Sunday 1 March 2009

போர் ரசிகன்

அசதா





போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்

என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல

அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்

அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது

யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்

நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்

மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்

சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்

மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்

தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்

குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை

இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்

இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை

(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)


இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....