Monday 2 July 2012

மகான் படால் சந்து 27ஆம் எண் வீட்டிலிருந்து; தாகூர் சிறுகதைகள்-மதிப்புரை.


                                                  

மகாகவி, தேசியகீதம் தந்தவர், கவிதை, நாடகம், புனைவுகள், கட்டுரை, ஓவியம்  இவற்றில் பேரளவில் ஆக்கங்களை உருவாக்கியவர், நோபல் பரிசு பெற்றவர் என ரவீந்திரநாத தாகூரின் பிம்பம் மறுபரிசீலனைக்குள்ளாக்கவியலாத அளவுக்கு  இலக்கியப் புனிதம் மிக்கது. சமரசப் புள்ளியொன்றில் இந்திய இலக்கியத்தைச் சுட்டும் ஒட்டுமொத்த முகமாகவும் தாகூர் அறியப்படும் சாத்தியம் இப்போதும் உண்டு. கறாரான விமர்சன அளவுகோல்களை மீறி மேலெழும் படைப்புகளை அவர் தந்தார் என்றபோதும் அவர் படைப்புகள் நோபல் பரிசு உள்ளிட்ட அவரது பெருமைகளுக்கும் பிரபல்யத்துக்கும் முழுமையும் நியாயம் செய்யாதவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. காலங்களாக பெரும்பான்மையும் கூர்மையான பார்வைகளின்பாற்படாத கல்விப்புல செயல்பாடுகளில் மட்டுமே தாகூரது படைப்புகள் முக்கியத்துவம் தந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தாகூரது படைப்புகளின்றி இந்தியப் பல்கலைக் கழகங்களின் ஆங்கிலப் பட்டப்படிப்புக்கான (இந்திய ஆங்கில இலக்கியம்)  பாடத்திட்டங்கள் முழுமையடைவது இல்லை என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. 

தாகூரது இலக்கிய ஆக்கங்களுள் அவரது சிறுகதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. தன் வாழ்நாளில் அவர் எழுதியவை நூற்றுச் சொச்சம் கதைகள். இச்சிறுகதைகள் வழியாக நாம் கண்டடையும் தாகூர் ஆச்சரியமூட்டும் வகையில் கூர்ந்த அவதானிப்புடன் மனித உணர்வுகளை அவற்றில் காணும் சிடுக்குகளை, நிச்சயமான வாழ்வின் ஓட்டம் மனிதருள் பதித்துச் செல்லும் விரும்பத்தக்கதும், விரும்பத்தாகததுமான வடுக்களை என யதார்த்தமுடன் லாகவமாகவும் நயமாகவும் மொழிக்குள் படைத்துக் காட்டுபவராக இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட தாகூரின் கதைகளை இன்று ஒரு நூறாண்டுக்கும் அப்பால் நின்று வாசிக்கையிலும் அவற்றுள் நாம் லயித்து ஆழ்ந்து போகச் செய்பவையாக  இருப்பதே இக்கதைகளின் வெற்றி.

மறைந்த த.நா.குமாரஸ்வாமி அவர்களால் நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்ப்பட்ட தாகூரின் பத்துச் சிறுகதைகள் அடங்கிய  தொகுப்பை ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சா.கந்தசாமி இவற்றைத் தொகுத்துள்ளார்.

தொகுப்பின் முதல் கதையான ‘காரும் கதிரும்’ கதையில் மெத்தப் படித்த இளைஞனான சசிபூஷணனிடத்தில் சிறுமி கிரிபாலாவுக்கு காதல் முகிழ்க்கிறது, சசிபூஷணன் அதனை உணரத் தொடங்கும்போது கிரிபாலா இன்னொருவரது மனைவியாகி விடுகிறாள் (இத்தொகுப்பில் கதைநாயகிகள் சிறுமிகள் என சுட்டப்படுவது மொழிபெயர்ப்பில் உண்டான கவனக்குறைவு என ஒருவர் நினைக்கக்கூடும். கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பால்ய விவாக முறையில் சாதாரணமாக எட்டு, பத்து வயதையுடைய பெண் குழந்தைகளுக்கெல்லாம் மணமுடிப்பது இயல்பானவொன்று). ஒரு நாவலுக்குரிய விரிவை தன்னுள் அடக்கிய இக்கதை விதியினால் பந்தாடப்பட்டு நொந்து அலையும் சசிபூஷணன் கைம்பெண்ணாகிவிட்ட கிரிபாலாவிடம் வந்து சேரும் காவியத் துயருடன் நிறைவுகிறது. கிரிபாலா பேதைச் சிறுமியாக குறும்புமிக்கத் தன் விளையாட்டுத் தனங்களை சசிபூஷணனிடத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கையிலேயே அவற்றுள் மெல்லக் காதலரும்பி வேர்கொள்ளத் தொடங்குவது அவ்விளையாட்டுகளின் போக்கிலேயே விவரிக்கப்படுகிறது. ‘டோரியா’ சிற்றாடை கட்டிய சிறுமியாக நாவற்பழங்களைத் தின்று அதன் கொட்டைகைள உமிழ்ந்தபடி அவனோடு சதா சண்டையில் ஈடுபட்டவளாய் இருக்கும் கிரிபாலா ஒருநாள் மணப்பெண்ணாகி சட்டென சசிபூஷணன் பார்வையிலிருந்தும் நம் பார்வையிலிருந்தும் மறைந்து போகிறாள். இறுதியில் விதவைக்குரிய வெள்ளையுடை அணிந்தவளாக விளையாட்டுத்தனங்கள் அகன்று முதிர்ச்சி குடிகொண்ட ஆனால் துயர் நிறைந்த ஓர் ஆன்மாவாக சசிபூஷணன் அவளைக் காண்கிறான். இக்கதையின் ஓட்டத்தில் சசிபூஷணன் ஆங்கில துரைமார்களது கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுபவனாக இருக்கிறான். கிரிபாலாவின் தந்தை ஹரகுமார் ஒரு ஆங்கிலேய துரையால் அவமானத்துக்குள்ளாகும்போது வழக்கறிஞனான அவன் அவருக்காக நீதிமன்றம் சென்று வழக்காடுகிறான். பிறிதொரு சமயம் மீனவர்கள் வலையை அறுத்த இன்னொரு வெள்ளைக்கார துரையை அடிக்கவும் செய்கிறான். இதனால் வழக்கில் சிக்கி பல ஆண்டுகளை சிறையில் கழிக்கநேர்ந்து நைந்துபோய் வெளியே வருகிறான். மாஜிஸ்ட்ரேட் ‘அவன் காங்கிரஸ்காரனா’ என சசிபூஷணனைப் பற்றிக் கேட்பதற்கு ஹரகுமார் பொய்யாக ‘ஆமாம்’ என்று சொல்கிறார். இருப்பினும் சசிபூஷணது இந்த ஆங்கிலேய எதிர்ப்பு, அக்காலகட்டத்தில் வலுவுடன் விளங்கிய சுதந்திரப் போராட்டத்தின் சாயம் பூசப்படாமல்  இயல்பாக கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது. சசிபூஷணன், கிரிபாலா தவிர்த்து இக்கதையில் குறிப்பிடத்தக்க பாத்திரம் கிரிபாலாவின் தந்தையும் ஜமீன் காரியஸ்தருமான ஹரகுமார். தனக்குக் அடங்காத குடியானவன் ஒருவன் மீது பொய்யாக வழக்குப் போட  சசிபூஷணனிடம் கேட்க அவனோ மறுத்துவிடுகிறான். தன் சுயலாபத்துக்காக எதையும் செய்யத் துணியும் அவர் பின்னால் தனக்கு உதவ வந்த சசிபூஷணனக்கு எதிராக வேலை செய்யவும் தயங்குவதில்லை.

கிரிபாலாவின் பாத்திரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்த மிருண்மயி பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதை ‘இனிது முடிந்தது’ பெண்ணுக்குரிய அடக்கமும் நாணமுமற்றவளாக பிடாரியென குறும்புகள் செய்து சுற்றித் திரியும் மிருண்மயியை எப்படியோ பட்டப்படிப்புப் படித்த அபூர்வ கிருஷ்ணனுக்குப் பிடித்துப்போகிறது. தாயின் எதிரப்பையும் மீறி அவளைத் திருமணம் புரிந்துகொள்கிறான். திருமணத்துக்குப் பிறகும் அவள் ஊர் சுற்றித் திரியும் சிறுமியாகவே இருக்கிறாள். ஆரம்பத்தில் இதுபற்றி மனக்கவலை கொள்ளும் அபூர்வகிருஷ்ணன் பிறகு அவள் வழியிலேயே சென்று அவளைத் தன்வழிக்கு கொண்டுவர முயற்சிக்கிறான். மிருண்மயியின் திருமணத்துக்கு வர இயலாது போன அவளது ஏழைத் தந்தை ஈசான மஜூம்தார் அவளுக்கு ஆசி கூறி கடிதம் எழுதுகிறார். கடிதத்தைக் கண்டதும் அப்பாவைப் பார்க்வேண்டும் என அடம் பிடிக்கிறாள். அவள் மாமியார் கண்டிப்புடன் முடியாது என மறுத்துவிட இரவு எல்லோரும் உறங்கிய பின் தனியே அப்பாவைப்பார்க்க தொலைதூரப் பயணம் கிளம்புகிறாள். தெரிந்த ஒருவரால் மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவிடப்படும் அவளை பிறகு அபூர்வகிருஷ்ணனே தந்தையிடம் அழைத்துச் செல்கிறான். தந்தையைக் காணச் செல்லும் பயணம் அவளுள் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. வீடு திரும்பியவள் புதிய பெண்ணாகிறாள்.ஆனால் மேல்படிப்பை முன்னிட்ட அபூர்வ கிருஷ்ணனின் கல்கத்தா வாசம் அவர்களைப் பிரிக்கிறது. இருவரும் பிரிந்து காதலில் தவிக்க இறுதியில் ஒருவித நாடகத் தன்மையுடன் கதை ‘இனிதே முடிகிறது’. குறும்பும் விளையாட்டுமான சிறுமியொருத்தி கணவனது அணுசரணைமிக்க அரவணைப்பில் காதலும் அன்பும் கடமையுணர்வும் மிக்க பெண்ணாய்த் தகையும் மாற்றம் இக்கதையின் அடிநாதம்.

‘அதிதி’ கதையின் தாராபதனை கிரிபாலா மற்றும் மிருண்மயியின் ஆண்பாற் வடிவமாக ஒருவர் காணலாம். அழகும், திறமைகளும், நல்லெண்ணமும், யாருக்கும் உதவும்  மனப்பாங்கும் கொண்டவனான தாராபதன் ஓரிடத்தும் நிரந்தரமாகத் தங்கிவிடாமல் ஆற்றோட்டத்தில் மிதந்துசெல்லும் புஷ்பம் போல தொடர்ந்து புதிய இடங்களை புதிய உறவுகளைத் தேடி பயணிப்பவனாக இருக்கிறான். கடைசியில் மதிலால் பாபு குடும்பத்தில் அவன் ஐக்கியமாகி அவரது மகள் சாருசசியை மணமுடிக்குமளவுக்கு செல்லும்போது அவனது அதிதி வாழ்வு முடிவுக்கு வந்ததாய் நாம் எண்ணுகிறோம்.ஆனால் திருமணத்துக்கு முன்பாக தன்னைப் பிணைக்கப் பார்த்தவற்றிடமிருந்து விலகி ‘அன்பும் ஆதரவும் மீறிய பரந்த உலகினிடையே எங்கோ மறைந்து போகிறான்’ அவன். தாராபதன் ஒரு நிரந்தர அதிதி. லௌகீகத் தளைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் எப்போதும் சுதந்திர வெளிக்குள் சஞ்சரிக்க விரும்புகிற உலகையும் இயற்கையையும் நோக்கி விரியும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனை தாரபதன் பாத்திரம் வழியாக சித்தரித்துக் காட்டுகிறார் தாகூர்.

இத்தொகுப்பின் ‘காபூல்காரன்’ கதையை ஒருவர் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. ஐந்து வயது பெண்குழந்நை மினிக்கும் உலர்ந்த திராட்சை முதலானவற்றை விற்கும் காபூல் வியாபாரியான ரஹமத்துக்குமிடையே ஒரு பிணைப்பு உருவாகிறது. ரஹமத்துக்கு குழந்தைகள் விரும்பும் உருவம் கிடையாது. சொல்லப்போனால் முதலில் அவனது நெடிய உருவையும் தாடியையும் கண்டு மினி அஞ்சவே செய்கிறாள். ஆனால் அவர்களிடையேயான குறும்பும் விளையாட்டும் தொனிக்கும் வாஞ்சைமிகு உரையாடல்கள் மூலமாக மெல்ல உரமேறி ஒரு உறவு திடப்படுகிறது. ரஹமத் மினியை வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போகாத நாட்கள் ஆபூர்வம். இவர்களுக்குள் அப்படி என்னதான் உறவோ என அவள் தந்தை வியக்க மகளை இந்த காபூல்காரன் மயக்கிக் கடத்திக்கொண்டு போய் தன் ஊரில் அடிமையாக விற்றுவிடுவானோ என்ற அச்சம் மினியின் தாய்க்கு. ஆனால் மினிக்கும் ரஹமத்துக்குமான உறவு ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவுதான். விதிவசத்தால்  கொலையொன்றைப்  புரிந்துவிடும் ரஹமத் சிறையில் வருடங்களைக் கழித்துவிட்டு வெளியே வந்ததும் முதல் காரியமாக மினியை சந்திக்க வருகிறான். அங்கு மினி மணப்பெண் கோலத்தில் நிற்கிறாள். மினியின் தந்தை அவளைச் சந்திக்க முடியாது எனச் சொல்லும்போது மினியின்  வயதையொத்த தன் மகளைப் பற்றியும் மினியின் உருவில் தன் மகளைத் தான் கண்டுவந்ததையும் உருக்கமுடன் விவரிக்கிறான் ரஹமத். அவ்விடத்தில் மகளைப் பிரிந்திருக்கும் துயரையும், பிரியப்போகும் துயரையும் அனுபவிக்கும் இரண்டு தந்தையரும் தம்மிருவரையும் ஒரேவிதமான கையறுநிலையில் காண்கின்றனர். உறவினரது எதிர்ப்பையும் மீறி மணப்பெண் மினியிடம் ரஹமத்தை அழைத்து வருகிறார் மினியின் தந்தை. மினியைக் கண்ட நிம்மதியோடு ரஹமத் வெளியே வருகிறான். அப்போது மகளைப் பிரியப்போகும் தந்தை மகளைப் பிரிந்திருக்கும் தந்தைக்கு பெருந்தொகை கொடுத்து உடனே காபூல் போய் உன் மகளைப் பார் எனச் சொல்கிறார். தந்தை-மகள் உறவை வெகு நுட்பமாய் சித்தரிக்கிற, சாகாவரம் பெற்ற கதை இது.

ஒரு வேலையாளாக போஸ்ட் மாஸ்டருக்குப் பணிவிடைகள் புரியும் ‘போஸ்ட் மாஸ்டர்’  கதையின் ரதன் வெளியே கடமையையே கருத்தாய்க்கொண்ட பணியாளாகவும் உள்ளே உணர்வுகள் நிறைந்த ஒரு பெண்ணாகவும் மனப்போராட்டத்துக்கு உட்படுபவள். ஆனால் கடைசியில் போஸ்ட் மாஸ்டர் தன் மனதின் காதலையறியாது தன்னைப் பணியாளாய் மட்டுமே பார்த்திருந்திருக்கிறார் என்று உணர்ந்து மருகுகிறாள். இதில் பாவப்பட்ட ரதனுக்காக வருந்தும்வேளை  நாம் போஸ்ட் மாஸ்டரைக் குற்றம் சொல்லவும் தோன்றுவதில்லை. விதியின் ஓட்டத்தில் மனதின் ஆசைகள் குறுக்கு மறுக்காய்ப் பாய்ந்து பல நேரங்களில் தீராத சஞ்சலத்தில்தான் நம்மைக் கொண்டுசேர்க்கிறது. இந்தக் கதையில் ரதன் வந்து நிற்குமிடமும் அதுதான்.

இன்றளவும் அதிகம் பேசப்படும் ‘மனைவியின் கடிதம்’ கதை குடும்ப அடக்குமுறை எனும் வெளித்தெரியாத ஆனால் தீவிரமான ஒரு வன்முறையை எதிர்க்கத் துணியும் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பெண்ணின் எண்ணவோட்டங்களைப் பதிவு செய்கிறது. கதைநாயகி  மிருணாளின் துணிவை வியக்கும் அதே நேரம் இன்று நிலைமையில் பெரும் மாற்றங்கள் வந்துவிட்டதா என்ற வினாவை எழுப்பவும் இக்கதை தவறுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்கப் பெண்களது நிலையினை இக்கதை கண்முன் நிறுத்துகிறது. மிருணாள் தான் அடக்கப்பட்டிருக்கும் குடும்பமெனும் சிறைக்குள் இருந்தபடியே தனது காலத்தைத் தாண்டிய எண்ணமும் துணிவும் மிக்கவளாக  சக பெண்களுக்கு அபயக்கரம் நீட்டுகிறாள். இறுதியில் தன்னைப் பிணைத்த தளையை விட்டு என்றென்றைக்குமாக வெளியேறுகிறாள். ‘நான், மாகன் படால் சந்தில் 27ஆம் எண்ணுள்ள உங்கள் இல்லத்திற்கு இனி திரும்ப மாட்டேன்’ என்ற வரியில் ஒலிக்கும் தீர்க்கமான கலகக் குரல் ஒரு நூற்றாண்டைத் தாண்டி இன்றும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மனங்களைக் கிளர்த்தும் வல்லமை மிக்கதாய் ஒலிக்கிறது.

‘வாழ்வும் சாவும்’ கதையின் காதம்பினி வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவேயுள்ள புள்ளியில் நின்று அல்லாடுகிறாள். தனக்கு நிகழாத ஆனால் மற்றவரால் நிகழ்ந்துவிட்டதாகக் கருதப்படும் மரணம் அவளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தள்ளுகிறது.மிருணாளைப் போல தீர்க்க எண்ணம் அவளிடமில்லை. போக்கிடமின்றி கடைசியில் மரணத்திடமே தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறாள்.

‘கல்லின் வேட்கை’ புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’யை நினைவூட்டுகிறது. ‘படித்துறையின் கதை’ பால்யத்தில் விதவைக் கோலம் பூண்டவளான குஸூமா தனது உணர்ச்சிகளின் சுழலில் சிக்கி கடைசியில் கதையை விவரிக்கும் படித்துறை சாட்சியாக ஆற்றின் சுழலுக்குத் தன்னைக் கொடுத்துவிடுகிறாள். ‘ராஸாமணியின் பிள்ளை’, ‘காரும் கதிரும்’ கதையைப் போலவே ஒரு நாவலைத் தன்னுள் அடக்கிய கதை. நல்ல காலத்தை நோக்கிய எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் அவநம்பிக்கையும் பாத்தியதையானவை காலம் கடந்தேனும் எப்படியும் நம்மை வந்தடையும் என்ற நம்பிக்கையும் கலந்த துயரச் சித்திரம் இக்கதை.

வங்கமொழியின் துவக்க காலச் சிறுகதைகளான தாகூரின் கதைகள் அம்மொழிக்கு அவர் தந்த கொடையாகவே கருதப்படுகின்றன. இக்கதைகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்காளமும் அதன் மக்களும்  மொழிச்சித்திரமாய்த் தீட்டப்பட்டிருக்கிறார்கள்.

இச்சிறுகதைகள் வழியே அவர் கட்டமைக்கும் உலகம் பேரளவில் ரம்மியமானது. வருத்தமும், துயரமும் நிகழுகையில் கூட பின்னணியில் இந்த ரம்மியம் மெல்லப்  பரவியபடியே இருக்கிறது. ஆறுகளில் நிகழும் படகுப் பயணங்கள், இயல்பான இயற்கை வருணனைகள், இவற்றோடு இயைந்த கவித்துவம் கொண்ட மொழியும் இதை சாத்தியமாக்குகின்றன. குறும்பும் விளையாட்டுமான சிறுபெண்களது உலகம் (‘காரும் கதிரும்’, ‘அதிதி’, ‘இனிது முடிந்தது’) வளர்ந்த பெண்களது கடமைகள்,கட்டுப்பாடுகள் அழுத்தும் உலகம் (‘மனைவியின் கடிதம்’, ‘ராஸமணியின் பிள்ளை’), நுட்பமான பந்தத்தின்பாற்பட்ட தந்தை- மகள் உலகம் (‘காபூல்காரன்’,’இனிது முடிந்தது’) ஆகியவை இக்கதைகளில் வலுவாக இடம்பெறுகின்றன.

கூர்ந்த அவதானிப்பும், விமர்சனம் கலந்த சமூகப்பார்வையும் கொண்டு நவீனத்துவக் கதைப்பாணியில் சொல்லப்பட்ட இக்கதைகள் தாம் அடங்கிய சட்டகத்துக்கு விசுவாசமாக இருப்பவை. சில மீறல்கள் மூலம் சில கதைகள் வேறொரு தளத்துக்கு நகர்ந்திருக்க முடியும்.(படித்துறையின் கதை’யில் குஸூமை அந்தத் துறவியோடு சேரவிடாமல் தடுப்பது எது?, ஏன் ரதன் தன் மனதை போஸ்ட் மாஸ்டரிடம் அந்தக் கடைசித் தருணத்திலேனும் சொல்லியிருக்கக் கூடாது?) நூறு ஆண்டுகளுக்கும் முன்பான படைப்புகளை நிகழ்காலத்தின் இலக்கிய அளவீடுகள் முன் வைத்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரம் ‘காபூல்காரன்’ போன்ற காலத்தை வென்று நிற்கும் படைப்புகளுக்காக தாகூரை நாம் வியக்காமலிருக்கவும் முடியாது. ஆலன் போ, செகாவ், மாப்பஸான் போன்றோரது வரிசையில் தாகூரை வைப்பதை இதுபோன்ற கதைகள் நியாயப்படுத்தவே செய்கின்றன.

த.நா. குமாரஸ்வாமி அவர்கள் மிகச்சிறப்பாக இக்கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். தாகூரின் கவித்துவமான மொழிநடை சிறிதும் குன்றாமல் இக்கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. தொகுப்பாளர் சா. கந்தசாமியும் தாகூரின் சிறுகதை ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முக்கியமான இந்தியச் சிறுகதைகளை சேகரிக்கும் ஒருவர் தவறவிடக்கூடாத தொகுப்பு இது.
-----------------------

நன்றி: 'புதிய புத்தகம் பேசுகிறது' ஜூன் 2012.

Thursday 26 April 2012

தீட்டித் தீராத மொழியும் மெல்லிய ஓர் காதல் தூரிகையும்- ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் (அய்யப்ப மாதவன்)



          ஊற்றுக் கண் தூர்ந்து போகாமல் தொடர்ந்து எழுத வாய்க்கும் கவிஞர்கள் பாக்கியவான்கள். பிரக்ஞை நிலையில் கவிஞனாயிருப்பதும் அந்தக் கவிப் பிரக்ஞையின் ஸ்தூல சாட்சியங்களான கவிதைகளை தொடர்ந்து படைத்தபடியிருப்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகிவிடாது. இந்த வகையில் அய்யப்ப மாதவன் பெரும் பாக்கியவான். ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ இந்த நான்கு ஆண்டுகளில் அய்யப்ப மாதவன் வெளியிடும் ஐந்தாவது தொகுப்பு. (ஒரு ஹைக்கூ தொகுப்பும் சேர்த்து). எஸ்.புல்லட், நிசி அகவல், சொல்லில் விழுந்த கணம் போன்ற அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்புகள் தந்த அனுபவத்தை முன் வைத்து ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலை’ அணுக முற்படும் ஒருவருக்கு ஏமாற்றம் உண்டாகலாம். முன்னுரையில் கவிஞரே சொல்வதுபோல் இவை வேறான கவிதைகள். காதலைப் பிரதானப்படுத்திய கவிதைகள் முக்கால் வாசிக்கும் மேல் நிறைந்திருக்கும் இத்தொகுப்பில் முந்தைய தொகுப்புகளின் அய்யப்ப மாதவனை மீதமிருக்கும் கால்வாசி பொதுவான கவிதைகளில் மட்டுமே காண முடிகிறது. அபோதத்தில் மிதப்பது போன்றதான மொழியின் மென் தீற்றலில் தீவிரமிக்கக் காட்சிப் படிமங்களை உருவாக்கி வாசக உணர்வு நிலையைத் தொட்டும் விலகியும் நகரும் வழமையான அய்யப்ப மாதவன் கவிதைகளாக இத்தொகுப்பின் காதல் கவிதைகள் இல்லை என்ற புள்ளியிலிருந்து நாம் ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலை’ அணுகத் தொடங்கலாம்.
    இக் காதல் கவிதைகளில் ஒரு பெண், ஒரு புகைச்சித்திரம் அல்லது நீரோவியம் போல அசைந்தபடியிருக்கிறாள். மழையாக, காற்றாக, கறுத்த மேகமாக இன்னும் பலவுமாக கவிஞனின் புறவெளியையும் மனவெளியையும் ஆக்கிரமித்தவளாக அவனை சதா புலனின்பக் கனவுகளிலும் தீராத தாபத்திலும் விழுத்தாட்டியபடியிருக்கிறாள். அவனை அவள் வேறொருவனாக்குகிறாள்.
           ‘ஏகப்பட்ட குதிரைகள் பூட்டி இழுத்தோடிய அவன் வாழ்வினைப் பிடித்து நிறுத்துகிறாள்’ (பக்.34) ‘ஆழங்களில் புதையும் உறவின் வல்லமையில் அவனுக்கு புதிதான அகிலத்தைத் தீட்டுதல் சாத்தியமாகிறது’ (பக்.35). ‘வேறொரு உடலாகி புத்துணர்வில் புதியதொரு காலத்தைச் செதுக்குகிறான்’ (பக்.58) மொழியின் மென்னடுக்குகளில் அடங்கிக் கிடக்கும் தாபம் தூரிகைத் தீற்றலாய் வரிகளெங்கும் தாவரத்தின் வனப்பில் மறைந்து கிடக்கும் கனிகளாக தன்னைக் காட்டியும் காட்டாமலும் அலைவுற்றபடியிருக்கிறது. ‘துவண்ட கைகளில் தீண்டிய/ பெண்மையின் விரல் சர்ப்பத்தில்/ நல்நஞ்சு ஊடுருவி சொக்கும் என் மேனி’ (பக் 21). ‘மஞ்சு விரித்த பரப்பினில் பிடித்த பறவைகளில் அவளைக் கொஞ்சுகிறேன்/ மேகத்துண்டில் என் முகமதில் அவள் விழிகளில்/ பிரவகிக்கும் காதலையுணர்கிறேன்/ அந்தியின் ஆரஞ்சு மினுமினுப்பில் அவள் இதழ்களை முத்தமிடுகிறேன்.’ (பக்.29) ‘தோன்றிய பெண் அசைய அசைய/தாள்களில் வாத்சல்யம் பெருகி/ இலைநுனி வடிக்கும் ஒரு துளி நீராகி/ ரம்மியத்தில் வீழ்ந்தேன்(பக். 96) அவள் அவனுக்கு யாவுமாயிருக்கிறாள். ‘மரத்தின் கீழ் மிதந்த இலையோசையில்/ அஞ்சுகத்தின் குரலில் அவளிருந்தாள்/ பச்சைநிறப் பறவையின் சிச்சிறு விழிகளில்/ கண் சிமிட்டி என்னைக் கண்டாள்’ (பக். 32)
      பிறகு ‘ ஒரு நொடியாயினும் அவளற்றுப் போவது யுகங்கள்’ (பக்.28) ‘அப்போது நீயில்லாத சுகமற்ற துன்பங்களில்/ உழன்றிருந்தேன்’ (பக்.40) ‘ சுழலும் பூமி மரங்கள் பறவைகள் காற்று/ மேகங்கள் கடலென யாவற்றின் மீதான/ ஈடுபாடுகளும் அவளில்லாத சூன்யத்தில்/ நினைவைவிட்டு அகல்கின்றன/’ (பக்.28) என அவளற்ற, அவள் அருகாமை சித்திக்காத பொழுதுகளை நொந்தபடி கவிஞன் தாபமேறி மருகுகிறான். கடைசிவரை அரூபமாகவே நின்றுவிடும் அப்பெண் வரிகளுக்கிடையே தன்னை மறைத்துக் கொள்ளும் சாகசம் கற்றவளாயிருக்கிறாள். உருவத்தைக் கலைத்து கலைத்து விளையாடுகையில் பொதுவில் வைக்கும்போதும் கவிஞன் தன் காதலை, காதலியை தனதானதாகவே காப்பாற்றிக்கொள்ள விழைகிறான். வழக்கமாக பளிச்சென்ற வரிகள் இடையோடி சொற்புதிரும் காட்சியனுபவமுமாய் மாறி மாறி விரியும் அய்யப்ப மாதவன் கவிதைகள் இக் காதல் கவிதைகளில் சற்று அடங்கி மொழிப்பரப்பில் இறுக்கமடைந்திருப்பதைக் ஒருவர் காண முடியும். காதலெனும் உன்மத்த உணர்வு கவிதையைச் செலுத்தும்போதும் ஒருவித நிதானம் கவிதைக்குள் வந்துவிடுவது அதிசயமே. இது புதுவிதமான கவி அனுபவத்தை சாத்தியமாக்குகிறது. நவீன கவிதைப் பரப்பில் காதலை ஒருவித தீவிரத்தன்மையுடனும் பிரத்தியேக வசீகரத்துடனும் எழுதிய ஆளுமைகளை யோசிக்கையில் உடன் நினைவுக்கு வருவது யூமா வாசுகியும் கண்டராதித்தனும். இருவரது காதல் கவிதைகளும் அதிகம் பேசப்பட்டவை. அய்யப்ப மாதவனது காதல் கவிதைகள் இவ்வரிசையில் அமர்வதற்கான எத்தனங்களைக் கொண்டிருப்பவை.                  காதலுக்கும் கவிதைக்குமான உறவின் அடிப்படை என்ன? லயித்தலும், சுகித்தலும், கலத்தலும், ஊடுதலும், தாகித்து ஏங்குதலும், நினைத்துத் துயர்கொள்ளுதலுமே காதல். இவற்றுக்கு வெளியே காதலைப்பற்றி எழுதப்படும் கவிதை காதல் செயலின் தேவையற்ற உடன் விளைபொருளன்றி வேறில்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் அபூர்வத் தருணங்களில் காதலின் ஒளிகூடிய நினைவின் பொற்பரப்பை வருடி உணர்வின் தகிப்புடன் மொழியில் பதிவுறுகிறது காதல் கவிதை. பின் உலகப்பொதுவான அனுபவமாக மாறி தனது இடத்தை காலத்திலும் மொழியிலும் உறுதிசெய்துகொள்கிறது. அப்போது அதன்மீது கவிஞனுக்கும் உரிமையிருப்பதில்லை. கவிதையல்லாது காதலை இம்மட்டும் கொண்டாடிய வேறொன்று உலகிலில்லை. அதேபோல் காதலல்லாது வேறொன்றால் கவிதை இத்துனை அழகும் ஒளியும் கொண்டதில்லை. காதல் உணர்வு நிலையின் தீவிரமும் அதன்பாற்பாட்ட அகக்கிளர்வுகளும் நீரோவியமாய் தீற்றப்பட்டிருப்பதும், மீண்டும் மீண்டுமான வாசிப்பில் அவற்றின் உள்கிடக்கைகள் பெருகிக் கொண்டே போவதுமான அய்யப்ப மாதவனது காதல் கவிதைகளை புதிய வகை மாதிரிகள் என்றே சொல்ல வேண்டும். அதே நேரம் காதலை, காதலியை வனம், மழை, காற்று, வெளி போன்ற இயற்கையின் கூறுகளாகக் கண்டு புலம்பல் மொழியைக் கையாண்டு படைக்கப்பட்ட தன்மையினால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணும் உன்னத சங்கீதங்கள் பகுதியின் காதல் கவிதைகளின் சாயலை இக்கவிதைகள் கொண்டிருப்பதையும் ஒருவர் ஒப்பிட்டு உணர முடியும்.
      காதல் கவிதைகளுக்குப் பிறகு தொகுப்பிலுள்ள பொதுவான கவிதைகளை வாசிக்கையில் ஏனோ சிறிது காலம் பிரிந்திருந்த நண்பனொருவனை மீண்டும் சந்திக்கும் உணர்வு. அர்த்தங்கள் நழுவிச் சென்றபடியேயிருந்து தீர்க்கமான ஒரு சித்திரத்தைச் சென்றடையும் இக்கவிதைகள் ரசனைமிக்க வாசிப்பனுபவத்தைத் தருபவை. ‘காற்றின் மீதே உறங்குகின்றனர்’ கவிதை குழந்தைகள் உலகை அவதானிக்கும்போதே குழந்தைகளாக இருக்க முடியாத வளர்ந்தவர்களின் இயலாமையும் பதிவு செய்கிறது. ‘உள்ளும் வெளியும்’ கண்ணாடியுடனான குழந்தையின் உறவைப் பற்றியது. இக்கவிதை இதே போன்றதொரு சங்கர ராமசுப்ரமணியன் கவிதையை நினைவூட்டவும் தவறவில்லை. ‘கதவுகள் விற்பனைக்கு’, ‘ஆப்பிளுக்குள் ஓடுகிற ரயில்’, ‘மரவுடல் அத்துமீறல்’, ‘ரம்மியாடும் நிழல்’ போன்ற கவிதைகள் நிறைவான வாசிப்பனுவம் தருபவை. ‘மிருகச் சேட்டைகளில் மூழ்குகிற நகரமோ/ வித்தைகளை இனாமாய்த் துய்த்து மறைகிறது’ என்ற வரிகளமைந்த ‘குரங்காட்டி நகரம்’ கவிதை தன்னுள் ஒரு சாட்டையை ஒளித்து வைத்துள்ளது. ‘நதியோடிய கவிதாவின் முகம்’ வழமையானதொரு பத்திரிக்கைச் செய்தியை வலுமிக்கதொரு சித்திரமாக்கி மனதை இருளில் கவிழ்த்துவது. கண்ணீர் பெருகும் கவிதாவின் முகம் நதியோடிய முகமாய் ஒரு ரொமாண்டிஸிசப் படிமமாகிவிடுகையிலும் யதார்த்தத்தைக் குறியிட்டு நிற்குமிடத்தில் அய்யப்ப மாதவனது மொழி புரியும் ரசவாதம் கவனிக்கத் தக்கது. இதுபோன்ற ரசவாதமே அய்யப்ப மாதவனது கவிதைகள்பால் வாசக ஈர்ப்பினைத் தக்கவைத்திருப்பது. உண்ணும் குச்சியால் ஒற்றை பாஸ்டா இழையை வாய்க்குக் கொண்டுபோக விழையும் முயற்சியின் சுவாரஸ்யங்கள் கொண்டது அய்யப்ப மாதவனது கவிதை மொழி. அதில் பூடகமற்ற பூடகங்கள் உள்சரிந்து உள்சரிந்து காட்சியனுபவம் மேலெழுந்து வருகிறது. லயங்கொண்ட இக் கவிதைமொழி அர்த்தங்களைத் தொட்டும் விலகியும் பயணித்து இறுதியில் பொருத்தப்பாடுடைய காட்சிகளை, அனுபவ மீட்டுருவாக்கங்களை நிகழ்த்துகிறது. மொத்தத்தில் உவப்பானதொரு வாசிப்பனுபவத்தை சாத்தியமாக்கும் வல்லமை இக்கவிதைகளுக்கு வாய்த்துவிடுகிறது. மொழியைக் கூர்மையாக்குவதற்கு பதில் இழைத்து மென்மையாக்குவதன் வழி அர்த்தம் செறிந்த நெகிழ்வான கவிதைகள் உருக்கொள்கின்றன. இதுவே அய்யப்ப மாதவனது கவி வலிமை. தொடர்ந்து இதுபோன்ற கவிதைகளையே ஒரு வாசகன் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறான். காதலின் உணர்வுப் புலம் தாண்டினால் நாம் எப்போதும் எதிர்கொள்ளும் வாழ்வுதான் காத்திருக்கிறது. அவ்வாழ்விலிருந்து எடுத்து எழுதப்படுவதற்காய் ஆயிரமாயிரம் வரிகள் இறைஞ்சிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அய்யப்ப மாதவன் செவிகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு முடிக்கிறேன். 
   
                                                       ___________________

 ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்(கவிதைகள்) அய்யப்ப மாதவன் வெளியீடு: உயிர்மை

 ·  · Monday at 17:50 · 

Friday 2 March 2012

கூடங்குளத்து சாஸ்தா





பாம்பாட்டிச் சித்தன்

கூடங்குளத்து சாஸ்தா கோவிலில்
சாமியும் அவர்தான்
ஆசாமியும் சாஸ்தாதான்
அக்கம் பக்கம்
ஆட்களிலிருந்தால் சாமியாகவும்
இல்லாவிட்டால் ஆசாமியாகவும்
நடமாடுவார்.
கள்ளியும், கரையான் புற்றுகளும்
தேங்கிய நிலத்தில்
பீடி சுருட்டுபவர்கள்
கட்டுமரமேறி வலையில்
கடல் கொண்டுவரும் செம்படவர்கள்
மானாவாரி உழவர்கள்,
மாணவர்கள்
அனைவருக்கும் அவர்தான் தெய்வம்
ஆனால் கடந்த 15 நாட்களாக
யாரும் சாஸ்தாவைக் காண வரவில்லை
அவரது கைவசமிருந்த தானியங்களும்
பழங்களும் தீர்ந்துவிட்டன
அந்த சிறு கோவிலின் தகவல் பலகையில்
எழுதப்பட்ட பிரதோஷம்
என்ற எழுத்துக்களும்
அதற்குக் கீழாக
அங்கு படிப்பதற்காக வந்த பத்தாம் வகுப்பு
மாணவர்கள் கடைசியாக எழுதிவிட்டுச் சென்ற
அணுக்கருப் பிளவுச் சமன்பாடும்
மங்கிவிட்டிருந்தன
15 நாட்களாக அவருக்குத் தட்டுப்பட்டவர்களெல்லாம்
வெளிறிய வெண்ணிறத்தில்
தலைக்கவசமும், உடைகளும், கையுறைகளும்
அணிந்தவர்கள்தான்.
கனமான காரீய உடைகள், தலைக்கவசம்
கையுறைகள் அணிந்த  உயிரியல் ஆராய்ச்சியாளனாக
நான் சொல்வது
‘மேட்ரியோஷ்கா’ பொம்மைகளின்
ஆழத்தில் அடர்த்தி எனும் கருத்து
மீண்டும் ஒருமுறை பொய்யாகிப் போனது
கட்டுப்பாடற்ற தொடர்வினை.
அதன்பின் ஓர் அணு உலை வெடிப்பு
இங்கு எல்லாம் மாறிவிட்டன
கூடங்குளத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவிற்கு
முள்வேலியிடப்பட்டது.
________________________________
கதிரியக்க அபாயம்
மனித நடமாட்டம்
தடை செய்யப்பட்டப் பகுதி
_______________________________
என்கிற அறிவிப்போடு
பலகைகள் ஆங்காங்கு நடப்பட்டன
அந்த எல்லையில் நுழையும்
நானும் எனது அடையாள அட்டையும்
பரிச்சயமானதால்
அந்த சோதனை சாவடியின் காவலாள்
எனது வாகனம் உள்ளே செல்ல
அனுமதிக்கிறான்
மண், நீர், காற்று
அனைத்திலும் கதிர்வீச்சு கலந்துவிட்டது

வான்நோக்கி வளராமல்
விநோதமாய் வளைந்த
இலைகளற்ற மரக்கிளைகள்
விசித்திர மாற்றங்களையடைந்த
தாவரங்கள்
வளர்ச்சி குன்றிய வால் இறகுகளும்
ஆங்காங்கு இறகுகள் உதிர்ந்த
இடைவெளிகளோடு
பறவைகளாகக் காட்சியளிக்காவிடினும்
அவை பறவைகள்தான்
கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட
நாயொன்று பெரும் ஆமையைப் போன்று
ஊர்ந்து கொண்டுள்ளது.
மனித வரம்பு முடியிமிடத்தில் துவங்கும் வெறுமை
கைவிடப்பட்டு
சிதைவுகளை நோக்கி முன்னேறும்
சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள்
பயன்பாடு இழந்த நெடுஞ்சாலைகள்
யாருமற்ற கடைவீதிகள், பள்ளி, கல்லூரி
மற்றும் மருத்துவமனை வளாகங்கள்
இவற்றிலிருந்து யாரோ ஒருவர்
நடப்பதைக் கண்காணிப்பதுபோன்ற பீதியுணர்வு
அநாதைகளாய் விடப்பட்ட கோவில் தெய்வங்கள்
மற்றும் வெறுமையின் எல்லைகள்
எனது வாகனத்தை சாஸ்தா கோவிலின் முன்
நிறுத்தி இறங்கி
எனது கைகர் எண்ணியில்
கதிரியக்க அளவை
சோதித்தபோது 6.37 என
அபாய அளவைக் காட்டியது
கதிரியக்கம் மிகுந்த இப்பகுதியில்
பறவைகளும் மிருகங்களும் சொற்பமே
இவைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட
விந்தணுக்கள் அசாதாரணமாயும்
நீந்தும் திறன் குன்றியும்
காணப்படுகின்றன
உயிர் வாழும் மற்றும்
இனப்பெருக்கத் திறன் குறைந்துவிட்டது.

சாஸ்தா அந்த வட்டாரம் முழுக்கத் தேடியும்
யாரும் தென்படவில்லை
சற்று தள்ளியிருக்கும் சுடலைமாடன்
சாஸ்தாவின் துணைக்கு வந்தார்
இன்னும் சற்று தள்ளியிருக்கும்
ஆன்ட்ரூஸ் தேவாலயத்திலிருந்து
தேவன் ஆன்ட்ரூஸ் அவர்களோடு
சேர்ந்து கொண்டார்.
அஞ்சு கிராமம், ராதாபுரம் என
சுற்றியலைந்த போது
எசக்கியம்மன், பத்ரகாளி, குழந்தேயேசு குரிசடை, முனியாண்டி
வெண்ணையடி பெருமாள், கரிசாஸ்தா ஆகிய தெய்வங்கள்
இவர்களோடு கைகோர்த்துக் கொண்டார்கள்
இரவெல்லாம் அலைந்து பட்டினியாய்
அவரவர் இருப்பிடம் திரும்பினர்
சாஸ்தாவுக்குத் துணையாய் சுடலைமாடன்
மாத்திரம் கூடங்குளத்தில் தங்கிவிட்டார்
மறுநாள்
கடலிலிருந்து மீன்களை
யாரும் காணாதவாறு
கொண்டுவந்து சுட்டுக்கொடுத்தார் சுடலைமாடன்
இன்னும் நிறைய மீன்கள்
செத்து மிதப்பதாயும்,
சாஸ்தா உம்ம இடுப்பிலிருக்கும்
வேட்டிய அவுத்தா ஏகப்பட்ட
மீன்கள் தேறுமோய் என்றார் கண்சிமிட்டியபடி
இதற்கிடையில் முனியாண்டி தெய்வத்திடம்
சேதி சொல்லி அனுப்பியிருந்தாள் எசக்கியம்மன்
மகேந்திரகிரிக்கு அந்தப்பக்கம்
மனிதர்கள் வசிப்பதாயும்
அவளும் இன்னும் பல தெய்வங்களும்
அங்கு போந் குடியேறப் போவதாயும்
சாஸ்தாவும், சுடலைமாடனும் விரும்பினால்
அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமென
இந்த சமயத்தில் சாஸ்தா கோவிலின் முன்
வந்து நின்ற வாகனத்திலிருந்து
இறங்கினான் அலுமினிய நிற
உடையணிந்த மனிதன்

எனது தலைக் கவசத்தைக் கழற்றிவிட்டு
சாஸ்தாவைக் கும்பிட்டேன்
பின் அவரை நோக்கிப் பேசத் துவங்கினேன்
‘ஐயா, நானும் இந்த மண்ணுல
பொறந்தவந்தான்
நீரு சாமியா இருக்கலாம்
அதுக்குன்னு இங்கன கெடந்து சாவாதீரும்
அணுகுண்டு வெடிச்சிருச்சு இந்த பூமியில
என்று கருதிக்கிரும்
கதிர் வீச்சு நோய் வந்துரும்
தோலு காஞ்சி, செதிள் செதிளா
உரிய ஆரம்பிக்கும்
சுவாசிக்குறப்ப
தொண்டை, சுவாசக்குழல் எல்லாம் காந்தும்.
மீனு, மிருகம், பறவை எல்லாஞ் செத்துக்கெடக்கும்
பட்டினியா கெடக்கோம்னு
எதையுஞ் சாப்பிடாதீரும்
கதிரியக்கம் உம்ம உடம்பெல்லாம்
பரவி செத்துருவீரு
காத்து மண்ணு தண்ணி எல்லாமே
மாசுப்பட்டு போச்சுவே
கெளம்பியிரும், இங்க நிக்காதீரும்வே, நிக்காதீரும்
உமக்கு நல்லது கெட்டதுன்னா
நீர்தாம்லே பார்துதுக்கிடனும்’
என்று சொல்லிவிட்டு தலைக்கவசத்தை
மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன்
வெள்ளையா கவசத்தை உடலெல்லாம்
மாட்டிட்டு வந்தவன்
காரேறி போனதுதான் தாமசம்
அந்நேரம் வரைக்கும் கருவறை மூலையில்
கல்லாக சமைஞ்சிருந்த முனியாண்டி
காத்தா ஒடிட்டாம்லே
ஓடுறதுக்கு முன்னாடி
ஒரு வாசகஞ் சொன்னான்
‘இதுக்குத்தாம்லே நம்மாளு
விஞ்ஞானியாகணுங்கிறது’
சாஸ்தாவோ சுடலைமாடனோ
அவ்விடத்தைவிட்டு
வெகுநேரம் நகரவில்லை
‘நாம சாமிலே
எந்தக் கதிரியக்கமும் மயிரியக்கமும்
நம்மளை என்னவே செஞ்சிரும்’
என்றபடி கையில் உரியத் தொடங்கியிருந்த
தோலைப் பிய்துத்து அகற்றினார்
கொப்புளமாகி எரிச்சல் கூடியது
தொண்டை வறண்டது
அருகிலிருந்த மரத்திலிருந்து
விகாரமான அலகுகளோடும்
அல்பினிச சிறகுகளோடும்
உருக்குலைந்த தோற்றத்தோடும்
இரு பறவைகள் விழுந்து மடிந்தன
சாஸ்தாவோ நெருப்புப் பற்றவைக்கும் பணியிலிறங்கினார்
சுடலைமாடனோ பறவைகளை சேகரித்துக் கொண்டு
ஒளித்துவைத்திருந்த
கதிரியக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு புட்டி
பரிசுத்த சாராயத்தைக்
கொண்டுவர விரைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------

-பாம்பாட்டிச் சித்தன் (இஸ்ரேலியம்)





Saturday 21 January 2012

இசைக்காத மீன்களின் அக்கார்டியன்


      

மீன்கள் வெயிலில் காயத்துவங்கிய அந்தக் காலைப் பொழுதில் காற்றினூடாக நான்கு திசைகளிலும் பின் பறவைகளற்ற வான் நோக்கியும் பரவ ஆரம்பித்த மீன்வாடையால் மூக்கைச் சுளித்தபடி வெளியே  வந்தவர்களுக்கு நேற்று ஊர் ஏரியில் மீன் கொள்ளையிட்டது  நினைவிலாடியது.  எவ்விதப் புகாருமற்றவர்களாய் மீன்வாடையோடு அந்நாளை அவர்கள் தொடங்கிய அக் காலையில் தேவாலயத்தின் பரந்த மைதானத்தைத் தவிர ஊரின் எல்லாவிடங்களிலும்  மீன் காய்ந்தது. முற்றங்களில், மொட்டைமாடிகளில், அகலமான தெருக்களின் ஓரங்களில், இடமில்லாதபோது வீட்டுக் கூரைகளில், நடைபாதைகளில், நெல்லடிக்கும் களங்களில் என உயிரின் மினுமினுப்பு இன்னும் எச்சமிருந்த உடல்களை காலைச் சூரியனுக்குக் காட்டியபடி மீன்கள் பரவிக் கிடந்தன. பிறகே மீன்களைக் கண்ட காக்கைக் கூட்டங்களின் சந்தோஷ இரைச்சல் கேட்டது. அது அவற்றை விரட்ட முற்பட்ட பலவகைக் குரல்களையும் விஞ்சி ஒலித்தது.  


               தன் அறையிலிருந்து வெளியே வந்த சின்ன ஃபாதர் தாமஸ் வழக்கமாய் பெரிய ஃபாதரின் அறையை நிறைத்து அறைவீடு முழுமையையும் வியாபித்திருக்கும் புகையும் சுருட்டின் மணத்தை எதிர்கொண்டார்.பிறகு மெதுவாகவே அவர் மீன்கள் வெயிலில் வதங்கும் வாசனையை நுகரத் தொடங்கினார். திடுமென அவ்வாசம் அவரை இன்னொரு காலத்தின் இன்னொரு வெளியின் சீதோஷ்ணத்துக்குள் கொண்டு நிறுத்தியபோது நிகழிலிருந்து வேறுபட்ட அந்தக் காற்றையும் வெயிலையும் வாசனைகளையும் மனிதர்களையும் அவர் உணர்ந்தார். கால நகர்வில் பின்னோக்கி இழுக்கப்பட்டவராகி, இறுகிப் படிமமாகிவிட்டவைகள் தடையற்று நீந்த ஆரம்பித்த தன் நினைவு மீன் வாசமேறி மிக ரம்மியமானதொன்றாகி ஆழ்மனத்தில் உறைந்துபோன ஞாபகத்தின் இடுக்குகளிலும் நுழைவதை அவர் கண்டார். அங்கே அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் அரைக் கால்சட்டையணிந்த சங்கோஜமிக்க பையனாக இன்னமும் குத்தகைதாரர்கள் மீன்பிடித்து முடித்திராத ஏரியின் கரையில் பொறுமையற்றுக் காத்திருந்த மக்கள் கூட்டத்துள் ஒருவராக நின்றிருந்தார். ஊரே நவுந்து போயி கடலோரம் குடியேறிட்டமாதிரி இருக்கு சாமி என்றபடி சோம்பாய் கொண்டு வந்த டீயில் மீன் மணத்தது.


*****

           ன்றைய பாடல் பூசைக்குத் தெரிந்து வைத்திருந்த பாடல்களை மேலோட்டமாக ஒரு முறை வாசித்துப் பார்த்த ஃபாதர் தாமஸ் வென்னீர் தயாராவதற்காகக் காத்திருந்த தருணத்தில் சுவரிலிருந்த அந்த ஓவியத்தைப் பார்த்தார். அதுவொரு பரந்த இயற்கைக் காட்சி ஓவியம். அவருக்கு முன்னிருந்த பாதிரியார்களில் யாரோ ஒருவர் வாங்கி மாட்டிவிட்டுப் போயிருந்த அந்த நீர்வண்ண ஓவியத்தில் முன்னணியில் வெளிறிய பூக்கள் காணப்பட்ட புல்வெளியையடுத்து மூடுபனியினூடாக துயரார்ந்த மலையொன்று தெரிந்தது. அம்மலையை சிரமத்துடன் ஏறிக் கடந்தபோது அந்தப் பக்கம் வறண்ட நிலக்காட்சியின் மையமாக ஏரியொன்றை அவர் கண்டார். வினோதமாக அந்தப்பக்கம் மூடுபனி இருக்கவில்லை. அங்கே நீர் துளியுமற்று வறண்டு முழுக்க முழுக்க மீன்களால் நிரம்பி விட்டிருந்த ஏரியில் தத்தளிப்புடன் சிறுமியொருத்தி மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவள் அவர் எப்போதும் காண்பவளும் இப்போது கைவிடப்படுதலின் துயரத்தைக் கண்களில் கொண்டிருந்தவளுமான மெலிந்த தேகம் கொண்ட குறும்புக்காரச் சிறுமி. நீரில்லாத ஏரியில் மீன்களால் பயமில்லை தடுமாற்றத்துடன் தனக்குத் தானே சொன்னவராய் அவர் திரும்பி நடந்தார். ஆனால் நடுங்கிய கால்களை எவ்வளவு பிரயாசைப்பட்டும் நகர்த்த முடியாதவராய் அசைவற்று பீதியுடன் நின்றார். பின்னால் திரும்பிப் பார்க்கவும் அவருக்குத் துணிவில்லை. நீண்ட நெடுநேரம் அசைக்கமுடியாது தரையோடு பிணைந்துவிட்ட பாதங்களை இயலாமையோடு பார்த்தபடியிருந்தார். கர்த்தர் நம் முன் செல்கையில் நமக்கு எங்கும் பயமில்லை சாமி, சுடுதண்ணி தயாராயிருக்கு சோம்பாய் வெளியேயிருந்து குரல் கொடுத்தார். 


*****

                   


  

                பெரிய வலைகள், கைப்பிடியுடன்கூடிய கச்சா வலைகள், வாளிகள், பழைய வேட்டி, புடவை, துண்டு என அவரவர் மீன் ஆசைக்கும் மீன் பிடிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் வெறுங்கையுடன் மீன்பிடி என்ற விளையாட்டுக்காய் வந்திருந்த சிறுவர்களே அதிகமிருந்தனர். இது போலப் பெருங்கூட்டமாய் மீன் பிடிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்கள் அரிது என்பதனால் ஊரே கூடித் திரண்டிருந்த அந்த ஏரியின் கரையில் தாமஸ் நின்றிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்றிருந்த ஜோஸஃபின் தலையில் கவிழ்த்திருந்த பிளாஸ்டிக் வாளியை சற்றே உயர்த்தி அவனைப் பார்த்து முறுவலித்தாள். ஆரஞ்சு வண்ணப் பாவாடையும், வெள்ளைப் பூக்கள் விரவிக் கிடந்த, கைப்பகுதி புடைப்புடன் தைக்கப்பட்ட மேல்சட்டையும் அணிந்திருந்த மெலிந்த தேகத்தினளான அவள் அந்த மஞ்சள்நிற வாளியெனும் வினோதத் தொப்பியினால் ஒளிபொருந்தி வசீகரமிக்கவளாகி நின்றாள். இது போன்ற இடங்களில் அவளைக் காண முடியாதபடிக்கான ஒழுங்குக் கட்டுப்பாடுகள் மதிற்சுவராய் நின்ற குடும்பத்தில் பிறந்திருந்த அவள் அக் கட்டுப்பாடுகளை மீறுவதில் தனித்தவொரு சந்தோஷம் இருப்பதைக் கண்டுபிடித்தவளாயும் எப்போதும் அவற்றை மீறும் துணிவுள்ளவளாயும் இருந்தாள். திடீரென அவனறியாத ஏதோவொரு அன்னியப் பிரதேசத்திலிருந்து அங்கு வந்துவிட்டவளைப் போலிருந்தவளைப் பார்த்து பதிலுக்கு முறுவலித்த தாமஸை இனம் புரியாத ஒரு சந்தோஷம் பற்றியது. வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் யாருடனும் பேசியறியாதவனாக இருந்தபோதும் ஜோஸஃபினைக் பார்க்கையில் மட்டும்  கிலேசமும் குளிர்ச்சியுமான கிளர்ச்சியொன்று தன்னுள் எழுந்து அடங்குவதை தாமஸ் உணர்ந்திருந்தான். சரியான குறும்புக்காரியும் அடாவடிக்காரியுமான அவள் தன்னைக் காணும் போது மட்டும் கண்களைத் தாழ்த்தி குறுஞ்சிரிப்போடு நாணிச் சென்றுவிடுவதையும் அவனால் புரிந்துகொள்ள முடியாமலிருந்தது. அவள் மஞ்சள் வாளியைக் கீழே இறக்காமல் ஓரக் கண்ணால் அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் உச்சிச் சூரியன் அவளைப் பார்த்தபடியே மேற்கே நகர ஆயத்தமாகியது. ராத்திரி பொரிச்ச தலப்பெரட்டயக்கூட விடாம பிடிச்சிட்டுத்தான் கரைஏறுவானுங்க போலருக்கு கூட்டத்திலிருந்த ஒரு முதியவள் சலித்துக் கொண்டாள்.

*****
             `தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே`. அஸ்தகால மணிக்கப்புறம் ஒலித்த ரிக்கார்டைக் கேட்டபடி கண்விழித்த பாதருக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற நினைவு வந்தது. அருகே மேசையில், போர்த்தப்பட்டிருந்த மெல்லிய வெள்ளைத் துணிக்குள்ளாக வெக்கைமிகு இரவொன்றை எதிர்கொண்டு உறைந்திருந்த அக்கார்டியனை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டதும் மெதுவாக இளகிய அக்கார்டியன் இறுக்கம் தளர்ந்த துருத்தியினூடாக தன்னைத் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தயாரானபோது உட்கார்ந்தபடி அக்கார்டியன் வாசிப்பது படுத்தபடி கக்கூஸ் போவதற்கு சமம்”, மேஜர் செமினரியில் பயின்ற காலத்தில் பாதர் லாசரஸ் கடும் நெடிமிக்க சுருட்டுப் புகையினூடாக உரத்துச் சிரித்தபடி சொன்னதும் தான் தனிமையில் அக்கார்டியன் வாசிக்கும் தருணங்களிலெல்லாம் மாறாத அதே நெடியுடன் ஒலிப்பதுமான அக்குரலை ஃபாதர் தாமஸ் அன்றும் கேட்டார். நரைத்து அழுக்கேறிய தாடியின் ரோமங்களைக் கடந்து பரவும் அந்த சுருட்டு நெடி பாதர் லாசரஸின் வாசம். அவர் புகைத்த சுருட்டிலிருந்து மட்டுமல்லாமல்  அவருக்குள் எங்கேயோயிருந்த அந்தரங்கமான வாசனைகள் கலந்ததுமாய் அது இருந்தது. நெருப்பில் புகையும் வெறும் புகையிலையின் மணமாக மட்டும் அது இருந்ததில்லையென்பதை ஒரு பாதிரியாராகி இந்த ஊருக்கு வந்தபின் நாளெல்லாம் இந்த அறைவீட்டில் தன்னை சூழ்ந்திருக்கும் பெரிய பாதிரியாரின் சுருட்டு வாசத்தை ஒப்பிட்டு அவர் உணர்ந்து கொண்டிருந்தார். அக்கார்டியன் மட்டுமல்லாது தாமஸுக்கு எவ்வளவோ விஷயங்களில் தெளிவு பெற உதவியிருக்கிறார் பாதர் லாசரஸ். பேராசிரியராக குருத்துவக் கல்லூரியில் அவர் கற்பித்த இறையியல் பாடத்துக்கும்  நடை போகிற மாலை நேரங்களில் மர்ஃபி டவுன் சிறுவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதோடல்லாமல் பலநேரம் அவர்களோடு நிஜமாகவே சண்டைபோட்டு கோபமாக ஆட்டத்தை முறித்துக்கொண்டு வருவது போன்ற செய்கைகளுக்கும் இடையிலான ஒரு விசித்திர வெளியில் அவர் தன்னை நிறுத்தி வைத்திருந்தார். ‘தாமஸ், திஸ் மேன் ஈஸ் எ ரியல் க்ராக்பாட், அன் எக்ஸ்ட்ரீம் எக்ஸென்ட்ரிக் தாமஸ் அவரோடு நெருக்கமாகத் தொடங்கிய நாட்களில் கால்பந்து ஆட்டமொன்றின் போது இணையாக ஓடிவந்தபடியே மூத்த செமினரியன் அருள் டேவிட் குசுகுசுப்பாக சொன்னதோடு அவரைப் பற்றி தாமஸ் ஏற்கனவே அறிந்திருந்த செமினரியில் எப்போதும் உலவும் வதந்திகளையும் ஒப்பித்தான். அதில் முத்தாய்ப்பனது அவர் ஒருபால் உறவில் நாட்டங்கொண்டவர் என்பது. உன் பின்புறத்தை நீ பத்திரமாய் பார்த்துக்கொள்வது நல்லது மூச்சு வாங்க ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பந்தைக் காலில் காவியபடி அருள் டேவிட் விலகியோடினான்.
*****

க்ஸ் சுபேதார் மிக்கேல்சாமி மதராஸ் என்ஜினியர்ஸில் பாய்ஸ் பட்டாளம் தொடங்கி ஆனரரி கேப்டன் வரையிலான தனது முப்பத்தியிரண்டு வருட சர்வீஸைப் பற்றிப் பேச ஆரம்பித்தாரென்றால் அது கால் நூற்றாண்டுக்கும் சற்றுகூடிய இந்திய ராணுவத்தின் வரலாறாகவும் மாறிவிடுவதால் எழுபத்தியொன்றில் பாகிஸ்தான் சண்டையின்போது வங்கதேச எல்லையில் இறைச்சி கிடைக்காமல் அணில்களைச் சுட்டுத் தின்ன நேர்ந்த வீரர்களின் அவலம் தொடங்கி, எண்பத்து நான்கில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின்போது பொற்கோவிலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைய நேர்ந்த வீரர்களது மனநெருக்கடி வரையான சுவாரஸ்யமிக்க பின்னணித் தகவல்களை நீங்கள் வேறு யாரிடமும் அத்தனைத் துல்லியமாகப் பெற முடியாது. ஆனால் அவர் அதே சம்பவங்களை ஒரு சிறிதும் கலப்படமின்றி அதே நபர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னபடியிருந்ததனால் அவர் பேச ஆரம்பித்து பேச்சின் கடிவாளத்தை இறுக்கி அதன் அடி வயிற்றில் பூட்ஸ் காலின் பின்புறத்தால் குத்தி வேகமூட்ட முனையும்போது கேட்டுக் கொண்டிருப்பவர் அங்கிருந்து கிளம்புவதற்கான கற்பனையான ஒரு காரணத்தை உருவாக்கியிருப்பார். முதிர் வயதின் பிசகுகள் படிந்த தன் ஞாபகப் பரப்பில்  யாரொருவரையும் ஐயப்பட அறியாதவராக மாறிவிட்டிருந்தருந்த அவர் சொல்லப்பட்ட காரணத்தினை கரிசனத்துடன் கேட்டு வந்தவரை வழியனுப்பி வைத்துவிட்டு சோர்வுடன் பேச்சை லாயத்தில் கட்டுவார். மனைவி பாக்கியமரியின் மரணத்துக்குப் பின் மௌனம் சகிக்க முடியாத சகவாசியாகிப்போனதால் பேச்சு அவரது தீராத விருப்பமாக மாறியிருந்தது. தொலைபேசிகளின் அண்மையில் பெற்றபாசம் பேணுபவர்களாக பிள்ளைகள். வடநாட்டில் குடும்பத்தோடு இருக்கும் பெரியவன் மோசஸ், அடுத்தவன் ஸ்டாலின் கடல் தாண்டி சிங்கப்பூரிலிருக்க அவன் மனைவி தாய்வீட்டிலிருந்தாள். கடைக்குட்டி ஜோஸஃபின். ஜோஸஃபினின் நினைவு அவரைத் தடுமாற வைத்தது. அவளைப் பற்றிய நினைவு எப்போதும் மிக்கேல் சாமியின் நினைவாற்றலின் செதில்களை உதிர்த்துவிடச் செய்து, பழகியதானாலும் அந்தப் பழைய வலியினை நிகழ்காலத்தினுடையதாகவும் மாற்றிவிடுவது. பாக்கியம் எவ்வளவு சொன்னாள். ஏன் அப்படி நடந்துகொண்டோம். எங்கிருந்து  அப்படியொரு மூர்க்கம் வந்தது. ஆடிக்கொண்டிருந்த நாற்காலி நின்றபோது மிக்கேல்சாமியின் விழியோரம் துளி நீர் தெரிந்தது. சலனமும் நிச்சலமுமான மனஓட்டம் சில கணங்கள் குமிழியிட்டுப் பின் அடங்கியது. போர்ட்பிளேரில் ஏழே நாட்களில் ஒரு விமான ஓடுபாதையை அமைக்கத் தன் கம்பெனிக்கு கமாண்டர் கர்னல் ராம்நாத் உத்தரவிட்டதும் அவர் லாயத்திலிருந்து திரும்பக் குதிரையொன்றை அவிழ்த்துத் தயாரானார். திரும்பவும் நாற்காலி ஆடத்தொடங்கியது.


*****
                                  விபச்சாரத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்ற உங்களுள் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும் என்றவர் ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும்போதே அவளோடு உன் மனதில் நீ விபச்சாரம் செய்தாயிற்று எனச் சொல்வது முரணாயிருக்கிறது - ஒரு லிபரல் சடாரென கன்ஸர்வேடிவ் பள்ளத்தில் இறங்குவது போல.

பதிலாக எதுவும் சொல்லாமல் பாதர் லாசரஸ் எழுந்து அக்கார்டியனில் உன் திரு யாழினில் இறைவா வாசிக்க ஆரம்பித்தார். அவர் இந்தப் பாடலை வாசிக்கிறார் என்றால் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். அபூர்வமாகவே அவர் இந்தப் பாடலை வாசிப்பார். அன்று யாழினை நீயும் மீட்டுகையில், இந்த ஏழையின் இதயம் துயில் கலையும் வரியினை சங்கதிகள் எல்லாம் சேர்த்து இரண்டு மூன்று தரம் திரும்பத் திரும்ப வாசித்தார்.

ஃபாதர் இன்னைக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கீங்க போல

ஃபாதர் லாசரஸ் சிரித்தார். அக்கார்டியனை மெதுவாக மேசைமீது வைத்தபின் சொன்னார் தாமஸ், பைபிள்ள ஏசுவுக்கு லிபரல் இமேஜ் உண்டாகற அல்லது உண்டாக்கப்படற இடங்கள்ள நீ சொன்ன முதல் சந்தர்ப்பமும் முக்கியமான ஒண்ணு. ஆனா நீ குறிப்பிடும் இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் ஒப்பிட்டு அவர் கன்ஸர்வேடிவோனு நினைக்கத் தூண்டறது உன்னுடைய வயசு. ஃபாதர் மறுபடியும் சிரித்தார். சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு கணம் தாமஸின் கண்களையே உற்றுப் பார்த்தவர் கேட்டார் யார் அந்தப் பெண்?.

எதிர்பாராத இந்தக் கேள்வி தாமஸை சற்றே நிலை குலைய வைத்தது. அவன் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தார் கமான் மை பாய், ஐ வாஸ் ஜஸ்ட் கிடிங்.

இல்ல பாதர், உங்ககிட்ட நான் பொய்சொல்ல விரும்பல. நிலை மீண்டவனாக தாமஸ் சொன்னான்.


*****



               ந்த வருடம் மீன்பாடு உண்மையிலேயே மிக அதிகமாக இருந்தது. கடந்த எட்டு நாட்களாக எங்கிருந்தெல்லாமோ வியாபாரிகள் வந்து கூடை கூடையாக சைக்கிளில் வைத்து ஏற்றிக் கொண்டு போனதில் குத்தகைத் தொகையைவிடவும் பலமடங்கு லாபம் கண்டபின்னும் ஏரியில் தீராமல் பெருகியபடி இருந்த மீன்கள் குத்தகைதாரர்களையே வியக்க வைத்தது. மீன்பிடி முடிந்தபின் இரவுகளில் வானிலிருந்து வந்து யாரோ மீன்களைக் கொட்டித் திரும்பவும் ஏரியை நிரப்பிவிடுகிறார்களோ எனவும் சிலர் ஐயப்பட்டனர். ஆனாலும் அவர்களுக்கு மீனைக் கொள்ளையிட இன்னமும் மனம் வரவில்லை. கரையில் நின்றிருந்த கூட்டமோ கட்டுமீறிப்போகும் அளவை எட்டியிருந்தது.ஏரியினுள் மீன்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த குத்தகைதாரர்களில் ஒருவரான முன்னாள் சபைமணியம் அந்தோணி மற்ற குத்தகைதாரர்களோடு ஏதோ பேசினார். இவர் சொன்னதை அவர்கள் பலமாக மறுத்தது போலிருந்தது. அவர்கள் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். சற்று கழித்து அவர்களிடையேயான பேச்சு வாக்குவாதமாய் மாறியது. கரை மீதிருந்தவர்கள் ஆர்வம் கூடியவர்களாய் கவனிக்க ஆரம்பித்திருந்தனர். மீன் கொள்ளையிடுவார்கள் என வந்து இதுவரை அவர்கள் ஐந்து நாட்களாக ஏமாற்றத்துடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தனர். வாக்குவாதத்தின் முடிவில்  கோபத்துடன் விலகிவந்த அந்தோணி மாறாத அதே கோபத்துடன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார். கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் சலசலப்பு அடங்கி திடீர் அமைதி வந்தது. அந்தோணி துண்டை தலைக்கு மேலே உயர்த்தி கரையைப் பார்த்து மூன்று முறை வலுவாகச் சுழற்றினார். அடுத்த கணம் மீன் கொள்ளையிட்டாச்சு என்ற உரத்த குரல்களும் வென்ற இரைச்சலுமாக சரிவான கரையில் திமுதிமுவென ஓடி ஊர் மொத்தமும் ஏரிக்குள் இறங்கியது.

*****


             ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இரண்டாவது பூசையின்போது பாட்டுக் குழுவில் தாமஸ் ஃபாதர் அக்கார்டியன் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை பூசை கடன் பூசை, அதிலும் இரண்டாவது பூசை வாரத்தின் சிறப்பான பூசை, பாடல் பூசை. காலை முதல்பூசைக்குப் பெரியவர்களும் வயதானவர்களும் கறி எடுத்து சமைக்கும் வேலையிருக்கும் பெண்களும் வந்து போய்விடுவதால் எட்டுமணிக்கு நடக்கும் இரண்டாவது பூசையின்போது தேவாலயம் எப்போதும் சிறுவர்களாலும் வயசுப்பிள்ளைகளாலும் நிறைந்திருக்கும். அக்கார்டியன் வாசிப்பதற்காகவே தாமஸ் ஃபாதர் தனக்கு ஒதுக்கப்பட்ட கிளைப் பங்குகளில் விரைவாக பூசைகளை முடித்துக் கொண்டு எட்டு மணிக்குள் திரும்பி விடுவார். அவர் அக்கார்டியன் வாசிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் ஒருநாள் எல்லோரும் பூசையை கவனிக்காமல் அக்கார்டியனில் அமுங்கி விரியும் துருத்தியையும் அதிலிருந்து சிலீரென்று ஒலித்த சன்னமான இசையையும் வியப்புடன் கவனித்தபடி ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்ற பெரிய ஃபாதரின் பாடலுக்கு உம்மோடும் இருப்பாராக என பதில் பாட மறந்த ஒரு சந்தர்ப்பத்தில் பெரிய ஃபாதருக்கு அக்கார்டியன் மீதும் அதை வாசித்த தாமஸ் ஃபாதர் மீதும் வந்த கோபத்தில் சற்று நேரம் பூசையை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார். அப்போதுமுதல் யார் பார்வையிலும் படாத, பாடல் குழு அமருமிடத்துக்கு அருகேயிருந்த பெரிய தூணின் உட்குழிந்த பகுதியை தனக்கும் தன் அக்கார்டியனுக்குமான இடமாக ஃபாதர் தாமஸ் தேர்ந்துகொண்டார்.

               அதிகாலையில் விலகாத தூக்கத்துடன் பாடல் பாடும் கொயர் பிள்ளைகள் மறந்தும் கண்ணயர்ந்துவிடாதபடிக்கு திடும் திடும் என அதன் பெடல் கட்டைகள் மரச்சுவரில் மோதி அதிர்வுகள் உண்டாகும்படி தேவாலயத்தின் சர்ச் ஆர்கனை வாசித்த சவரிமுத்து வாத்தியார்தான் பெரிய ஃபாதருக்கு அடுத்து அக்கார்டியனை எதிரியாகப் பார்த்த இரண்டாவது நபர். தன் ஏகபோக ராஜ்ஜியமாயிருந்த பாடல் குழுவில் நுழைந்து கம்பீரம்மிக்க தனது பழைய ஆர்கனை ஒரு ஒன்றுமற்ற வஸ்துவாக்கிவிட்ட அந்த வினோத இசைப்பெட்டியை, வாசிச்சுப் பார்க்கறீங்ளா? எனக்கேட்டு தாமஸ் ஃபாதர்  அதை வாசிக்கவும் கற்றுக் கொடுத்த தினம் வரை தீராத வன்மத்துடனே பார்த்து வந்தார். ஆர்மோனியத்தத்தான் ரெண்டு பக்கமும் கட்டைங்களை வச்சு நடுவுல துருத்திய திணிச்சு மாத்தி செஞ்சிருக்கான். துருத்தியோட சேர்ந்து கட்டைங்களும் முன்ன பின்ன போய்வருது அவ்ளோதான். ஆனா நம்ம ஆர்மோனிய சவுண்டு என்ன கம்பீரம். இதென்னமோ எச்சிலடைச்சிக்கிட்ட பீப்பி மாதிரி முக்கிக் முக்கிக் கத்துது. மரியசவரி வாத்தியரோடு சேர்ந்து தண்ணியடிக்கும்போது அக்கார்டியன் பற்றி சவரிமுத்து வாத்தியார் இப்படிச் சொல்லித்தான் புரையேறும் வரை சிரித்தார்.


*****

            ரியின் முட்டிக்காலளவு தண்ணீர் தாமஸுக்கு இடுப்பைத் தொடுமளவாக இருந்தது. ஏரி முழுக்க ஆட்களாய் இறங்கிய கணம் நீர்ப்பரப்பின் ஓரங்களிலிருந்த பீதியுற்ற தவளைகள் நாலாபுறமும் தாவித் தாவி ஓடி கரையோரப் புகலிடங்களையடைந்தன. சுற்றியிருப்பவர்கள் யாரென்று அடையாளங்காண முடியாதிருந்த நெரிசலில் கச்சா வலையை நீரில் அமுக்கி வெளியே எடுக்கையில் எதிரே குனிந்திருந்த பெண்ணின் வழித்துக்கட்டிய சேலையை, ஆணின் வேட்டியை, சிறுமியின் பாவாடையை மேலும் அது உயர்த்த சில இடங்களில் கோபமும் சில இடங்களில் சிரிப்புமாய் மீன்பிடி தொடர்ந்தது.எல்லோரும் மீன்களைப் பிடிப்பதில் மும்முரமாயிருக்க படபடப்பும் சந்தோஷமுமாய் நீரிலிறங்கிய தாமஸுக்கு முதலில் என்ன செய்வதெனத் தெரியவில்லை. குழம்பிச் சகதியாகிக் கொண்டிருந்த நீரில் கைகளை மூழ்கவிட்டு அளைகையில் வழுவழுவென நழுவியும் துள்ளியும் சென்றவைகளில் எதுவும் கைகளில் சிக்குவனவாகவில்லை. சற்றுநேரம் கழித்து சிக்கியவொன்றை வெளியே எடுத்து அது தவளையெனக் கண்டதும் அச்சத்துடன் தூர எறிந்தான். அப்படியே அளைந்து கொண்டிருந்தவன் சற்று கழித்து ஒருசேரக் கிடைத்த சின்னச் சின்ன ஆனால் அவ்வளவாக வழுவழுப்பற்ற நான்கு ஜந்து மீன்களை வலுவாகப் பற்றி மேலே கொண்டுவந்தபோது ஒரு பெண்ணின் விரல்களும் அவற்றோடு வளையல்களணிந்த அவள் கைகளும் மேலே வந்தன.  சிரிப்புடன் அவன் முன்னே ஜோஸஃபின் நிமிர்ந்தெழுந்து நின்றாள். அழுக்கு மஞ்சளாய் சகதி நீர் வழிந்து சொட்டிய கைகளைப் பற்றியபடி அவர்கள் நின்றனர். அவனும் சிரித்தான். விரல்களின் ஸ்பரிஸம் அவர்களுள் அந்தப் புதுவித விளையாட்டின் ருசியை தீவிரப்படுத்தியது. சுற்றி நின்றவர்கள் கவனமெல்லாம் தங்கள் கலன்களை மீன்களால் நிறைப்பதில் இருக்க, வந்து சிக்கிய மீன்களைக்கூடப் பிடிக்காமல் நெடுநேரம் இருவரும் நீருக்குள் விரல் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அன்று அந்த ஏரியின் நீர் மீன்கள், நண்டுகள், நத்தைகள், தவளைகள், சில நீர்க்கோழிகள், விலாங்கு மீன்கள் எனத் தவறாய் கணிக்கப்பட்டு பின் தூர எறியப்பட்ட தண்ணீர்ப் பாம்புகள் என தன்னிலிருந்து கொடுத்து பிள்ளைக் காதலொன்றின் களிகூடிய விளையாட்டில் தன்னைச் சேர்த்துக் கொண்டது. நிலத்தின் விளையாட்டுக்கள் நீருக்குள் நிகழ்கையில் அதீத மர்மமும் அமானுஷ்யமும் கூடியனவாக அவை மாறிவிடுவது நிலத்தைப் போலன்றி வெறும் பார்வையாளனாக இராமல் நீரும் விளையாட்டில் ஒருவராகத் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்போதுதான்.


*****

              ன்றொருநாள் காலைப்பூசை முடிந்து போகும்போது தூம்பாக் கொட்டகைக்குள்ளிருந்தபடி கிசுகிசுப்பான குரலில் அழைத்து ஹாப்பி பர்த்டே என ஜோஸப்பின் நீட்டிய சாக்லெட் டப்பாவை தாமஸின் தம்பியும் தங்கையும் துப்பறிந்து  கண்டுபிடித்த நாளில் அம்மாமுன் பதில் பேச வார்த்தைகளற்று நின்றான். ரோஸாலி தன் மகன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பளபளப்பான அந்த டப்பாவும் அதிலிருந்த விலைகூடிய இனிப்புகளும்  இரக்கமற்று உடைத்திருந்தன. தனக்குப் பாத்தியதையல்லாத ஒரு திருட்டுப் பட்டத்தினை ஏற்றுக்கொண்டிருப்பதன்  மூலமாக தன் வாழ்வில் அதுவரையும் அதன்பிறகும் தான் அனுபவித்திராத பவித்திரமான ஒரு பிரியத்தின், காதலின்  இதம்கூடிய வெம்மையை எப்போதைக்கும் இழக்காமல் இருந்திருக்கலாம் என்பது மட்டுமல்லாது யூதாஸ் ஸ்காரியோத்தினது போலாகிய தனது உண்மை தன்னிடம் பிரியம் காட்டியது தவிர்த்து ஒரு களங்கமுமறியாத ஆத்துமாவொன்றை சிலுவையில் பூட்டி வதைத்துவிட்டதில் காட்டிக் கொடுத்தலின் துரோகநிழலாவது தன் மேல் விழாமல் தப்பியிருக்கலாம்   என பிறகான காலங்களில் பலநூறு தரம் தாமஸ் கழிவிரக்கத்துடன் நினைத்து மறுகியிருக்கிறார். மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அப்பாவின் போட்டோ முன்பாக பைபிளில் அவனிடம் சத்தியம் வாங்கிய அம்மா அந்த சாக்லேட் டப்பாவை அதற்கு பாத்தியதையானவது வீட்டில் ஒப்படைத்தாள். ஹவில்தாரிலிருந்து நாயப் சுபேதாராக பதவி உயர்வு பெற்ற கையோடு விடுமுறையில் வந்திருந்த மிக்கேல்சாமி தன் நரம்புகளில் ஓடி திடப்பட்டுவிட்ட ஒழுங்கின் கிரமங்களை தன் மகளே பகிஷ்கரித்துவிட்டதாக சீற்றமடைந்தார். அடுத்து நடந்தவைகளுக்கு மிக்கேல்சாமி என்ற நபரை பொறுப்பாக்க முடியாதபடிக்கு ஒழுங்கின் வளையாத செங்கோல் அவரை வழிநடத்தியது. மறுநாள் காலையே ஜோஸஃபின் கேரளத்தில் வசிக்கும் தன் சித்தி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். மனைவி பாக்கியமரியின் கெஞ்சல்களும் கதறல்களும்  அவரை சற்றும் அசைக்கவில்லை. ஜோஸஃபின் கேவியபடி ரயிலேறும்போது அவர் சொன்னார் நானாக விருப்பப்பட்டு உன்னைப் பார்க்க வரும்வரை, எத்தனை வருடங்களானாலும் சரி, என் முகத்தில் வந்து நீ விழிக்கக் கூடாது. மீறல்களுக்கு அனுமதியில்லாத தனது ஆளுகைப் பிரதேசத்தில் நிகழ்ந்த முதல் அத்துமீறலை சரியான வகையில் சீர் செய்த நிம்மதியும் பெருமையும் முகத்தில் தெரிய  ரயில் நிலையத்திலிருந்து குலையாத கம்பீரத்துடன் அவர் வெளியே வந்தார்.

