Friday 20 February 2015

நீலநாயின் கண்கள்: அசதாவின் மொழிபெயர்ப்புக் கதைகள்.

                                                 

     

                                         


குட்டி ரேவதி

  

'நீலநாயின் கண்கள்' என்ற அசதாவின் மொழிபெயர்ப்புக்கதை தொகுப்பு, தமிழ் வாசகர்களுக்கு மட்டுமன்று, எழுத்தாளர்களுக்கும் முக்கியமானதொரு வருகை. சமீபத்தில், மார்க்வெசின் ஒரு நீளமான நேர்காணலை ஆங்கிலத்தில் வாசித்தேன். அதில் எப்படி அவர் எழுத வந்தார் என்பதை அழகாகச் சொல்லியிருந்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் பிறந்த ஊருக்கு அவருடைய அம்மாவுடன் சென்ற போது, அவர் கற்பனை ஏதும் செய்யவேண்டியிராத அளவிற்கு, அந்த ஊரே வாசிப்பதற்கும், அதைப் பார்த்து அப்படியே எழுதிப் பிரதி எடுப்பதற்குமான எல்லா காட்சிகளுடனும் ஒரு புனைவு நிறைந்து இருந்ததாகக் கூறினார். இத்தொகுப்பில் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள், இசபெல் ஆலண்டே, மார்க்வெஸ் மற்றும் வில்லியம் ஃபாக்னரின் கதைகள் இருப்பதும் கூடுதல் சுவை.

தொடக்கத்தில், நமக்கு அறிமுகமான ரஷிய இலக்கியங்களாகட்டும் மற்ற அயல் மொழி இலக்கியங்களாகட்டும், இன்று மீண்டும் வாசிக்கையில் எந்த அளவிற்கு அவை சாதிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும்பாலும் பார்ப்பனியக் கொச்சை மொழியில், பார்ப்பனீயர்கள் உரையாடிய வழக்கிலேயே அயல்நாட்டு மனிதர்களும் உரையாடுவது கேலிக்கு இடமானதாக இருக்கிறது. உண்மையில், இதிலிருந்து தப்பித்தவன், தாஸ்தாயேவ்ஸ்கி மட்டும் தான் என்று நினைக்கிறேன். அவனுடைய இலக்கியங்களில் இருந்த வறுமையும் நேரடித்தன்மையும் உன்னதமும் கூட்டாகச்சேர்ந்து மொழிபெயர்ப்பாளரை அதன் அசாதாரணத்தன்மையை நோக்கி இழுத்துச்சென்றிருக்கலாம். அசதாவின் மொழிபெயர்ப்பு அதிலிருந்து விடுபட்டு இருப்பதற்குக் காரணம், சமீபத்தில் பரவலாக எல்லா பின்புலத்திலிருந்தும்  தமிழ்ச்சொற்கள் உற்பத்தியாகி வந்து நமது சிந்தனையிலும் கற்பனையிலும் கலந்து புதிய  கற்பனைக்கான வேதியல் மாற்றங்களை   உருவாக்கியிருப்பது தான்.  

'நீலநாயின் கண்கள்' தொகுப்பில், உள்ள கதைகளுக்கு இடையே பொதுச்சரடு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார், அசதா. கதைகளைத் தொடர்ந்து வாசித்து முடிக்கையில் எனக்கு அப்படித்தோன்றவில்லை. வெவ்வேறு பெண்களின் ஆளுமையும், கதை நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் கற்பனை வெளியும், எழுத்தாளர்கள் அவர்கள்  குறித்து தரும் உடல் திடமும் நூலெங்கும் தொடர்ந்து இருக்கின்றன. ஆசிரியை ஐனேஸ் ஆகட்டும், வில்லியம் ஃபாக்னரின் எமிலி க்ரையர்ஸனாகட்டும், ஜேம்ஸ் தர்பரின் கதையில் வந்து போகும் திருமதி மிட்டி ஆகட்டும், மார்க்வெஸின் 'நீலநாயின் கண்கள்' கதையில் கனவுக்குள் வரும் பெண் ஆகட்டும் ஒரு பிடிவாதமான பெண் குணநலன்கள் நூலெங்கும் விரிந்து கிடக்கின்றன. இது தற்செயலான ஒன்றாகவும் இருக்கலாம்.

