஸ் ரோஸா (1908-67). சிறு விவரக் குறிப்புகள் முதல் பெரும் தகவல்களின்பாற்பட்ட நாவல் வரை அடங்கிய ஏழு புனைகதைத் தொகுதிகளில்,  வரையறுக்கப்பட்ட இலக்கிய வெளிகளில் பயணித்து கலை வெளிப்பாட்டின் புதிய திசைகளைக் கண்டறிந்தவர். புனைகதைக்கான பிராந்திய மற்றும் பிரபஞ்சத்துவ அணுகுமுறைகளுக்கிடையேயான எல்லைகளை ஏற்க மறுத்த ரோஸா, பிரெஸிலிய இலக்கிய மொழியில் ஒப்பற்ற மாற்றத்தையும் அதன் மூலம் விமர்சனத்தின் ஓயாத அலைகளையும்  ஏற்படுத்தினார். பரீட்சார்த்தவாதம், யதார்த்த மீறல், உள்ளுணர்வு வாதம், பிரபஞ்ச பிராந்தியத்துவம், கருத்துமுதல்வாதம் எனப் பல சொல்லாடல்கள் இவரது ஒரு படைப்பை வகைப்படுத்த பயன்படுத்தப்பட்டன. பிரெஸிலின் உள்ளடங்கிய பகுதியிலமைந்த கடந்த காலத்தைச் சேர்ந்ததான, பரந்த, மர்மங்கள் நிறைந்த, மினாஸ் கெரெய்ஸின் 'செர்தாவோ' இவரது புனைவுலகு. ரோஸாவின், உள்ளடங்கிய முன்னேற்றமற்ற இந்நிலப்பகுதி நாடோடிகள், தொன்ம உருவங்கள் மற்றும் அபத்த சாகசக்காரர்களின் வாழிடமாக இருந்தது. sertaoவின் வறண்ட நிலங்கள் துப்பாக்கியேந்திய கொலைகாரர்களுக்கும் நாட்டுப்புற தத்துவவாதிகளுக்கும் இடையேயான பிரசித்திபெற்ற யுத்தங்களின் களமாயமைந்தன. மினாஸ் கெரெய்ஸின் உள்ளடங்கிய பிரதேசங்களின் பிரத்தியேகமான மொழி வேறுபாடுகளை அடித்தளமாகக் கொண்டமைந்த தனது தனித்துவமானதும் மிகக் கவித்துவமானதுமான புனைவு நடையின் உருவாக்கத்தில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்தார் ரோஸா. கவனமாக உருவாக்கப்பட்ட மொழியும் உண்மைகளின்பாற்பட்டதாக அமையாத கதைக்களன்களும் சமகால பிரெஸிலியப் புனைகதையாளர்களிடையே ஜுவான் கிமரிஸ் ரோஸாவுக்கு தனியானதொரு இடத்தை அளித்தன.


1946ல் தனது முதல் கதைத் தொகுதியான sagarana வெளிவந்தபோது அதுவரை பிரெஸிலில் பிரதானமாக இருந்துவந்த யாதர்த்த பிராந்திய எழுத்துக்களுக்கு சவால் விடுத்து அவற்றைக் கடந்தும் சென்றார். இத்தொகுப்பில் புதுவிதமானதொரு பாணியும் கதைகூறலில் வலுவானதொரு மறுஅமைப்பாக்கமும் இருந்ததை விமர்சகர்கள் கண்டனர்.தனது இரண்டாவது கதைத்தொகுதியான Corpo de Baile (Corps de Ballet) ஐ அவர் 1956ம் ஆண்டில்தான் வெளியிட்டார்.பொதுவான தலைப்பின் கீழமைந்த  ஏழு கதைகள் அவரது முதல் தொகுப்பின் மொழிநடை மற்றும் தனித்துவம் இவற்றின் இன்னும் மேம்பட்ட தன்மையைக் கொண்டிருந்தன. இதே ஆண்டில் அவரது முக்கியப் படைப்பான The Devil to Pay in the Backlands (Grande Sertao: Veredas) நாவல் வெளிவந்தது.லத்தீனமெரிக்க நாவல்களுள் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதுமொழியமைப்பு நாவல் பிரெஸிலிய இலக்கியத்தின் முதல் மீமெய்யியல் நாவலாகக் கருதப்படுகிறது. வரலாறு படைத்த இந்நாவலைப் போன்று பிரெஸிலிய இலக்கிய விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்ட நாவல் வேறில்லை.1962ல் The Third Bank of  the River and  Other Stories (Primeiras Estorias) யுடன் ரோஸா மீண்டும் சிறுகதைக்குத் திரும்பினார். அடுத்ததான Tutameia (Terceiras Estorias), Trifle (Third Stories)-1967 தொகுப்புகளில் கதைச் செறிவு பிரதானமாயிருந்தது. அவர் இறப்பதற்கு முன்பே வெளியீட்டுக்கு தயாரான ஆனால் அவர் மரணத்துக்குப் பின்பே வெளிவந்த தொகுப்பு These Stories (Estas Estorias)-1969. அவரது கடைசி வெளியீடு பத்திரிக்கைகளில் வெளியான ஆக்கங்கள், நாட்குறிப்புகள், பல்வேறுபட்ட குறிப்புகள், சிறு இலக்கியக் குறிப்புகள், கவிதைகள் இவற்றின் தொகுப்பாக அமைந்த Hail, word (Ave, Palavra)-1970.


