Friday 13 March 2009

இரண்டு கவிதைகள்


ஒன்று

வெள்ளிக் கிண்ணங்கள்
மிதந்தலையும் உன் நதியில்

தீண்டாக் காற்றுக்கும்
பூச்சொரியும் உன் வனத்தில்

மரணமும் பரிதாபமுற்றழும்
உன் பெருங்கருணையின் தேசத்தில்

என் பேச்சு எப்போதும்
மௌனம்தான்

செந்தாழம் பூக்கள் நிறைந்து
நீண்டதுன்
யௌவனத்தின் பொன் வீதி

தொலைத்த என் பருவங்களை
அழைத்து வந்தது
நீ பார்க்காத
உனதொரு பார்வை
நீ பேசாத
உனதொரு சொல்

மௌனத்தைத் தொடரும்
மௌனத்திற்குப் பின்
பதைத்து நிற்கிறது
பேசாத என் நேசம்

ஆயினும் ஆன்பே,
உதடுகள் கருகிடினும்
முத்தமிடுவேன்
தீயென எனைச் சுடும்
உன் மௌனத்தை.



இரண்டு


இரவு மெல்ல
அமைதி கொள்கையில்

எனக்குள்
பெருகத் தொடங்குகின்றன
கனவுகள்

ஆயிரம் முகங்கள்
தோன்றிக் கலையும்
ஒரு கனவில்
உன் முகம் தேடி
உறக்கம் கலைந்தேன்

சில்வண்டுகள் கொண்டாடும்
தீராத இவ்விரவில்
நட்சத்திரங்கள் கொண்டாடும்
உன் முகத்தை
ரசித்தவாறு விழித்திருப்பேன்...