'ஆசிரியையின் விருந்தாளி' என்ற இசபெல் ஆலண்டேயின் கதை அப்படியே நம் நிலவெளியில் நிகழும் கதையை ஒத்திருக்கிறது. ஒரு மாம்பழத்தைத் திருடியதற்காக, சிறுவன் சுடப்பட்ட கதை. நீதியும் தண்டனையும் அறமும் பிழையாகாமல் பார்த்துக்கொள்ளும் பணியை ஒரு சமூகமே தன் கையில் எடுத்துக்கொள்வதைப் பற்றிய கதையாக இருக்கிறது. கீழைத்தேயங்களில் எப்பொழுதுமே வாழ்வின் வெளியிலிருந்து தான் நீதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன, ஏடுகளின் வெளிகளிலிருந்து இல்லை.

மார்க்வெஸின் 'நீலநாயின் கண்கள்' கதையை வாசித்துவிட்டு, தொடர்ந்து அடுத்த கதைக்குச் செல்லும் போது, கனவு வெளிக்குள்ளிருந்து வெளியேற இயலாமல் இன்னும் நம் இருப்பு அங்கேயே நிலைப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. இது மார்க்வெஸின் கதை மற்றும் அசதாவின் மொழிபெயர்ப்பின் கூட்டு சாதனையாக இருக்கலாம். 

இசபெல் ஆலண்டேயின் 'ஆசிரியையின் விருந்தாளி' மற்றும் 'தாமஸ் வர்காசின் தங்கம்' என்ற இரு கதைகளிலுமே ஒரே கதாபாத்திரங்களும் ஒரே ஊரும் வருகின்றன. தொடர் வாசிப்பில், கதாபாத்திரங்களின் குணச்சித்திரிப்பை விவரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. நிறைய விடயங்களைச் சொல்லாமல் விட்டுப் போகும், ஆலண்டேயின் கதைசொல்லல் தன்மை, கதை மாந்தர்களின்  ஆளுமையை இன்னும் மெருகூட்டுவதாக இருக்கிறது. தற்போதைய தமிழ்ச்சிறுகதைகளின் கதை சொல்லல் முறைக்கு, முற்றிலும் எதிரானது இது. தமிழ்ச்சிறுகதைகளின் கதைசொல்லலில், இயன்றவரை நுட்பமான விவரங்களையும் தகவல்களையும் கொடுக்கவேண்டிய ஆவணப்பதிவு நிலைக்கு வந்துள்ளோம். இங்கே சமூக எழுச்சியும் மாற்றங்களும் நேரடியாக மொழியைத் தான் ஊடுருவும். 

என்னைப் பொறுத்தவரை, சிறுகதைகள் பொதுவாகவே, யதார்த்தத்தின் நிலைகளைச் சொல்பவையாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு மனிதன் எடுக்கும் எதிர்பாராத முடிவுகளுக்கான அல்லது அசாதாரணமான முடிவுகளுக்கான மர்மங்கள் அவன் வாழ்வின் எத்தருணத்திலிருந்து பிறக்கின்றன என்பதை அறிவதற்கான பாதையில் விளக்கைக்காட்டிச்செல்லும் முயற்சியாகத்தான் 'சிறுகதை' என்னும் இலக்கிய வடிவம் இயங்குகின்றது. ஆனால், இங்கே பலசமயங்களில் ஒரு செய்தித்தாளில் இடம்பெற வேண்டிய சம்பவம் போல அவை 'இருளின் நிழலை' உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்கதைகளில் நான் மிகவும் மதிக்கும் தொகுப்பு மார்கரெத் யூர்ஸ்னர் என்ற பெண் எழுத்தாளரின் 'கீழைநாட்டுக்கதைகள்'. வெ.ஶ்ரீராம், மொழிபெயர்க்க க்ரியா வெளியிட்டிருந்தது. வடிவமைப்பிலும், கதைத்தேர்விலும், மொழிபெயர்ப்பிலும் பொலிவு நிறைந்த தொகுப்பு. தன் கற்பனைகளால்  என்னை நீண்ட நாட்களுக்கு அலைக்கழித்த தொகுப்பு. மேலைத்தேயக் கதைகளின் அந்நியத்தன்மை இக்கதைகளில் இல்லாமல் இருந்தன.  மேலும்,   பெண்கள், அவர்கள் சராசரி வாழ்வைக் கொண்டவர்களாக  இருந்தாலும், துடி தெய்வங்களாக இருந்தாலும் அறங்களைத் தாம் செயல்படுத்துபவர்களாக இருந்தனர். மார்கரெத் யூர்ஸ்னர், அறம் எனப்பட்டவையும், அறம் என்று பெண்களால் செயல்படுத்தப்படுபவையும் மாய யதார்த்தவெளியிலிருந்து உருவி எடுத்து எழுதிக்கொண்டே இருந்தார். மிகவும் சர்ச்சைக்குள்ளான கதைகளை எழுதியவர்.