Sagranaவை வாசித்தவர்கள் ரோஸாவுடைய மொழியின் புதுமையினாலும் வீச்சினாலும் வசீகரிக்கப்பட்டார்கள். Seratoவின் நாட்டுப்புறப் பேச்சின் தனித்துவமான மொழிக்கூறுகளை பிரெஸிலிய மரபுத் தொடர்களுடன் கலந்து அவர் கணக்கற்ற புதிய வார்த்தைகளை உருவாக்கியிருந்தார். இதில் இன்னும் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் கவிதைகளுக்குரிய மோனை நயம், உள்ளார்ந்த லயம் இவற்றை அவர் உரைநடையிலும் பயன்படுத்தியிருந்தமைதான். சில பகுதிகள் உரைநடையில் அமைந்த கவிதைகளாகவே உள்ளன. Woodland Witchery (Sao Marcos) கதையில் கதைசொல்லி மூங்கில் தடிகள் மீது எழுதப்பட்ட சில கவிதைகளைக் காண்கிறான். முன்பின் அறியாத அந்தக் கவிஞனுக்கு தனது பதிலாக பத்து அசிரிய மற்றும் பாபிலோனிய அரசர்களது பெயர்களை இன்னொரு தடியில் எழுதி வைக்கிறான். இப்பெயர்கள் ரோஸாவின் கதைசொல்லி சொல்வது போல தம்மளவில் லயமும் அழகும் கொண்ட கவிதைகளாகும்.

ரோஸாவின் Sagarana தொகுப்பின் கதைகள் பிரெஸிலின் இரண்டாம் தலைமுறை நவீனவாதிகளான (இந்த இரண்டாம் தலைமுறை நவீனத்துவம் 1928ல் தொடங்கியது) யதார்த்த, பிராந்திய நாவலாசிரியர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டின. ஜோஸ் லின் தோ ரெகோ மற்றும் ஜோர்ஜ் அமதோ போன்றவர்கள் வடகிழக்குப் பிராந்தியத்துக்கேயுரிய மொழி, கலாச்சாரம் மற்றும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துதலின் வாயிலாக தங்கள் நாவல்களுக்கு பிரெஸிலியத்துவம் ஊட்ட முற்பட்டனர். சமூக-வரலாற்று கதாபாத்திரங்களை உருவாக்கும் முகமாக நாட்டுப்புற பேச்சு வழக்கைப் பயன்படுத்தினர் ஆயினும் தங்களுக்கேயுரியதான மொழிநடையை உருவாக்கத் தவறினர். அவர்களது படைப்புகள் மேம்போக்கான சமூக யாதார்த்தத்தை நேர்க்கோட்டு அமைப்பில் சித்தரித்தன. ரோஸாவோ பிராந்தியப் புனைவெழுத்தில் தருக்கம் மற்றும் அறிவுசார் சாய்வுகளை அறவே விடுத்து எண்ணவோட்டத்தினால் அமைவுறும் ஒரு கால ஒழுங்கைக் கடைபிடிக்கிறார்.பிராந்திய குணங்களைக் பிரதிபலிக்கும்முகமாய் மட்டுமன்றி ஒரு புதிய இலக்கியப் போக்கை உருவாக்கும் விதமாய் மொழியை அவர் விளையாட்டுத்தனமாய்க் கையாளுகிறார்.


The Devil to Pay in the Backlands நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரேயொரு கதைசொல்லியின் மூலமாகவே நமக்கு அறியத்தரப்படுகின்றன. சார்புத்தன்மையும் நிச்சயமின்மையும் அக்கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் தெரிகின்றன. தனது ஆன்மீக ஆலோசகரின் அறிவுரைகள் நம்பத்தகுந்தனவாயுள்ளன ஆனால் போதுமானவையாக இல்லை என்கிறான் ரியோபால்டோ. தலைவர்களும் தொண்டர்களுமாய் கணக்கற்ற பேர் துப்பாக்கியேந்தித் திரிகிறார்கள், ஒரே நேரத்தில் அவர்கள் கொலைகாரக் கொள்ளையர்களாகவும் நியாயமான காரணத்துக்காகப் போராடும் நேர்மையான கதாநாயகர்களாகவும் தெரிகிறார்கள். தனது பரம வைரியான ஹெர்மோஜீன்ஸை தீவினையின் உருவம் எனத் தான் சொன்னதையே கேள்விக்குள்ளாக்குகிறான் ரியோபால்டோ. அவன் மூடுபனி என அழைக்கும் தனது நெருங்கிய சகாவான டயாடோரிமைப்பற்றி அதிகம் கவலைப்படுகிறான். அவனுடனான சாத்தியப்படாத காதல் ரியோபால்டோவைப் பல ஆண்டுகளுக்கு வாதைக்குள்ளாக்குகிறது. இரண்டு கொள்ளைக் கூட்டத்தாருக்கிடையே நடக்கும் சண்டையொன்றின் முடிவில் டயாடோரிம் ஒரு பெண் எனத் தெரியவருகிறது. டயாடோரிமை விமர்சகர்கள் பலவழிகளில் விளங்கிக்கொள்ள முற்படுகிறார்கள். ரியோபால்டோவின் காவல் சம்மனசாக, தீவினைக்கான கவர்ச்சியாக (ஏவாள்), பிளாட்டோவின் மர்மவாதமாக, பல வழிகளில்.தனது நாவலின் கட்டுமானத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து விஷயங்களை எடுத்துக்கொள்கிறார் ரோஸா;குறிப்பாக லுஸோ-பிரெஸிலிய கலாச்சாரம், பண்டைய மற்றும் நவீன அய்ரோப்பியத்  தத்துவம், கீழைத்தேய மதங்கள். ரியோபால்டோவின் சிந்தனை பேச்சு ஆகியன பலதரப்பட்ட விஷயங்களால் கட்டமைக்கப்பட்டவை.அவனது வருணனைகள் கிறித்தவக் கற்பனாவாதம், கிரேக்க கொள்கைவாதம், மீமெய்யியல் கதைகள், அறிவியல் மற்றும் இந்துமத சுயமறுப்பு ஆகியவற்றின்வழியே புரிந்துகொள்ளத் தக்கவை.


ஜுவான் கிமரிஸ் ரோஸா பிரெஸிலிய இலக்கியத்தில் கடவுளாகப் போற்றப்படுகிறார். ஆனால் சமகால லத்தீனமெரிக்க புனைவெழுத்துப் பெருக்கத்தில் அவர் முழுமையான அங்கீகாரம் பெறவில்லை. பிரெஸிலில் அவருக்கிருக்கும் மரியாதை லத்தீனமெரிக்கா முழுவதிலும் இருப்பதில்லை. வருந்தத்தக்க ஸ்பானிய-அமெரிக்க, பிரெஸிலிய கலாச்சாரப் பிரிவினைகளோடு ஓரளவுக்கு ரோஸாவின் வெகு ஆடம்பரமான இலக்கிய நடையும் இதற்கு காரணமாயிருக்கிறது.The Devil to Pay in the Backlands நாவலும் The Third Bank of the River and Other Stories தொகுப்பும் மட்டுமே ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Corpo de Baile மற்றும் Tutameia ஆகியன இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. The Devil to Pay in the Backlands நாவல் ஒரு முடிவு இன்றி நிறைவடைகிறது. Don Quixote, Ulysses போன்ற பெரும் பிரபஞ்சத்துவப் படைப்புகளோடு வைக்கத் தகுந்த நாவல் இது.ரோஸா சொல்வது போல் ‘'செர்தாவோவில் கோயத், தாஸ்தாயெவ்ஸ்கி, ஃப்ளபேரது மொழி பேசப்படுகிறது,  ரியோபால்டோ சொல்வதுபோல் ‘'செர்தாவோ'’ எல்லா இடத்திலும் இருக்கிறது.


சார்லஸ் ஏ. பெரோன்

தமிழில்:அசதா

ஜுவாங் கிமரிஸ் ரோஸாவின் சிறுகதை:



நன்றி: 'கல்குதிரை' பனிக்காலங்களின் இதழ். சிரிர்: கோணங்கி.