*****


               ஜெர்மனியின் டூபிங்கன் பைபிள் விமர்சனப் பள்ளி, திருச்சபை தடை செய்த கறுப்பு வேதாகமம், கைவிடப்பட்ட புதிய ஏற்பாடுகள், பைபிளின் பல ஆகமங்களும் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளும் திறமையாக எப்படி எடிட் செய்யப்பட்டன என்பது பற்றியெல்லாம் ஃபாதர் லாசரஸ் அவனோடு பேசியிருக்கிறார். பின்காலத்தில் கடுமையான நிறுவனமயமாதலுக்கு ஆட்பட்டது உள்ளிட்ட கிறித்தவத்தின் இந்த எல்லாப் பிசகுகளையும் மூடி மறைக்குமளவுக்கான ஆளுமையும் அகதரிசனமும்  மிக்க மனிதராக இயேசு கிறிஸ்து இருப்பதும், உலகத்தின் மீதான கிறித்தவ நிறுவனத்தன்மையின் இறுகிய பிடியும் எந்தக்காலத்திலும் எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொண்டாலும் அது உயிர்த்திருக்க உதவும். ஒரு பாதிரியாராக கிறித்தவத்தைக் கண்மூடி ஏற்கவேண்டிய அவசியமில்லை என ஃபாதர் லாசரஸிடமிருந்து தாமஸ் கற்றுக்கொண்டிருந்தார். வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விதிக்கப்பட்டவற்றினூடாக வாழ்ந்து தேடுவதும், கேள்விகளுக்கு வெளியேயிருந்தல்லாமல் கேள்விகளின் வழியாக தொடர்ந்து நகர முற்படுவதுமே சிறந்த வழிமுறையாக இருக்கமுடியும் என்பார்.  ஜோஸஃபின் தந்த சாக்லெட் டப்பாவினூடாக அல்லாமல் அதற்கு வெளியே நின்று தான் தீர்வைத் தேட முற்பட்டிருக்க வேண்டாம் என தாமஸ் எண்ணிக் கொண்டார். ஃபாதர் லாசரஸ் பரிசளித்த அக்கார்டியன் ஒரு பெரிய சாக்லெட் டப்பாவாய் இருந்தது. அதனூடாக கடக்க வேண்டிய தருணங்களை முன்னிட்டு அதை எப்போதும் பத்திரமாய் தன்னோடு வைத்திருக்க உறுதிகொண்டார் தாமஸ்.

*****


              வித்த மரவள்ளியின் வாசனை நிறைந்ததிருந்த திருவனந்தபுரத்து புறநகரொன்றின் சற்றே குறுகலான தெருவிலிருந்த அவ்வீட்டின் முன்  புதிய ஆடைகளும், இனிப்புகளும், இன்னபிற தின்பண்டங்களும் நிறைந்த பையுடன் ஆட்டோவில் இறங்கிய மிக்கேல்சாமி இரண்டு வருடங்களில் தன் மகள் எப்படி வளர்ந்திருப்பாள் என்ற கற்பனை மேலிட்ட சாதாரணத் தகப்பனாக அழைப்பு மணியை அழுத்தினார். கண்டிப்பான ஒழுக்கம் என்கிற ஆயுதத்தாலன்றி மனிதனுக்கு விமோசனமில்லை எனும் உறுதிப்பட்ட தனது கோட்பாட்டின் மீதான நம்பிக்கையினால் தன் மகள் பெரும் ஒழுக்கச் சரிவிலிருந்து காப்பாற்றப்பட்டது குறித்த நிம்மதியையும் அவர் கொண்டிருந்தார்.அவர் மனைவியின் தங்கை வீட்டில் சிரம பரிகாரம் முடித்தவர் தாளாத ஏக்கத்தை அடக்கியவராய் இயல்பாக `ஜோஸஃபின் எங்கே?` எனக் கேட்டார். உள்ளே  சம்மனசுமரி சென்ற திசையில் சற்று நேரம் அமைதியும் அதைத் தொடர்ந்து உரத்த பேச்சாக மறுக்கும் குரலும் கெஞ்சல்களும் மாறி மாறிக் கேட்டன. அப்படியே நெடு நேரத்துக்கு நீடித்த உரையாடலின் முடிவில் சம்மனசுமரி மட்டும் திரும்பி வந்தாள். `ஒண்ணுமில்ல… அவளுக்கு இன்னும் அந்தக் கோவம் போகல… உங்களப் பார்க்க மாட்டேங்கறா… சின்னப்புள்ளதான கொஞ்சநாள் போயி விவரம் புரிஞ்சா சரியாயிடுவா…`. மிக்கேல்சாமி சற்று நேரம் ஒன்றும் பேசாமலே அமர்ந்திருந்தார். பிறகு சொல்லிக்கொள்ளாமலே எழுந்து வெளியே வந்தவர் எப்போதும் வட்டத்தின் விளிம்புகள் வளைவானதாகவும், சதுரத்தின் பக்கங்கள் நேர்க்கோடாகவும்  எல்லாருக்கும் இருந்துவிடுவதில்லை என எண்ணிக்கொண்டார். தன் ஒழுக்க விதிகள்  ஏதோவொன்றைக் காணத் தவறிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. நுட்பமான அது புலப்பட்டும் புலப்படாதது போலிருந்தது. அதன் பிறகு பலமுறை, ஜோஸஃபின் அவரை மட்டுமல்ல அவர் வீட்டில் யாரையுமே பார்ப்பதில்லை என்பதில் திண்ணமாக இருந்தாள்.பாக்கியமரி தொலைவே நின்று தன் மகளை அவளறியாமல் பார்த்துவிட்டு வர நேரும் அவலத்தை அழுதழுது பேசி ஓய்ந்தாள்.சமரச முயற்சிகள் எதற்கும் அசைந்து தராத  ஜோஸஃபின் தன் புகைப்படம் கூட தன் வீட்டுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டாள். தன் குடும்பத்திடமிருந்து தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்ட அவள் இறுதி வரை அக்குடும்பத்துக்கு தொடர்பற்றவளாய் வாழ்ந்து மடிவது என்ற வைராக்கியமொன்றையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டாள்.

*****



                ன்டர்வெலுக்கு வெளியே வந்த பள்ளிக் கூடப் பிள்ளைகள் மூன்றரை மணிக்கெல்லாம் திடீரென இருள ஆரம்பித்த வானத்தைக் கண்டு முதலில் வெருண்ட போதும் கனமான துளிகள்  விழக்கண்டு ஆரவாரக் கூச்சல் எழுப்பினர். ஆலங்கட்டிகள் கடும் ஓசையுடன் கூரைகள் மீதும் சிமெண்ட் தரைமீதும் விழுந்தன. திறந்த வைளியில் இருந்த சில பானைகள்கூட உடைந்தன. பின் வானம் திறந்துகொண்டதுபோல மழை கொட்ட ஆரம்பித்தது.யாரும் எதிர்பாராத இக் கோடைமழை குழந்தைகளை குதூகலப்படுத்தியது. ஆலங்கட்டி சேகரிக்கும் சாக்கில் மழையில் நனைய விரும்பிய பிள்ளைகள் டீச்சர்களின் அதட்டலுக்குப் பயந்து வகுப்பறைகளுக்குள் ஒடுங்கினர். ஆலங்கட்டிகள் மேல்விழுந்தபோது ஊரெங்கும் காய்ந்துகொண்டிருந்த மீன்கள் உயிர்பெற்ற பாவனையில் சற்றே துள்ளின. பிறகு கொட்டிய மழை சடுதியில் வெள்ளமாய் மாறியபோது மீன்களை சேகரித்து பத்திரப்படுத்த யாருக்கும் அவகாசம் இருக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா மீன்களையுமே மழைவெள்ளம் தன்னுள் இழுத்துக் கொண்டுவிட்டிருந்தது. ஆலங்கட்டிகள் வீழ்ந்த ஓசையும்,மழை கொட்டிய பேரோசையும் சின்ன ஃபாதர் தாமஸின் மதிய தூக்கத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டதில் எழுந்து வெளியே வந்தவர் ஜன்னலோரம் நின்று திரண்டோடிய வெள்ளத்தைப் பார்த்தார்.வெள்ளம் எவ்வெவற்றையோ தன்னுடன்  சேர்த்தபடி கலங்கலாய் ஓடியது. தேவையற்றவை தேவையுள்ளவை என எல்லாமே ஒன்றாகி வெள்ளத்தில் கலந்தோடின.அவர் அழுக்காய் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அதில் ஊரெல்லாம் காயவைக்கப்பட்டிருந்த மீன்களும் பயணிப்பதைக் கண்டார்.  சுழித்தோடிய  வெள்ளத்தில் மிதந்த உயிரற்ற மீன்கள் நீந்தும் பாவனையிலிருந்தன. வெள்ளத்தின் ஓட்டம் அவற்றுக்கு அளித்திருந்த அந்த பாவனை பொருந்தாமல் கூட்டம் கூட்டமாய் எல்லாக் குப்பைகளையும் போல புரண்டோடிய அவைகள் எப்படியேனும் திரும்ப உயிர்பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செல்வன போலிருந்தன.அவர் அம்மீன்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மஞ்சள் நிற வாளியும் சில சாக்லெட் டப்பாக்களும்கூட வெள்ளத்தில் பயணிப்பதை அவர் கண்டார். “நாளைக்குக் காலையில மூக்கப் பிடிச்சிக்கிட்டு எழுந்திருக்க வேண்டியிருக்காது சாமி தக்காளி சூப்புடன் வந்த சோம்பாய் சொன்னார். ஏறத்தாழ காய்ந்த மீன்களெல்லாமே வெள்ளத்தோடு போனபின்பும் தீராமல் மழை பெய்தபடியிருக்கையில் அவசரமாய் தன் அறைக்குத் திரும்பிய ஃபாதர் தாமஸ் அக்கார்டியன் அங்கே பத்திரமாய் இருக்கிறதா என ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

*****
    

                வர்களது விளையாட்டு சலிக்காததாய் நெடு நேரத்துக்கு நீண்டுகொண்டிருந்தது. பிறகு, ஒற்றை மீனுமின்றி கரையோரம் தவளைகள் சூழக்கிடந்த அவளது மஞ்சள் வாளிக்கு ஒரு சிறு மீனையேனும் கொண்டு சேர்க்க உறுதி கொண்டவர்களாய் அவர்கள் விளையாட்டிலிருந்து நீரை விலக்கிவிட்டு எல்லோரையும் போல கை கோர்த்து மீன் தேடினர். நீருக்குள் தன்னைப் பிடிக்க நீண்ட பல நூறு வலைகளையும் கைகளையும் தப்பித் துள்ளியும் நீந்தியும் வந்த கெளுத்தியொன்று விளையாட்டில் கோர்த்துக் கிடந்தபடி தன்னைப் பிடிக்க முயன்ற இரு ஜோடிக் கைகளெனும் வலையினை தன் கொடுக்கால் வெட்ட முனைந்தது.ஒரு கையில் மீனுடன் வலிதாளாமல் மறுகையை உதறினான் தாமஸ். அவன் கையைப் பரிசோதித்துவிட்டு  எங்கோ ஓடிப்போனவள் சுண்ணாம்புடன் திரும்பி வந்தாள். கடிவாயைச் சுற்றி சிவந்திருந்த விரல்பரப்பில் அவள் வைத்த சுண்ணாம்பின் வெண்மை மெல்லக் காதலின் வண்ணமாய்ப் பரிணமிக்கத் தொடங்குகையில் ஏரியினை மேற்குச் சூரியன் நிறம் மாற்றத் தொடங்கியது. அந்த மாலையில் மனம் இன்னும் ஏரிக்குள் மிதந்தபடியிருக்க வானத்தின் பொன்மஞ்சள் நிறைந்திருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் மீசை விரைக்க நீந்திக்கொண்டிருந்த ஒரேயொரு கெளுத்தி மீனுடன் எல்லாரோடும் சேர்ந்து அவளும் வீடு திரும்பினாள்.


அறைவீடு - ஊரில் பாதிரியார்கள் வசிக்கும் பங்களா. சோம்பாய் - பாதிரியார்களுக்கு சமையல் செய்பவர். தூம்பா - இறந்தவரின் உடலை வைத்து கல்லறைக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வண்டி. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி; கல்குதிரை (2011)