அசதாவின் இத்தொகுப்பிலும்,  பெண்களின் இத்தன்மையை எதேச்சையாக, உணர்ந்தேன். ஒரு வேளை, லத்தீன் அமெரிக்க மொழிக்கதைகளுக்கும், அவர்களுக்கு எஞ்சிய வாழ்வின் சிக்கல்களுக்கும் இத்தகைய கதைசொல்லல்    திறன் தேவையாக இருந்திருக்கலாம். எனில்,    அமெரிக்க நாட்டின் கதைசொல்லல்களை,  அதில் நிலவும் வறட்சிகளை இக்கதைகள் வென்றுவிடுவதற்குக் காரணம், இவர்கள் சொற்களில் நிரம்பியிருக்கும் மர்மமான அர்த்தவெளிகளும், மாய யதார்த்தவாதக் கதைசொல்லல் முறையும் பெண்கள் தம் நீதியைச் செயல்படுத்தக் கண்டுணரும் அற நியாயங்களும்!

மேலும், இந்நூலில், நாவலின் பகுதிகளைச் சேர்த்திருக்கவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சிறுகதை வடிவங்களும் நாவல்களும் கற்பனை செய்யும் முறையிலோ வாசிப்பின் வசதியிலோ ஒரு பொழுதும் ஒத்துப்போவதில்லை. தவிர்த்திருக்கலாம். சிறுகதைகளின் துடிப்பு நிலையும் நாவல்களின் மந்தத்தன்மை கதியும் ஒத்துப்போவதில்லை. 

அசதா, தனக்கு முன்மாதிரியானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர் பட்டிலிருந்து நான் சற்று வேறுபடுகிறேன். கவிதையோ புனைவோ தட்டையான மொழிபெயர்ப்பால், நம் கற்பனை எலும்புகள் முறிக்கப்பட்டதை பல வாசிப்பில் நான் உணர்ந்திருக்கிறேன். அதுமட்டுமன்று, யசுனாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லம்' நாவலை ஆங்கிலத்தில் வாசித்த போது எழும்பிய நிலக்காட்சிகளின் ஒளியும் அழகும் என்றென்றும் துலங்குவதாக இன்னும் என்னுள் நிறைந்திருக்கிறன.

அசதா, தன் பலம் குறித்த முன்முடிவுகளை இத்தொகுப்பில் கடந்திருக்கிறார்.  இன்னும் கொஞ்சம் நுட்பமான உணர்வுச்சித்திரங்களுடன் சிறுகதைகளையும் நாவல்களையும் அவர் தமிழ்வெளிக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கலாம்.  அதற்கான தேவை இங்கே நிறைய இருக்கிறது. ஏனெனில், இது  கற்பனை நிலக்காட்சிகளை விழுங்கிக்கொள்ளும் அசாத்திய குணத்தை நமக்குக் கொடுக்கும். அதேசமயம், கற்பனையின் தாராளத்தையும் நமக்கு ஊட்டும். உன்னத இலக்கியங்களை மொழிபெயர்க்கும் போது, அந்த உன்னதங்களும் நம் நினைவின் அடுக்குகளில் வண்டலாய்ச் சென்று சேர்கின்றன. இதெல்லாவற்றையும் விட ஒரு மொழிபெயர்ப்பாளர், நிறைய கலைச்சொற்களையும்  தன்னுணர்வின்றி உருவாக்கிவிடுகிறார். அத்தகைய சில சொற்களை, இத்தொகுப்பில் காண நேர்ந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள், அசதாவிற்கும், நாதன் பதிப்பகம் வழியாக வெளியிட்ட அஜயன் பாலாவிற்கும்!

நன்றிகள்.

(22-03-14 அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

No comments: