Saturday 14 March 2009

நித்திரை யாசிக்கும் கடவுள்



நித்திரை
யாசிக்கும் கடவுளை
யாழிசைக்கும்
குருட்டுப் பிச்சைக்காரனுக்கருகில்
கண்டேன்

ஏந்திய அவன் கைகளில்
கிரணம் மிதக்கும் விடியல்கள்
தீர்மானமேதுமற்ற உச்சிப் பொழுதுகள்
பிரியம் தீராத அந்திகள்
பிரிய மனமில்லாத முன்னிரவுகள்
கூடவே
கடிதே இரவைக் கடக்க உதவும்
உபாயங்கள்

தெய்வீகத்தின் தொலைவில்
கடவுளொரு
வாஞ்சையுண்டாக்கும் குழந்தை
நித்தியத்துவத்தின்
ரேகைகளோடும் அவன்
கண்கள்
அயர்ச்சியூட்டும்
ஞானசாகரங்கள்
தத்தளித்து தத்தளித்து
கணப்பொழுது மூடி
கணப்பொழுது திறக்கும்

ஏராளம் தூஷனைகள்,
நிராகரிக்கப்பட்ட வரங்கள்
பல்லாயிரம் வேண்டுதல்கள்
கொஞ்சமே சில்லரையிருக்கும்
பைக்குள் அவன் துழாவுகிறான்
பதினைந்து மில்லி கிராமை
முன் வந்தவன்* கொண்டு சென்றுவிட்டிருந்தான்
என் அளவை நான்
களவு கொள்கையில்
உலகங்களனைத்தின் இரவும்
தீராத் துக்கத்துடன்
கொட்டுகிறது குருடனின் யாழிலிருந்து
துடித்தடங்கும் கடவுளின்
வலக்கண்ணிலிருந்து
அரவமின்றி
நழுவுகிறேன் நான்.
------------------
(முன் வந்தவன்* - பிரம்மராஜன்)

No comments: